பொய்யா மெய்யா?

பொய்யா? மெய்யா?


உள்ளே இருப்பது துரும்பு. 

ஊரில்  உரைப்பது இரும்பு.


வெள்ளி, பொன்னாய் நினைத்து,

விழாதீர், அலகை அணைத்து. 


எள்ளிலிருப்பது எண்ணெய்;


எடுக்கும் உழைப்பே  உண்மை.

கொள்ளி வைக்கும் பொய்மை.

கொள்வீர் இறையின் மெய்மை!

-கெர்சோம் செல்லையா. 

மதிக்கு நீதி கிடைக்குமா?

மதிக்கு நீதி கிடைக்குமா?

அழுது கொண்டே உயிர் விட்டாள்.

அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.

தொழுது கொண்டே தாய் கேட்டாள்.

தாய்க்கும் நீதி கிடைக்கவில்லை.

எழுதி வைக்கிற விதி என்பார்.

இங்கும் நீதி கிடைக்கவில்லை.

பழுது எங்கே? பகுத்தே பார்.

பாராவிடில், கிடைப்பதில்லை!

–செல்லையா.

யோவான் 8:41-42.

நல்வழி:


அன்பே இறைவன் என்று மொழிவார்;

ஆயினும் அன்பை அவர் பொழியார்.

தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;

தமது செயலால் மகன் பழிப்பார்.

இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,

இயேசுவோடு பிணைந்திடுவார்.

நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,

நலமிலா தீதும் களைந்திடுவார்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

யோவான் 8:39-40.

நல்வழி:


தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,

தவறு என்று சொல்லேன் நான். 

முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,

முழுவதும் இன்று அறுப்பவன் யான். 

மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,

மனிதருக்கென்ன செய்தேன் நான்?

எந்தையிறையே, என்னைத் தந்தேன்;

இயேசு போன்று நடக்கத்தான்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

பெற்றோரிடம் கற்றது என்ன?

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
நற்செய்தி: யோவான்: 8:37-38.

நல்வழி:


பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?

பெரியோர் என்பின் சிந்திப்பீர். 

கற்றோர் என்றால் கொலை செய்வாரா?

கயமை வெறியினை நிந்திப்பீர். 

தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன? 

தூயோன் இயேசுவைச் சந்திப்பீர். 

உற்றார் உறவாய் யாவரும் வருவார்;


ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

அடிமையா? பிள்ளையா?

அடிமையா?  பிள்ளையா?


நற்செய்தி: யோவான் 8: 35-36.   

நல்வழி:


திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன். 

தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.

பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன். 


பழியில்  விழவே கெட்டிருந்தார்.

பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன். 

பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.

விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன். 


விண் மகவாகத் தொட்டிருந்தார்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

அன்பே இறைவன்!

அன்பே இறைவன்!


கொல்லவும், அழிக்கவும் ஒருவன் வந்தால்,

கோனாய், இறையாய்ப்  பாராதீர்.

வெல்லவும், வீழ்த்தவும், சூது புனைந்தால், 

விரும்பும் அறமாய்க் கூறாதீர்.

சொல்லவும் செய்யவும் பழியும் தந்தால்,

சொல்கிற அவன்பின் சேராதீர். 

எல்லையும், முடிவும் இல்லான் ஒருவன்;

இவனன்பு விட்டு மாறாதீர்!


-செல்லையா.

அடிமை!

நல்வழி: யோவான் 8: 33-34.


யாருக்கும் அடிமை இல்லை என்று,

யாவரும் கூறும் பழக்கமுண்டு. 

பேருக்குப் பின்னால் சாதியும் போட்டு,

பெருமை காட்டும் வழக்கமுண்டு. 

நேருக்குந்நேராய் இறை முன் வந்தால்,

நெஞ்சின் அழுக்கு புரியவரும்.

ஊருக்குத் தெரியா அடிமைத்தனங்கள்

ஓடிட, விடுதலை தெரியவரும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

விடுதலை நாள் வாழ்த்து!

பதவி நாளில் எதையும் அள்ளும்

பண்பு கொண்ட பாரதம்,

உதவி நாடும் ஏழை எள்ளும்;

உண்மை தேடு, பார் அதம்.

இதனை இன்று எடாது தள்ளும்,

இந்தியர்கள் வாழ் விதம்,

மடமை என்று தான் கொள்ளும்.

மாபேரன்பு, வாழ் இதம்!

-செல்லையா.

அதம்= தாழ்வு

இதம் = இனிமை

மெய்மை தரும் விடுதலை!

மெய்மை தரும் விடுதலை!


நற்செய்தி: யோவான் 8:30-32.  
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

நல்வழி:


மெய்மை தருகிற விடுதலையொன்றே,

மேன்மையான விடுதலையாம். 

செய்கை, வாக்கில் தூய்மை என்றே,

செயல்படாதோர் அடிமைகளாம்.

எய்தல் வைத்து இலக்கை இன்றே,

எடுத்துக் காட்டி முடிக்கும் நாம்,

பொய்மை விட்டு விடுதல் நன்றே;

புரியார் வாழ்வும் வெடிக்குமாம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.