இயேசுவாகுவோம்!

இயேசுவாக மாறுவோம்!


உண்மை இறைவன் நமைப் படைத்தாரே;

உடல் பொருள் ஆவியில் அறிவடைத்தாரே.


அன்பாய் வாழும் வழி கொடுத்தாரே;

அறம் விட்டவரோ, பழி எடுத்தாரே.


மண்ணில் மகனாய், இறை பிறந்தாரே;


மன்னிப்பென்னும் அருள் திறந்தாரே.


என்னே அன்பென இதை நினைப்பாரே,

இயேசுவாக, இறை இணைப்பாரே!

ஆமென்.


கெர்சோம் செல்லையா.
24, செயலகக் குடியிருப்பு, இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,சென்னை-600099.

வேளையறிந்து உணவூட்டும்…

வேளையறிந்து கொடுப்பவர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:29-30.

29ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
30இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
கிறித்துவில் வாழ்வு:
வேளையறிந்து ஊணுடையளிக்கும்,
விண்ணின் அரசைப் போற்றுகிறேன்.
நாளைக்கென்று நமக்குச் சேர்க்கும்,
நல்லிறையைத்தான் ஏற்றுகிறேன்.
ஆளைப் பார்த்துக் கையேந்தாமல்,
அவர் புகழ்மாலை சாற்றுகிறேன்.
தாளைப் பிடித்துத் தாழ்ந்துபோகும்
தரணிமீள உரை ஆற்றுகிறேன்!
ஆமென்.

காட்டுப் பூக்களின் அழகு!

காட்டுப் பூக்களின் அழகு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:27-28.

27காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

28இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
கிறித்துவில் வாழ்வு:

காட்டு மலர்கள் மலரும் காட்சி,

காணக் கிடைக்கா நல்லின்பம்.

கேட்டு நீவிர் எழுத முயன்றால்,

கிட்ட வராது சொல்லின்பம்.

போட்டி போட்ட அரசருடையே,

போதாதென்பது இறையெண்ணம்.

ஆட்டுவிக்கும் அவரே இன்பம்;

அதுதான் நமக்கு நிறைவெண்ணம்!

ஆமென்.

வாளும், வன்முறையும்!


வாளும், வன்முறை ஆயுதமும்,

வாழ்வின் வழிமுறையேயென்றால்,

தாழும் அவரது உள்மதிப்பு,

தலைவன் என்றே இருந்தாலும்.

ஆளும் அரசரின் ஆயுதமாய்,

அன்பும் அறமும் இல்லையென்றால்,

கேளும், அவரது கதைமுடிவு,


கிணறாய் வளமே சுரந்தாலும்.


-கெர்சோம் செல்லையா.

சேய்கள் நாமே!

சேய்கள் நாமே!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:25-26.

25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?

கிறித்துவில் வாழ்வு:
உண்ணக் கவலை, உடுக்கக் கவலை,
உறங்கும் முன்னே ஒடுங்காக் கவலை.
எண்ணும் நமக்குக் கிடைத்தது என்ன?
எங்கு பார்ப்பினும் நோய்கள்தாமே!
விண்ணின் அருளால் வாழும் நமக்கு,
வேண்டாம் இந்த நோய்தரும் கவலை.
கண்ணை மூடி, கடவுளைக் கேட்போம்;
காக்கும் அவர்க்குச் சேய்கள் நாமே!
ஆமென்.

காகத்தைக் கவனிப்போம்!

காகங்களைக் கவனியுங்கள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:24.

2காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கூடிழந்து, குஞ்சிழந்து,
குரலினிமை தானிழந்து,
பாடுகின்ற காக்கைக்கு,
பசிக்குணவு தருமிறையே,
தேடுகின்ற அடியனுக்கு,
தேவையெது, என்றறிந்து,
கோடிகள் குவிக்குமன்பு,
குறையாது, பெருநிறைவே!
ஆமென்.

என்னினம், என் மதம்!

என்னினம், என் மதம்!

என்னினம், என் மதம், என்ற வெறியும்,

உன்னினம், உன் மதம், என்ற வெறுப்பும்,
வன்னினமாகி, பின்னினம் அழிப்பின்,

இன்னிலம் எப்படி நன்னிலமாகும்?

என்னினம் எனாமல், நம்மினமாக்கும்.


உன் மதமென்பதைச் சம்மதமாக்கும்.

வன்னினம் மறையும், நன்னினமாகும்;

இன்னிலம் இனிமேல் நன்னிலமாகும்!


-கெர்சோம் செல்லையா.

