குருசைப் பரிசாய்த் தந்திடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:9-13.
“அதற்குப் பிலாத்து, ‘ யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? ‘ என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ‘ அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று கேட்டான். அவர்கள், ‘ அவனைச் சிலுவையில் அறையும் ‘ என்று மீண்டும் கத்தினார்கள்.”
நற்செய்தி மலர்:
வெறி நிறைந்த மக்கள் பெருக,
வீணர் பதவிக்கு வந்திடுவார்.
நெறி இழந்த தலைவர் ஆள,
நேர்மையாளர் நொந்திடுவார்.
குறி மறந்த கூட்டம் உயர,
குருசைப் பரிசாய்த் தந்திடுவார்.
பொறி விழுந்த புழு போலான,
புனிதரை இறைவன் ஏந்திடுவார்!
ஆமென்.
Month: April 2017
கொன்று, திருடி, ஏமாற்றி,
கொன்று, திருடி, ஏமாற்றி,
கொடுமை செய்வோர் வாழ்கின்றார்.
இன்று இவரைப் பாராட்டி
ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார்.
அன்று இறைவன் உரைத்திருந்தும்,
அவற்றை மறப்போர் வீழ்கின்றார்.
நன்று எதுவென உணர்பவர்தான்,
நன்மை வழியில் மீள்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
பின்குறிப்பு:
யோபின் நூல் 34:16-33 -ஐ வாசித்து,
இறைவாக்கு நிறைவேறக் காத்திருப்போம்.
யாரைத் தேர்வு செய்வார்?
யாரைத் தேர்வு செய்வார்?
நற்செய்தி மாலை: மாற்கு 15:6-8.
“விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.”
நற்செய்தி மலர்:
நல்லார் கெட்டார் என்றிருவர்
நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால்,
எல்லா வாக்கும் பெற்றவராய்,
ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்!
இல்லா நேர்மை இவ்வுலகில்,
இறைமகன் இயேசுவே நின்றாலும்,
பொல்லார் வாக்கு தரமாட்டார்;
புனிதரைத்தான் கொன்றிடுவார்!
ஆமென்.
இறைவழி கண்டேன்!
இறைவழி கண்டேன்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:3-5
“தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ‘ நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே! ‘ என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.”
நற்செய்தி மலர்:
எத்தனையோப் பழி உம்மேல் இட்டும்,
எதற்கும் பதிலுரை கூறாதிருந்தீர்;
இத்தனைப் பாடுகள் உம்மேல் விட்டும்,
ஏன் எதெற்கென்று கேளாதிருந்தீர்.
பித்தர்களாயினும் பேசாதிராரே!
பேருக்காவது அசைந்திடுவாரே.
புத்தம் புதிய அறவழி கண்டேன்;
புனிதா உம்வழி இறைவழி என்பேன்!
ஆமென்.
அறத்தின் பேரரசர்!
அறத்தின் பேரரசர்!
நற்செய்தி மாலை: மாற்கு: 15:1-2.
“பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்க அவர், ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று பதில் கூறினார்.”
நற்செய்தி மலர்:
அடிமைக் கோலம் எடுத்தவராயினும்,
அவர்தான் அறத்தின் பேரரசர்.
கொடியோர் வெறியில் கட்டியிழுத்தும்,
குறையேயில்லா நேரரசர்.
விடியுங்காலம் நீளும் எனினும்,
விரைவில் வருவார் விண்ணரசர்.
தடியும் வாளும் எடுப்பவர் விழுவார்;
தரணியை ஆள்வார் என்னரசர்!
ஆமென்
சேவல் கூவும் முன்னே!
சேவல் கூவும் முன்னே!
நற்செய்தி மாலை: மாற்கு 14:72.
“உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.”
நற்செய்தி மலர்:
இருமுறை சேவல் கூவும் முன்னே,
இயேசுவைப் பேதுரு மறுதலித்தார்.
ஒருமுறை முன்பே உரைத்தது எண்ணி,
உடைந்தவர் தமையே அருவருத்தார்.
திருமறைச் செய்தி பலமுறை கேட்டும்,
தெய்வத்தின் மக்களோ இதை மறந்தார்.
மறுமுறை கேட்கும் பேற்றைப் பெற்றார்,
மனந்திரும்பின் அவர் சிறந்தார்!
ஆமென்.
வாழ்வானாலும் தாழ்வானாலும்…
வாழ்வானாலும் தாழ்வானாலும்…
நற்செய்தி மாலை: மாலை: மாற்கு 14:69-71.
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ‘ இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ‘ என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ‘ உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ‘ என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ‘ நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.”
நற்செய்தி மலர்:
வாழ்வானாலும் சாவானாலும்,
வந்தோம் உம்முடன் என்பவரும்,
தாழ்வானாலும் உயர்வானாலும்,
தந்தோம் தம்முடல் என்பவரும்,
வீழ்வார் உலகில் வீழக்கண்டோம்;
விண்ணரசே எமை நோக்கிடுமே.
பாழாய் நாங்கள் மாளாதிருக்க,
பாவப் பழியும் நீக்கிடுமே!
ஆமென்.
கறுப்பாடு!
கறுப்பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ‘ என்றார்.68 அவரோ, ‘நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை’ என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று).”
நற்செய்தி மலர்:
மறுத்துரைத்த பேதுரு போன்று,
மாபெரும் தவற்றைச் செய்கின்றோம்;
வெறுத்து இயேசு கைவிடவில்லை;
விரும்பி ஏற்க, உய்கின்றோம்.
பொறுத்து நாமும் அமைதிகொண்டு,
பொய்யருக்காக வேண்டிடுவோம்;
கறுத்துபோன ஆடுகள் மீளும்;
கடவுளின் அருஞ்செயல் கண்டிடுவோம்!
ஆமென்.
தறிகெட்ட ஆடுகள்!
தறிகெட்ட ஆடுகள்!
வெறியும் வெறுப்பும் பதுக்கி வைத்து,
வெளியே அன்பைக் கூறுகிறோம்.
நெறியும் பண்பும் ஒதுக்கி வைத்து,
நேர்மை உருபோல் மாறுகிறோம்.
குறி தவறாகும் வினையே செய்து,
குற்றங்களில்தான் தேறுகிறோம்.
தறிகெட்ட ஆடுகள், தவற்றில் விழுந்தோம்;
தாங்கும் இறையே, ஏறுகிறோம்!
-கெர்சோம் செல்லையா.
அவர் அடிக்கப்பட்டபோது!
அவர் அடிக்கப்பட்டபோது!
நற்செய்தி மாலை: மாற்கு: 14:65.
“பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ‘ இறைவாக்கினனே, யார் எனச் சொல் ‘ என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.”
நற்செய்தி மலர்:
வந்தவர் போனவர் அடிக்கின்றார்;
வசைச் சொல்லாலும் இடிக்கின்றார்.
தந்தவர் யார் எனத் தெரியவில்லை;
தலையை மூடிப் பிடிக்கின்றார்.
இந்தியக் கிறித்தவர் துடிக்கின்றார்.
எதிர்க்கும் சொல்லையும் வெடிக்கின்றார்.
மைந்தனின் வழியில் வருபவரோ,
மன்னிப்பருளி முடிக்கின்றார்!
ஆமென்.