முள்ளில் விழுந்த விதைகள்!

​முள்ளில் விழுந்த விதைகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:7
“மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.”
நற்செய்தி மலர்:
முள்ளில் விழுந்த விதையைப் போன்று,
முழுமையின்றி வளர்கின்றோம்.
கள்ளில், வெறியில் கவலை தோய்த்து,
காய் கனியின்றித் தளர்கின்றோம்.
எள்ளின் முடிவு எண்ணெய் ஆகும்;
இதை மறந்து உலர்கின்றோம்.
தள்ளாதவரின் அருளைக் கேட்போம்;
தவறு நீங்கும்; பலன் தருவோம்!
ஆமென்.

 

புல்லும் வளராப் பாறை!

 

நற்செய்தி மாலை: மாற்கு 4:5-6
“வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.”
நற்செய்தி மலர்:
கல்லும், பாறையும் இருப்பதனாலே,
கடவுளின் வாக்கு புகவில்லை.
நெல்லும், பயிரும் வராததனாலே,
நிலமெனக் கூறவும் வகையில்லை.
 
புல்லும் வளராப் பாறை என்னை,
புனிதா, உடைத்து நிலமாக்கும்.
சொல்லும் ஐயா, அடியன் கேட்பேன்;
சோறு படைக்க நலமாக்கும்!
ஆமென்.

வேறுபாடு பாரா இறைவன்!

​வேறுபாடு பாரா இறைவன்!
நற்செய்தி மாலை: மாற்கு 4: 1-4.
“அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: ‘ இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.”
நற்செய்தி மலர்:
வேறுபாடு பாரா இறைவன்
வீதியிலேயும் விதைக்கின்றார்.
நூறு நூறாய் பலன் தரவே,
நொந்த நெஞ்சில் பதைக்கின்றார்.
மாறுபாடு கொண்டோரையும்
மகிழ்விப்பதற்கே உழைக்கின்றார்.
தேறுதல் நாம் வாழ்வில் பெறவே,
தெய்வம் அரசுள் அழைக்கின்றார்!
ஆமென்.

 

இறைவனின் மக்கள்

​நற்செய்தி மாலை: மாற்கு 3: 32-35

“அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ‘ அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ‘ என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ‘ என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ‘ இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
குறைகள் கூறும் குடும்பத்தவர்கள் 
கூட இருந்து கெடுத்திடுவார்கள்.
சிறைபோல் வாழ்வை மாற்றியமைத்துச் 
செய்யும் நன்மையைத் தடுத்திடுவார்கள்.
இறைவன் விருப்பை விரும்புபவர்கள்,
இறைவனின் மக்கள் என்றாவார்கள்.
உறவுகளாகி, நன்மை செய்து,
ஒழுகும் அருளில் நன்றாவார்கள்!
ஆமென்.

உள்ளே வராத உறவுகள்!

உள்ளே வராத உறவுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:31
“அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
உயர்ந்த நிலையில் இருப்பாரென்றால்,
உறவுகள் யாவும் வீட்டுள் வரும்.
ஊழியன் என்று ஊரில் அலைந்தால்,
உடன் பிறப்பும் வெளியேறும்!
அயர்ந்து துவண்டு போக வேண்டாம்;
ஆண்டவர் நிலையைப் பார்த்திடுவோம்.
அதுதான் நமக்கும் என்றறிந்து,
அவரது பணியைத் தொடர்ந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

செயல்களை நம்புவோமே!

பார்ப்பதைப் புரிந்து நம்புவோமே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:28-30.
“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ‘ ‘ இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது ‘ என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.”
நற்செய்தி மலர்:
நற்செய்தி நாங்கள் கொடுக்கையிலே,
நம்ப மறுக்கும் நண்பர்களே,
அற்புதச் செயல்களின் வடிவினிலே,
ஆண்டவர் வாக்கு ஒலிக்கிறதே!
பொற்பரன் ஆவியர் பணிகளிலே,
புரிவோம் இறைவன் அன்பினையே!
பற்பல விளக்கங்கள் தேவையில்லை;
பார்ப்பதைப் புரிந்து நம்புவமே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.