தளர்ந்து எலியா தயங்கும் நாளில்,

தந்தார் இறை ஓர் இளைஞனை.

வளர்ந்து எலிசா வரம் பெற்றோங்கி,

வழி நடத்தினார் இரு கிளைதனை.

மலர்ந்து மயக்கும் பணவேட்கையினை,

மாற்றுபவராய் அவர் நின்றார்.

உலர்ந்து போவாய், ஊனின் விருப்பே;

உணர்ந்த மனிதரே வென்றார்!

(1 அரசர்கள் 19:9 – 2அரசர்கள்13)

May be an illustration

எலியா என்கிற இறைவாக்கினரை,

எண்ணிப் பார்க்கும் வேளையில்,

வலிதாய் இருக்கும் அவரது பற்றை,

வழங்க இறை வேண்டுவோம்.

பலியாக்குகிற வெறியை மட்டும்,

பற்றிட வேண்டாம் என்கையில்,

தெளிவாய் தெய்வம் பேசுவதாயும்,

திருமறை ஆழம் தோண்டுவோம்!

(1 அரசர்கள் 17:1 – 2 அரசர்கள் 2:14).

May be an image of fire and text

மறம் தழைக்க, மாண்புகள் இழக்க,

மனிதம் மறைந்த அந்நாளில்,

அறம் செழிக்க, அரசரை இழுக்க,

அங்கு வந்தார் இறைவாக்கினார்.

திறம் தெரியா மக்களை ஈர்த்து,

தெய்வ வழியில் திருப்புதற்கு,

நிறம் மாறா இறைவாக்குரைத்து,

நேர்மையையே நோக்கினார்!

(1&2 அரசர்கள் )

May be an image of text

பின்னாள் வந்த அரசரில் இருந்த

பிரிவினை எண்ணம் வலுக்கவே,

ஒன்றாய் இருந்த இசரயெல் நாடும்,

உடைந்து இரண்டாய் ஆனதே.

இன்னாள் இதனைக் கண்டு திருந்த,

எண்ணா நெஞ்சம் உலுக்கவே,

சொன்னேன் இன்று பாட்டு வழியாய்;

சொல்லும் சூடாய்ப் போனதே!

(2 குறிப்பேடு 10-13)

May be an image of 2 people, map and text

தொழுவதற்காகக் கட்டிய கோவில்,

துயருடன் ஒருநாள் அழிந்தாலும்,

எழுதி வழங்கிய சாலமொன் நூற்கள்

இன்றும் இருந்து இறை பாடும்.

பழுதிலா வாழ்க்கை வாழ விரும்பி,

பண்புகள் வளர்க்கும் யாவரும்,

விழுதுகள் விட்டு, விண்ணில் நிலைக்க,

வீணானவற்றைக் கை விடும்!

(2 குறிப்பேடு 2-8)

May be an image of text

ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்,

உண்மை இறையின் வாக்காகும்.

பருவம் வருமுன் பாலியல் இச்சையில்,

படுப்பது இன்றைய நோக்காகும்.

அருவருப்பாக ஆயிரம் வைப்பது

அரசர்கள் செய்கிற தவறாகும்.

புரிய மறுத்த சாலமொன் வீழ்ச்சியில்,

புனிதம் கற்பார் எவராகும்?

(1 அரசர்கள் 11)

May be an image of 5 people

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,

உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.

செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,

சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.

அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;

அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.

எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;

இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!

(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)

May be an image of 1 person and text

எது எது வேண்டும் என்றிறை கேட்டால்,

எதை நாம் இன்று கேட்கிறோம்?

புது விதமான ஆவல்கள் தொட்டால்,

புழுதிக் காற்றில் முடிக்கிறோம்.

பொது அறிவென்று சாலமொன் கேட்டு,

புது நூல் யாத்ததும் காண்கிறோம்.

இது போல் இன்று இறையடி தொட்டு,

ஏங்கின் அறிவு பூணுவோம்!

(1 அரசர்கள் 3:5-15)

May be an image of 1 person and text

படுத்த படுக்கையில் தாவிது விழவே,

பார்க்கும் மக்கள் நலம் பேண,

அடுத்த அரசனைத் தேர்வு செய்தார்;

அவன்தான் அறிஞன் சாலொமன்.

தொடுத்த போர்களை முடித்து எழவே,

தொடர்ந்து அமைதி இவன் காண,

எடுத்த பேறாய் மக்கள் மகிழ்ந்தார்;

இன்று ஏங்குதே நிலமண்!

(1 அரசர்கள் 1&2)

May be an illustration of text

ஆடு மேய்த்த தாவிதை அழைத்து,

அரசு தந்ததும் இறையருளே.

நாடு காத்திட சந்ததி தெரிந்து,

நடத்தி வந்ததும் இறையருளே.

வீடு பேறு வழங்கும் வழிக்கு,

விண் தேர்வதும் இறையருளே.

தேடு நண்பா, இறையைத் தேடு;

தெய்வ அறிவும் இறையருளே!

(2 சாமுவேல் 7).

May be an image of text