விண்ணின் தூதர்போல்….
நற்செய்தி மாலை: மாற்கு 12:24-27.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? ‘ ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ‘ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
விண்ணின் தூதர் எப்படி இருப்பார்?
விளக்கம் சொல்ல அறியேன் நான்.
கண்ணில் காணும் படம்போல் எழுத,
கற்பனைகூடத் தெரியேன் யான்.
எண்ணம் கடந்த இந்த அறிவை ,
இறைப்பற்றாலே புரிவேன் நான்.
மண்ணைவிட்டுப் பிரியும்போது,
மாற்றம் கண்டு அறிவேன் யான்!
ஆமென்.
Month: November 2016
உயிர்த்தெழுதல்!
உயிர்த்தெழுதல்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:18-23.
“உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, ‘ போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே! ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
இறந்தபின் என்ன நடக்கும் என்று,
எவர்க்கும் தெளிவாய்த் தெரியாது.
இதனால் கேள்விகள் எழுவது இயல்பு;
இருப்பினும் பகடி கூடாது.
பிறப்பின் நோக்கம் தெரிந்தவர் இன்று,
பேசும் உயிர்ப்பின் பொருள் ஏது?
பேரருளாலே இறையுள் இணையும்,
பேறேயன்றி வேறேது?
ஆமென்.
அரசை மதித்துக் கொடுப்போம்!
அரசை மதித்துக் கொடுப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:13-17.
“பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
எடுக்கும் எண்ணம் பெருத்த நாட்டில்,
இறைவன் வாக்கை எடு என்பேன்.
கொடுக்கும் பண்பு குறையும் வீட்டில்,
குவியும் பொருளைக் கெடு என்பேன்.
அடுக்கும் காசில் ஆயம் கேட்கும்,
அரசை மதித்துக் கொடு என்பேன்.
படுக்கும் முன்பே யாவையுமெடுத்து,
படைத்தவர் காலடி விடு என்பேன்.
ஆமென்.
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…
நற்செய்தி மாலை: மாற்கு 12:9-12.
“திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். ‘ கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று ‘ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா? ‘ என்று அவர் கேட்டார். தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.”
நற்செய்தி மலர்:
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்,
புரியா உயர்வைத் தாண்டிடுவார்.
பொறுமையோடு இறையைப் பார்த்தால்
புவியில் அவருடன் ஆண்டிடுவார்.
மறைக்கப்பட்ட வரலாற்றைத்தான்,
மனிதர் இனிமேல் தோண்டிடுவார்.
அறையப்பட்டும் உயிர்த்தார் ஒருவர்;
அவர்போல் எழும்ப வேண்டுடிவார்!
ஆமென்.
மகனை அனுப்பிய தந்தை.
மகனை அனுப்பிய தந்தை.
நற்செய்தி மாலை: மாற்கு 12:6-8.
“இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘ இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும் ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
தந்தை மகனை அனுப்பி வைத்தார்;
தவற்றைத் திருத்தும் வழிவகுத்தார்.
நிந்தை செய்தோர் இதை மறந்தார்;
நேர்மைவிட்டு குருசிலறைந்தார்.
மைந்தனேசோ உயிர்த்தெழுந்தார்;
மன்னிப்பருளி, மீட்பும் தந்தார்.
இந்த நிகழ்வை முன்னறிவித்தார்.
யாவரும் மீள இன்றும் உரைத்தார்!
ஆமென்.
திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:4-5.
“மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.”
நற்செய்தி மலர்;
அடிப்பார், உதைப்பார், அகந்தையில் நடப்பார்;
அடுத்தவர் உரிமையை மறுத்திடுவார்.
இடிப்பார், இகழ்வார், இடுக்கண் கொடுப்பார்;
எழை எளியரை வெறுத்திடுவார்.
வெடிப்பார், தகர்ப்பார், வெட்டியும் கொல்வார்,
வீணர் நாட்டில் பெருகுகிறார்.
துடிப்பார், துவள்வார், துயரில் அமிழ்வார்,
திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
ஆமென்.
மொத்தமும் தமது சொத்தென்று!
மொத்தமும் தமது சொத்தென்று!
நற்செய்தி மாலை: மாற்கு 12:1-3.
“இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: ‘ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
அத்தனையும் தம் திறனென்று,
அறியாமையைத் தெரிகின்றார்.
மொத்தமும் தமது சொத்தென்று,
முதலுடன் பயனையும் உரிகின்றார்.
குத்தகை பெற்றவர் என மறந்து,
கொள்ளை, கொலையும் புரிகின்றார்.
இத்தனை செய்பவர் இந்நாளில்,
யாவுமிழந்து திரிகின்றார்!
ஆமென்.
வெந்நீரை வடித்துழைத்த காசு!
வெந்நீரை வடித்துழைத்த காசு!
ஐநூறு ஆயிரங்கள் வேண்டாமே;
ஐம்பதும் நூறுந்தான் வேண்டுமே!
எந்நாட்டில் இப்படி யார் சொல்வார்?
இந்தியர்தான் முதன்முதலில் சொல்கின்றார்!
செந்நாய்கள் கடிப்பதுபோல் சேர்ப்போமே,
சொன்னவர்கள் இன்றெங்கே? பார்ப்போமே!
வெந்நீரை வடித்துழைத்த காசு மட்டும்
வேகாது, என்றறிந்து, ஈர்ப்போமே!
-கெர்சோம் செல்லையா.
நலம் எது என்று நாம் கேட்போம்?
நலம் எது என்று நாம் கேட்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.
“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
ஏன், எதற்கு, எப்படி என்று,
எத்தனை கேள்வி நாம் கேட்டோம்?
வான் மைந்தன் நம்முன் இன்று,
வந்து கேட்டால் என் சொல்வோம்?
நான் என்னும் அகந்தை விட்டு,
நலமெது என்று நாம் கேட்போம்.
தேன் இனிமை வாக்கு தொட்டு,
தூயவர் திட்டம் தெரிந்திடுவோம்.
ஆமென்.
ஆணையுரிமை யார் தந்தார்?
ஆணையுரிமை யார் தந்தார்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:27-28.
“அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
ஆணையுரிமை யார் தந்தாரென,
அறவழி அடைக்கும் அறிஞரே,
சாணை பிடிக்காக் கத்தி அதுவே;
சண்டையிடும் நீர் வறியரே.
கோணலை நேர்மை என்றேயுரைத்துக்
கொடுமை செய்யும் தலைவரே,
வீணராய் இப்படி நடப்பவர் முடிவில்,
வெம்பி நொந்து அலைவரே!
ஆமென்.