மரம் வெட்டுகிறேன்!

மரம் வெட்டுகிறேன்!  
காயும் வெயிலிற்கு, காற்றாகும் என நினைத்தேன்.
சாயும் நிலை வந்து, சரிந்து நீ போனாயே.  
பாயும் மின்னிணைப்பு , பற்றிடுமோ எனத் தவித்தேன்;  
ஆயும் நிலையிழந்து,  அகற்ற நான் வெட்டுகிறேன்.  
வாயும் வயிறு என்று, வருந்துகிற மனிதருக்கு,  
நீயும் நிழல் கொடுத்து, நெடுநாட்கள் பணிபுரிந்தாய். 
நாயும் விலங்குகளும், நன்றியில் உனைப் பார்க்கும்.   
தேயும் மனிதரிடம் தேடாதே, நான் கொட்டுகிறேன்.  

-கெர்சோம் செல்லையா.  

மறுதலித்தல்!

இயேசுவை அறியேன் என்பவரே!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:56-60.  

56  அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.

57  அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.

58  சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.

59  ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.

60  அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.  

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை அறியேன் என்றுரைத்த,  

மூத்த அடியார் நிலைவந்தால்,  

எம்முறை எடுப்போம் என்பதனை,  

எண்ணிப் பார்ப்போம் கிறித்தவரே.  

நம்முளிலுறையும் கிறித்துவினை,  

நாமே மறுத்து நலந்துறந்தால், 

செம்முறைகூறும் தீர்ப்பு வரும்;  

சிந்திப்பீர், சீர் பறித்தவரே! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.     

துணிவு!

துணிந்து செல்லுதல்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:54-55.  

54  அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

55  அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

தொடர்ந்து செல்லும் துணிவை அங்கே,  

தூயோன் பேதுருவிடம் கண்டோம்.  

கிடந்தது தேம்பி அழுது நிற்காமல்,  

கிறித்துவைத் தொடரும் நிலை கண்டோம்.   

இடர் நிறைந்த இடங்களிலெல்லாம்,  

எப்படி இயேசுவின் பின் செல்வோம்? 

சுடரொளியாய் வெளிச்சம் தருவார்;  

சுட்டும் வழியில்  நாம் செல்வோம்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

இருளின் மக்கள்!

இருளின் மக்கள்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா  22:52-53.  

52  பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.

53  நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.  

கிறித்துவில் வாழ்வு: 

நெருப்பாம் பகையை நெஞ்சுள் வைத்து,

நெய்போல் பகலில் உருகிடினும்,

கருப்பாம் புகையை மறைக்கத் தவித்து,

கயமையை இரவில் கக்கிடுவார்.  

பொறுப்பாய்ப் பெற்ற பதவியை வைத்து,

புனிதர் போன்று நடித்திடினும்,  

வெறுப்பால் விளைந்த வெறியும் இழுத்து,

வீதியில் போட, நக்கிடுவார்!  

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

தற்காப்பென்று….

தற்காப்பென்று வாளெடுக்காமல்!   

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:48-51.  

48  இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

49  அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.

50  அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.

51  அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.  

கிறித்துவில் வாழ்வு:  

தற்காப்பென்று வாள் எடுத்தவரின்,  

தவற்றைக் கண்டு தடுத்தவரே,  

நற்காப்பென்று நீர் இருக்கையிலே,   

நான் ஏன் ஆயுதம் எடுக்கின்றேன்?  

முற்காலங்கள் காட்டும் தவற்றை,

முரண்டு தொடர்ந்து பிடிக்காமல்,  

பொற்காலந்தரும் அமைதி காண,  

புரிந்து அன்பில் தடுக்கின்றேன்! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

எத்தனை எத்தனை யூதாசோ?

எத்தனை எத்தனை யூதாசோ?  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:47-48.  

47  அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.

48  இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

காட்டிக் கொடுக்க யூதாசன்று,  

கட்டி அணைத்து முத்தமிட்டான்.  

ஈட்டிக் கையுடன் வந்தவருக்கு,  

இயேசைப் பிடிக்க ஒத்துழைத்தான்.

ஏட்டில் பார்க்கும் நம்முள் இன்று,  

எத்தனை எத்தனை யூதாசோ?  

கேட்டின் வழியில் ஆட்டுவித்து,  

கெடுக்க முயலும் பிசாசோ?  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

தூங்காதீர்!

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:45-46.  

45  அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

46  நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

இக்கட்டு சோதனை இன்னல் யாவும்,  

இறைவனின் செயலாய் எண்ணாதீர்.  

மக்கட்கு துன்பம் தந்தை தராரே,   

மனதிலும் தவறு பண்ணாதீர்.  

எக்கட்டு கட்டி, அலகை வந்தாலும்,    

இயேசு இருக்கிறார், ஏங்காதீர்.  

திக்கற்று நிற்போர் வேண்டல் கேட்பார்;   

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!   

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.

வேர்வையும் மாறிற்றே!

வேர்வை குருதியாகும்படியாய்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:43-44.  

43  அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

44  அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

கிறித்துவில் வாழ்வு:  

கூர்மை ஆயுதம் குத்தும்போது,    

குருதி எவ்விதம் வடிந்திடுமோ,  

வேர்வை சிந்தி வேண்டியபோது, 

வேந்தனில் அவ்விதம் படிந்ததுவே.  

நேர்மை போதும் என்கிறபோது,  

நிகழும் துன்பம் வருத்திடுமோ?  

ஆர்வமாக வேண்டுதல் செய்வீர்;  

ஆண்டவர் அருளும் பெருத்திடுமே!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

இறைவிருப்பு!

இறைவிருப்பு! கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:39-42. 39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.40 அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,41 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

கிறித்துவில் வாழ்வு:

வன்முறை போற்றி, வாளெடுத்தால்,

வாழ்வு கிடைக்கும் என்பவனே,

உன்முறை ஒட்டி, ஊர் நடந்தால்,

உயிரோடிருப்பவர் யார் மகனே?

தன்முறை அப்படி அல்ல என்று,

தாழும் இயேசுவைப் பார்ப்பவனே,

நன்முறை என்பது இறை விருப்பாகும்,

நம்பி இயேசுவைச் சேர் மகனே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆயுதம் எடாதீர்! கிறித்துவின் வாக்கு : லூக்கா 22: 35-38. 35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கொடியோன் என்னும் குற்றச்சாட்டை,

கிறித்துவும் நமக்கென எற்றாரே.

அடியார் கைகளில் ஆயுதமிருக்க,

அதனால் அப்பெயர் பெற்றாரே.

விடியா வாழ்வை விரைவுபடுத்த,

வீணாம் வன்முறை நாடாதீர்.

பொடியாய்ப்போனோர் பலபேருண்டு;

புரிந்து ஆயுதம் எடாதீர்!ஆமென்.

-கெர்சோம் செல்லையா.