அன்பு, அன்பு!

அன்பு! அன்பு!

இந்து சமண பௌத்தர் இன்று,
இசுலாம் கிறித்தவ ரோடிணைந்து,
வந்த பிணக்கம் யாவும் மறந்து,
வாழ வேண்டும் இந்தியர் என்று!
முந்து நாளில் செய்தத் தவறு,
முதலில் போக, இறையை நம்பு.
சொந்தமில்லை வேறு நமக்கு;
சொல்லுகின்றார், அன்பு, அன்பு!

-கெர்சோம் செல்லையா.

கவலை விடுவீர்!

கவலைப்படாதீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:22-23.

22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.

கிறித்துவில் வாழ்வு:
உயிரைக் கொடுத்தவர் உணவு கொடாரா?
உடலைக் கொடுத்தபின் உடை மூடாரா?
பயிரைக் கொடுத்தவர் நீரை விடாரா?
பரிசாய்க் கொடுத்து நிறைத்திடாரா?

வயிறை நிரப்பும் கவலை விடாரே,
வருந்தல் நிறுத்தும், வலி கொடாரே!
மயிர்கள் எண்ணித் தரையில் இடாரே,
மன்னித்தும்மைக் காத்திட்டாரே!
ஆமென்.

தமிழ்நாடு நாள்!

தமிழ் நாடு நாள்!

இன்று தமிழ் நாடு நாள்.

01-11-1956 -ஆம் நாளில் குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணையுமுன், அம்மக்கள்மீது அன்றைய திரு-கொச்சி அரசு ஏவிய கொடுமைகளை நினைவுகூரும் நாள்.

ஆங்கிலேயர் நாளில்கூட அடக்குமுறைகள் அவர்கள்மீது அவ்வளவாயில்லை. ஆனால், பட்டம் தாணுபிள்ளையின் அரசோ மீண்டும் அவர்களை அடிமைப் படுத்தியது; அடக்கியே வைத்திருந்தது.

தமிழர், தமிழ் பயில இயலாது; தமிழருக்கு, அரசுப் பணியிலும் இடம் கிடையாது. கல்வியில் சிறந்திருந்தும், கயமைச் சாதியின் பெயரால் புறக்கணிப்பு. காசு ஒதுக்கீடுகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும், கன்னியாகுமரி முற்றிலும் ஒதுக்கி வைப்பு.

கேட்டவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். போராடியவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
“கண்டால் அறியாம்” என்ற கூற்றின்படி, கண்டபடிச் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால், நொண்டியாக்கப் பட்டும் அவர்கள் விழுந்துவிடாமல், மீண்டும் ‘குஞ்சன்நாடர்களாய்’ எழும்பினார்கள்.

கையில் விலங்கிடப்பட்டும், கால் முதல் தலை வரை அடிக்கப்பட்டும், குழித்துறை ஆற்றில் குதித்துத் தப்பி, ‘மணிகளாய்த்’ திரும்பி வந்து, வீர முழக்கமிட்டார்கள்.

உயிரிழந்தவர் பலர், உடமையிழந்தவர் பலர், ஓடி ஒளித்தவர் பலர், ஒப்பனையிட்டு மறைந்திருந்தவரும் உண்டு சிலர்.

இப்படியெல்லாம் இவர்கள் இழந்தபின்னரே, இறுதியாக, இன்பத் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டார்கள்.

அந்த நாள்தான் 01-11-1956.

இங்கு வந்தபின் இவர்கள் மேன்மேலும் வளர்ந்தார்களா?

வளர்ந்தார்கள்; ஆனால் வளர்த்தியது அரசு இல்லை! கல்வியும், கடின உழைப்பும், எல்லாவற்றிற்கு மேலாக, கடவுளின் அருளுமே அவர்களை உயர்த்தியதேயன்றி, அரசுகள் துரும்பையுந் தூக்கவில்லை!

செய்யமாட்டேன் என்றுகூறித் தமிழ் நாட்டில் சேர்த்த காமராசர், முன்பு கல்லடிப் பட்டிருந்தும், அவர்களுக்குச் சிலவற்றைச் செய்தார். அவர்களும், அவரை நன்றியோடு பார்த்தார்கள்.

ஆனால், அவருக்குப்பின் வந்தவர்களுக்கு, நெல்லை எல்லையாயிற்று; குமரியோ தொல்லையாயிற்று!

ஆட்சிக்கு வந்துவிட்டால் அனைவரும் அசுரரோ?

தெரியாமல் கேட்கும்,
-கெர்சோம் செல்லையா.