எதிர்காலம் ஒரு புதிர்காலம்!

எதிர்காலம் ஒரு புதிர்காலம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:31-34.

31  பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.

32  எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.

33  அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

34  இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

கிறித்துவில் வாழ்வு:

எதிர் கொண்டழைக்கும் இறப்பின் பொழுதை,

யார்தான் முன்பே அறிந்திருப்பார்?

புதிர் என்றழைக்கும் இயேசுவின் சாவை, 

புனிதர் அவரோ தெரிந்திருந்தார். 

கதிர் கண்டறியும் பயிரின் முதிர்வை;

கற்றவர் என நாம் காத்திருப்போம்.

அதுவரைவேண்டும் நம்மில் பொறுமை;

அவர்போல் அன்பில் பார்த்திருப்போம்!

ஆமென்.

இழப்பு இல்லை!

இழப்பு இல்லை, இறையே!

கிறித்துவின் வாக்கு:18:28-30.

28  அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

29  அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,

30  இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

அளந்தளிக்கும் இறைமுன் சென்று,

அடியன் தந்தது என்பதுவும்,

இழந்துபோன இன்பம் என்று,

இன்னொரு கணக்கெழுதுவதும்,

வளர்ந்து நிற்கும் பலரிடம் இன்று,

வாடாதிருக்கும் குறையாகும்.

தளர்ந்து போகாதளிப்போம் நன்று.

தருவது யாவும் இறையாகும்!

ஆமென்.

யாரால் கூடும்?

யாரால் முடியும்? 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18 :26-27.

26  அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

27  அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

மண்ணுள் சென்று பொன்னை எடுத்தோம்;

மறைந்திருந்த கனிவளம் கொடுத்தோம்.

விண்ணில் சென்று நிலவில் நடந்தோம்;

வேறுகோளமும் நோக்கிக் கடந்தோம்.

எண்ணம் போன்று யாவும் முடித்தோம்;

எதைக்கேட்டாலும் அதைப் பிடித்தோம்.

ஒன்றை மட்டும் முடியாதென்றோம்;

இயேசு முடித்தார், மீட்படைந்தோம்!

ஆமென்.

ஊசிக் காதும் ஒட்டகமும்!

ஊசிக் காதில் நுழைவதற்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:24-25.

24  அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.

25  ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஓடிக் குதிக்கும்  ஒட்டகம் ஓன்று,

ஊசிக் காதில் நுழைவதற்கு,

பாடிக் கொண்டு வந்தது கண்டு,

பார்த்தோர் வியந்து நின்றாராம்.

தேடிச் சேர்த்த செல்வம் கொண்டு,

தெய்வ அரசைப் பிடிப்பதற்கு,

கோடிக் கணக்கில் மக்கள் உண்டு.

கிறித்தோ முடியாதென்றாராம்!

ஆமென்.

ஒரு மூலையிலிருந்து உலகைப் பார்க்கிறேன். எண்: 1

ஒரு மூலையிலிருந்து உலகைப் பார்க்கிறேன்!எண்:1.


எத்தனை காலமாய் இம்மனித இனம் வாழ்கிறது, என்றும் எனக்குத் தெரியாது. 
அத்தனை கால வரலாறு கற்றாலும் எனக்குப் புரியாது. இத்தனை ஆண்டுகள், என் பெற்றோர், என் ஆசிரியர், நான் கற்ற நூல்கள், இவைகளுக்கு மேலாக என்னை நடத்தும் இறையாவியர் எனக்குச் சொல்லித்தந்த உண்மையை, மொத்தமாய் எழுத இயலாவிட்டாலும், ஒரு மூலையிலிருந்து உலகை, ஒரு கோணத்தில் நான் பார்ப்பதையே, எழுதுகிறேன்.
கிறித்து பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலும், கிறித்து பிறந்தபின் வந்த இருபது நூற்றாண்டுகளிலும், உணர்ந்தோ, உணராமலோ, ஓருண்மையை உலகோர் சொல்வார்கள்.
“இறைவனின் முன்பு யாவரும் ஒன்றே”
இறைவனின் பார்வையில், இந்நாட்டான், அந்நாட்டான் என்றும் இல்லை; இவ்வினத்தான், அவ்வினத்தான் என்றும் இல்லை; ஏழை என்றும் செல்வன் என்றும் இல்லை; ஆண் வேறு,  பெண் வேறு என்றும் இல்லை. யாவரும் ஒன்றே. யாவரும் ஓருதிரத்திலிருந்து வந்தவரே, (அப் 17: 26)
இறைவனும் மனிதரைப் பிரிக்கவில்லை; இறைவனின் படைப்புகளும் பிரிக்கவில்லை. கதிரவன் கண்ணிலும் யாவரும் ஒன்றே. காற்று, மழை, நெருப்பிலும் யாவரும் ஒன்றே.  

