புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்!

குறைவு், கொடுமை, குற்றம்,
கொஞ்சமும் வராதெனச் சொல்லவில்லை.
இறைவன் நம்முள் உள்ளார்;
இவைகள் எதுவும் வெல்வதில்லை.
நிறைவு, அமைதி, இன்பம்,
நெஞ்சம் அடைந்திடத் தடையுமில்லை.
மறைவழி நடக்கச் செய்வார்;
மகிழ்ச்சிக்கு வேறு விடையுமில்லை!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

நலம் வாழ விரும்பும் இறை

​நற்செய்தி மாலை: மாற்கு 6:12-13.

“அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.”

நற்செய்தி மலர்:

எண்ணில் அடங்கா எளியவர் இன்று

எண்ணெய் மருந்தென ஏங்குகிறார்.

கண்ணில் தெரியா மருத்துவர் இறைதான்

கைவிட்டோரைத் தாங்குகிறார்.

பண்ணில் எழுதிய பாடலைப் பாடி,

பணி முடிப்பதாய்க் கொள்ளாதீர்.

விண்ணின் விருப்பாம் நலம் வழங்கல்

வேலையை விலக்கித் தள்ளாதீர்!

ஆமென்.

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்


தன்னைத் தன்னால் மீட்க இயலாத்

தன்மை கொண்டோன் மனிதன்.
இன்னாள் நமக்கும் விடுதலை ஈந்தார்,
இறைமகன் என்னும் புனிதன்.
அன்னார் பிறந்த நாளில் மட்டும்
அன்பு பகிர்ந்தால் மனிதன்.
என்னாளாயினும் இரக்கஞ் செய்வான்,
இயேசுவின் தொண்டன் புனிதன்!
ஆமென்.
இனிய நண்பர்கள் யாவருக்கும்,
இயேசுவின் பிறந்த நாள் வாழ்த்துதலை,
என் வீட்டாருடன் இணைந்து பகிர்கிறேன்.
இவண்,
கெர்சோம் செல்லையா.

காலின் தூசு சான்றுரைக்கும்!

காலின் தூசும் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:10-11.
“மேலும் அவர், ‘ நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ‘ என்று அவர்களுக்குக் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நூலினைப் பார்த்து நிற்போரே,
நுண்மதி பெற்றிடக் கற்பீரே.
பாலினையொத்தத் திருவாக்கைப்
பருகி, மகிழ்வு சேர்ப்பீரே.
ஆலினைப் போன்று வளர்ந்துவரும்
ஆண்டவர் அரசைப் புறக்கணிப்பின்,
காலினில் ஒட்டிய தூசெழும்பிக்
கடுஞ்சான்றுரைக்கத் தோற்பீரே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

கல்வி வள்ளல்

அன்று அவர்கள் உடைமை விற்றார்;
அதனால் ஏழையர் கல்வி பெற்றார்.
இன்று நம்மவர் கல்வி விற்றார்;
இதனால் எங்கும் மடமையுற்றார்!
-கெர்சோம்செல்லையா.

R Narumpu Nathan's photo.

தெய்வமும் நாமும்.

தெய்வமும் நாமும்.

மெய்மை தெய்வம் தந்தையே;
மீட்பைத் தருவது மைந்தனே.
பொய்மை களைவது ஆவியே;
புகழும் நானோ பாவியே!
தெய்வம் என்பவர் ஒருவரே,
தெளிவுப் பார்வை தருவரே.
ஐயம் அகன்று நாளுமே,
அன்பில் வாழ்ந்து ஆளுமே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,

எழுபதுகளிலிருந்து சென்னையின் வெயிலையும் மழையையும் பார்த்து, இப்பட்டணத்தில் குடிபுகுந்தவன் நான். இப்போது வந்த மழையும் இறைவனின் கொடையே என்றும் எண்ணுபவன் நான். இழந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்தான். இருப்பினும், இறைவனின் கொடையை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவராய் நாம் செயலற்று இருக்கிறபடியால்தான் இவ்விளைவுகள் என்று நம்புகிறேன். எப்படியிருப்பினும், இது பழைய வரலாறாய் இருக்கட்டும். இந்தப் பெரு மழையும் நமக்கு பட்டறிவைப் புகட்டுகிறது. இனியாவது இறைவனின் கொடையாம் இயற்கையையும், அதன் ஈவுகளையும் இறைவனின் நேர்மையில் சீராய்ப் பயன்படுத்த முயல்வோம். வெள்ளப் பாதைகளைச் சீராக்குவோம். வெளியேறும் நீரைக் குளங்களில் சேர்ப்போம். வேண்டுமளவு குளங்களை ஆழப்படுத்துவோம். விரும்பிப் பார்க்கும் வகையில் அருகே பூங்காக்கள் அமைப்போம். அரசு நிலங்களை அரசுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வைப்போம். அவைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தவறான கொள்கையை விட்டுவிடுவோம். இழந்து நிற்போரின் வலியை உணர்வோம். இயன்றவரை நாமும் உதவியாய் இருப்போம். உதவும் உள்ளங்களை, நெஞ்சார வாழ்த்துவோம். எதுவும் செய்யாவிடின், திட்டுவதை நிறுத்துவோம்! நன்றி, நல்வாழ்த்துகள்.

-கெர்சோம் செல்லையா.

மழை வழி அடைத்தோம்…

மழை வழி அடைத்ததால்…

வாழைப் பழத்தை உரித்துத் தின்று,
வழியில் தோலைப் போடுகின்றோம்.
நாளை அல்ல, இன்றே விழுவோம்,
என்பதை மறந்து ஓடுகின்றோம்.
ஏழை செல்வன் எனப் பார்க்காது,
இறங்கும் மழைவழி அடைத்துவிட்டோம்.
வேளை இதுவே, திருத்திக் கொள்வோம்.
விண்ணின் நேர்வழி நடந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

எளிமையின் ஊழியம்


​எளிமையின் ஊழியம்…

நற்செய்தி மாலை: மாற்கு 6:7-9.
“அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ‘ பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”
நற்செய்தி மலர்:
எளிமையின் ஊழியம் 
இறையின் விருப்பம்;
ஏற்றம் தருவார், 
எண்ணம் திருப்பும்.
தெளிவைப் பெற்றிட 
இயேசுவைப் பாரும்;
தெரிய மறுத்தால், 
தீமைதான் சேரும்!
ஆமென்.