கதை, கட்டுக் கதை!

வரலாறு கதையாகி, திரைப்படமானால் ……

வேணாட்டின் அரசனாக வரவேண்டியவன் சிறுவன் மார்த்தாண்டன். இவனைக் கொல்ல முயன்றவர்கள் இவனது உறவினராகிய எட்டு வீட்டுப் பிள்ளைகள். இவர்களிடமிருந்து தப்பி ஓடியவனைக் காப்பாற்றியவர்கள் மூன்று இனத்து மக்கள். படைக்குறுப்பு எனப்பட்ட நாயர்கள் ஒரு பலா மரத்தின் உள்ளே ஒளித்து வைத்துக் காத்தனர். வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சாம்பவர் இனப் பெண்கள், தங்களில் ஒருவராய் நிறுத்தியும் காத்தனர். நாடாள்வார் இனத்துப் பாட்டி ஒருவரோ, தனியொருத்தியாய் நின்று, தன் வீட்டு முற்றத்தில் கூட்டி வைத்திருந்த இலைச் சருகினுள்ளே கூடை வைத்து மறைத்து, உயிர் காத்தார். சிறுவன் மார்த்தாண்டன் அரசனாகி, அப்பகுதி மக்களின் ஆதரவையும் பெற்றான். வளர்ந்து, வர்மன் எனப் பட்டம் வாங்கிய நாளில், வரலாறு எழுதத் தொடங்கினார்கள். நடந்ததை எழுதினால் வரலாறு இனிக்காது என்று நினைத்த அறிவாளி ஒருவர், ஓர் அந்தண குலத்து இளைஞன் மார்த்தாண்டனைக் காத்து உயிர் துறந்ததாய், கதை எழுத, அதைத்தான் பின்னர் திரைப்படமாக்கினர் பேரறிவாளர்கள்!

இந்த வேணாட்டுக் கதைபோல், சோழர் வரலாறும் திரிந்தால், திரைப்படம் வந்தால், யாருக்கு என்ன பயன்? உண்மை கண்டறியப்பட வேண்டும்; உண்மை மட்டுமே வரலாறாய் எழுதப்பட வேண்டும். இதற்கு, உண்மையைத் தேடும் மனிதர்கள் பெருக வேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

யோவான் 9:10-11.

அருட்பா: 


தெரியாதொருவர் என்னிடம் வந்து,

தெரியாக் கண்ணைத் திறந்தார்.  

பெரியாரவரிடம் பழகிடும் முன்பு,

பெருமை அற்றவர் பறந்தார்.

சரியாயிதனைப் புரிந்தவர் இன்று,

தற்புகழ் விட்டுச் சிறந்தார்.

அறியாதவரோ விளம்பரம் தந்து,

ஆண்டவர் வழியை மறந்தார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.  

இரப்பதை நிறுத்து!

திருச்செய்தி: யோவான் 9:8-9.

அருட்பாடல்:


இல்லை கண்கள், இதனால் இரந்தான். 

இயேசு தரவே, இரத்தலைத் துறந்தான். 

சொல்லை விரும்பிப் பிறர்க்குரைப்பான்,

சொல்லிற் கெதிராய் எப்படி இரப்பான்? 

பிள்ளை என்பவன் பிறரிடம் இரந்தால்,

பெற்ற தந்தை இல்லான் அன்றோ?

நல்ல திருப்பணி செய்பவன் என்றால்,

நம்பாதிருப்பதும் இரப்பதும் நன்றோ? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

திருச்செய்தியும் அருட் பாடலும்!

யோவான் 9:6-7

அருட்பாடல்: 


உமிழ் நீர் துப்பிச் சேறுண்டாக்கி,

ஒருவன் கண்களில் பூசினார்.  

அமிழ் நீர் குளத்தில் அவனையனுப்பி,

அவைகள் திறக்கப் பேசினார்.

குமிழ் நீர் பிறவிக் கண்கள் திறக்க,

குரிசில் தம் கண் மூடினார். 

இமிழ் நீர் ஒத்த இறவா வாழ்வை,


ஏற்போர் இதனால் கூடினார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பேணுதலே அறிவு!

பேணுதலே  அறிவு!


கோணல் அறிவு கொண்டு நடந்தால்,

கொடுமை தானே விளைந்தெழும்.

நாணல் போன்று மனிதர் கிடந்தால்,

நன்மையும் கூட வளைந்தழும்.

பேணல் என்னும்  அறிவு பிறந்தால்,


பிழை நீங்கப் பொருள் வரும்.

காணல் என்ன? கோணல் அறிவா?


கண் திறக்க,  அருள் பெறும்!

-கெர்சோம் செல்லையா.

திரும்பிப் பார்க்கிறேன்!

திரும்பிப் பார்க்கிறேன்!

தாயின் அன்பு கண்டிருந்தும்,

தந்தை இறையை நோக்காது,

பேயின் வழிமுறை நாடினேன்;

பிணக்குழியிலே, வாடினேன்.

நோயின் கைப்பு கொண்டிருந்தும்,

நொந்து மடிய விரும்பாது,

நேயன் இயேசுவைத் தேடினேன்;

நிமிர்த்தப்படவே, பாடினேன்!

-கெர்சோம் செல்லையா.

வாரும், ஆண்டவரே வாரும்!


அறுபது, எழுபது, எண்பதென்று,     


அப்படி அகவை வளர்கிறதா?

ஒருவரும் அறியா நாளினின்று, 

ஓராண்டிழந்து தளர்கிறதா?

தெருமுனை வந்த நடுவரின்று,

தேடும் காட்சி தெரிகிறதா?

திருடன் நுழைவதுபோல் அன்று,

தெய்வமுமழைப்பார் புரிகிறதா? 


வாரும், ஆண்டவரே வாரும்!


-கெர்சோம் செல்லையா

ஒளி – இருள்!

ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்!

நற்செய்தி: யோவான் 9: 4-5. 

5. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

நல்வழி:


ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்,

உண்டு நமக்கும் இருட்காலம். 

சாய்ந்து ஒதுங்கும் செங்கதிரும்,

சவப்பெட்டிக்குள் அடங்கிவிடும். 

ஆய்ந்து பார்ப்போம்  எதிர் காலம்;

ஆண்டவர் திறக்கும் புதிர் காலம். 

பாய்ந்து பரவும் இறையொளியும்; 

பார்க்க, நாமும்  தெளிவாவோம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

யார் குற்றம்?

நற்செய்தி: யோவான் 9:1-3.

நல்வழி:

பெற்றோர் தவறா, பிள்ளை தவறா?

பேசிப் பொழுதை வீணாக்கி,

மற்றோர் மீது பழியைப் போடும்,

மனித அறிவியல் ஆன்றோரே,

அற்றோர் வாழ்வின் வறுமை போக்க,

அறிவால் உதவி செய்கின்ற,

கற்றோர் வழியை நீவிர் கண்டு,

கடை பிடிப்பின், சான்றோரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 8: 59

வெறி!


நற்செய்தி: யோவான் 8:59. 

நல்வழி:


வெறியால் அழியும் வீண் மனிதர்,

வெறுப்பில் இயேசுவை ஏற்காமல்,

எறிவார் கல்லை, கொல்வதற்கு.

எடுக்கும் இடமோ திருக்கோவில்.

நெறியால் வழியும் விண் மனிதர்,

நேரெதிர் வாக்கு கேட்டாலும்,  

அறிவால் பொறுத்து அகன்றிடுவர்;

அவர் செல்லிடமே அருட்கோவில்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.