இத்தனை ஆண்டுகளாய் எத்தனையோ பேர் இதை எடுத்துச் சொல்லியும், எண்ணற்றச் சட்டங்கள் வலியுறுத்தியும், எல்லா நாட்டு நடுவர் மன்றங்கள் தீர்ப்பு எழுதியும், மனிதர்கள் ஒருவரை உயர்த்தியும், மற்றொருவரைத் தாழ்த்தியுமே பார்க்கிறார்கள். வென்றவர், தோற்றவரைத் துரத்தி விட்டதும் உண்டு; தோற்றவர், வென்றவரால் அடிமைப்பட்டதும் உண்டு. வெளிநாட்டார் வந்து அடிமையாக்கியதும் உண்டு. உள்நாட்டிலே தம் நாட்டாரை அடிமையாக்குவதும் உண்டு. நாட்டுப் பற்று என்ற பெயரால், பிற நாட்டை எதிரியாய்ப் பார்ப்பவரும், தம் நாட்டு மக்களையே இணையாய் எண்ணாமல், தாழ்த்துவதும் உண்டு. அடிமையாய் நடத்துவதும் உண்டு. இறைவனின் பெயரைச் சொல்பவரும் இக்கூட்டத்தில் இருப்பது வருத்தமான ஓன்று.
எண்ணற்றோர் சொல்லி வந்த உண்மையை யாரும் கேளாததினால், இன்று கொரோனா சொல்லித் தருகிறது. அதன் கண்ணில் ஏழை, செல்வன் என்று வேறுபாடும் இல்லை; இந்தியா சீனா என்று வேறு நாடும் இல்லை. எல்லோரும் ஒன்றே. ஆணில்லை, பெண்ணில்லை; அனைவரும் ஒன்றே. 
அழிக்கும் தொற்று நோயே அனைவரையும் ஒன்றாய்ப் பார்க்கும்போது, ஆக்கும் திறமைகொண்ட மானிடா நீ ஏன் பிறரைப் பிரித்துப் பார்க்கிறாய்? உன்னை உயர்ந்தவன் என்றும், முன் நிற்பாரைத் தாழ்ந்தவன் என்றும் உன் இறுமாப்பில் ஏன் உரைக்கிறாய்?

ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும்; 

வண்டியும் ஒருநாள் ஓடம் ஏறும். 

மூடம் ஒழிய, இறையைப் பாரும்;

முன்னிற்பாரை மதிக்கப் பாரும்!


-கெர்சோம் செல்லையா.

விற்போமா?

விற்று விட்டு வா!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:22-23.

22  இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

23  அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

விட்டுவிட்டே வரவில்லை;

விற்றுவிட்டுத் தருவோமா?

பட்டு மெத்தை படுக்கையிலும்,

பணம் உண்டு, விடுவோமா?

தட்டுகின்ற இயேசுயென்றால்,

தங்கத்திலும் தருவோம் நாம்.

வட்டிலிலே உணவு இல்லா 

வறியரெனில் கொடுப்போமா?

ஆமென்.

திருச்சட்டம்!

திருச்சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:20-21.

20  விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

21  அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

அத்து மீறும் மனிதரைத் தடுக்கும்,

ஆண்டவர் வழியே திருச்சட்டம்.

பத்து கட்டளை என்று சுருக்கும் ,

பழைய ஏற்பின் அருட்திட்டம்.

மொத்த கருத்தும்  உள்ளடக்கும்,

முடிவு கேட்டது திருக்கூட்டம்.

இத்தரையில் இயேசு காட்டும்,

இனிய அன்பால் விண் எட்டும்!

ஆமென்.

வங்கியும் வறியரும்!

வங்கியும், வறியரும்!


வங்கியும், வறியரும்!
தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து கற்றவர் தருஞ் சட்டம்,
அனைவரும் ஒன்றெனக் கருதாமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?
-கெர்சோம் செல்லையா.


ஒடிசாவின் நுவாபாரா மாவட்டம், பாராகான் கிராமத்தில் உத்கல் கிராம வங்கி உள்ளது. இங்கு ஜன்தன் வங்கிக் கணக்கில் பெண்களுக்கு மத்திய அரசால் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ பெறுவதற்காக, புஞ்சிமதி தேய் என்ற 60 வயது பெண் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். 100 வயதான தனது தாய் லாபே பாகல் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரது கணக்கில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ தன்னிடம் தர வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் லாபே பாகல் நேரில் வந்தால்தான் பணம் தரமுடியும் என வங்கி மேலாளர் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மறுநாள், படுத்த படுக்கையாக இருந்த 100 வயது தாயை வங்கிக்கு புஞ்சிமதி தேய் கட்டிலுடன் தெருக்களில் இழுத்துச் சென்றார்.
(தமிழ் இந்து)

வங்கியும் வறியரும்!

வங்கிப் பணியாளரும் வறியவரும்!

தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து சென்றிடும் நம் சட்டம்,
அனைவருக்காகவும் இருக்காமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?

-கெர்சோம் செல்லையா.

பணிவுண்டோ?

பிறர் நம்மைப் புகழும்போது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 18-19.

18  அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

19  அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

கிறித்துவில் வாழ்வு:

நன்மையின் உருவாய் வந்திருந்தும்,

நல்லதை மட்டுமே தந்திருந்தும்,

அன்பினால் இயேசுவைப் போற்றுகையில்,

அவரோ தடுக்கிறார் துணிந்து!

என்னென்ன தீமை செய்திருந்தோம்,

எங்கெல்லாமோ ஏய்த்திருந்தோம்;

பண்பிலார் நம்மைப் புகழுகையில்,

பார்த்தோமா உள் குனிந்து?

ஆமென்.