அன்பால் அனைத்தும் கட்டுகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:1-2.
” பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்; ஆயினும், ‘ விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும் ‘ என்று நினைத்தனர்.”
நற்செய்தி மலர்:
கொலைகள் செய்யத் தூண்டுபவர்,
கோட்டை மதில்கள் கட்டுகிறார்.
வலைகள் வைத்துத் தோண்டுபவர்,
வாழ்வில் உயர்வை எட்டுகிறார்.
நிலைகள் நீக்க வேண்டுபவர்,
நேர்மைக் கண்ணீர் கொட்டுகிறார்.
அலைகள் அடக்கும் ஆண்டவரோ,
அன்பால் அனைத்தும் கட்டுகிறார்!
ஆமென்.
Month: January 2017
எப்படிச் சொல்வேன் எந்தன் எண்ணம்?
எப்படிச் சொல்வேன் எந்தன் எண்ணம்?
நற்செய்தி மாலை: மாற்கு 13:34-37.
“நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.”
நற்செய்தி மலர்:
இரவா, பகலா என்பதும் தெரியேன்;
எந்த நாளில் என்றும் அறியேன்.
என்றானாலும் வருவீர் திண்ணம்;
எப்படிச் சொல்வேன் எந்தன் எண்ணம்?
உறவாய்ப் பழகும் மக்கள் கூட்டம்,
உம்மை மறந்து போடுதே ஆட்டம்.
உணர்வு கொடுக்க உம்மால் முடியும்.
ஒருவரும் கெடாமல் மீட்கப் பிடியும்!
ஆமென்.
குடியரசு நாள் வாழ்த்து!
குடியரசு நாள் வாழ்த்து!
அடியரசு நடத்தி ஐந்து நாள் ஆகவில்லை;
குடியரசு கொண்டாடுகிறோம்.
தடியெடுப்போர் ஆளத் தகுதி இனியில்லை;
முடிவெடுத்துக் கொண்டாடிடுவோம்!
-கெர்சோம் செல்லையா!
என்று வருவீர்?
என்று வருவீர்?
நற்செய்தி மாலை: மாற்கு 13:32-33.
“ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது. கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.”
நற்செய்தி மலர்:
என்று வருவீர், எப்படி எடுப்பீர்,
என்று அறியா வாழ்வு இது.
இன்று இதனை நினைக்கும் எனக்கு,
இரங்கித் தருவீர் உம் தூது.
சென்று போன நாட்களின் தவற்றைச்
செப்பனிடுவீர், புதியது;
அன்று சொன்ன வாக்கின்படியே,
அடியனும் விழிப்பேன், நல்லது!
ஆமென்.
அழியாதது!
அழியாதது!
நற்செய்தி மாலை: மாற்கு 13:30-31.
“இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”
நற்செய்தி மலர்:
புல்லழியும், பூ அழியும்,
புழு தொடங்கி உயிரழியும்.
பல்வகையின் பொருள் அழியும்,
படைப்பெல்லாமே அழியும்.
இல்லையில்லை அழிவில்லை
என்று சொல்ல எதுவுமுண்டோ?
தொல்லுலகில் ஒன்றுண்டு;
தூயவரின் சொல்லேயாம்!
ஆமென்.
மாட்டு வாசல் திறக்கக் கேட்கும்…
மாட்டு வாசல் திறக்கக் கேட்கும்…
நற்செய்தி மாலை: மாற்கு 13:28-29.
‘ அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.”
நற்செய்தி மலர்:
மாட்டு வாசல் திறக்க வேண்டி
மாநிலம் எழும்பும் இந்நாளில்,
வீட்டு வாசற் படியில் நிற்கும்,
விண்ணக நடுவரைப் பார்ப்போர் யார்?
தீட்டு வேண்டும் என்று விரும்பித்
திருந்த மறுப்பார் அந்நாளில்,
கேட்டு விட்ட, கிறித்து வாக்கால்
கெடுவார், இதனை ஏற்போர் யார்?
ஆமென்.
ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!
ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!
பஞ்சம் நமக்கு வந்த நாளில்,
பல ஊர் சென்று குடி புகுந்தோம்.
வஞ்சம் இன்றி அவரும் சேர்த்தார்;
வாழும் நிலையில் நாம் உயர்ந்தோம்.
தஞ்சம் தந்த அவரை இன்று,
தாழ்ந்தோர் என்று மிதிக்கின்றோம்.
அஞ்சாதவர்கள் நிமிர்ந்தெழுந்தால்,
அறியோம் நம்நிலை, மதித்திடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
நீண்ட காலப் பணியை முடித்து!
நீண்ட காலப் பணியை முடித்து!
நற்செய்தி மாலை:மாற்கு 13:24-27.
“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.”
நற்செய்தி மலர்:
நீண்ட காலப் பணியை முடித்து,
நிலவும் வானும் ஓய்வெடுக்கும்.
ஆண்ட காலம் போதும் என்று
ஆதவன்கூட பாய் படுக்கும்.
வேண்டலேற்கும் இறையின் அரசோ,
விண்ணில் இறங்கிக் காட்சி தரும்.
மாண்டவர்கள் மீண்டும் எழும்ப,
மறுமையறிவு புரிய வரும்!
ஆமென்.
உம்மிடம் எம்மிடம் தேடுகிறார்!
உம்மிடம் எம்மிடம் தேடுகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:21-23.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர். நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.”
நற்செய்தி மலர்:
யாரையும் நம்பா நிலைமைக்கு,
இன்றைய ஊழியர் தள்ளிவிட்டார்.
எதெற்கெடுத்தாலும் காசென்று,
எங்கும் வாங்கி அள்ளிவிட்டார்.
ஊரை ஏய்க்கும் ‘மெசியாக்கள்’,
ஒளியின் தூதராய் ஆடுகின்றார்
உலகோர் கிறித்து எங்கென்று,
உம்மிடம் எம்மிடம் தேடுகின்றார்!
ஆமென்.
துன்ப நாளைக் குறைப்பவரே!
துன்ப நாளைக் குறைப்பவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 13:17-20.
“அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்! இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள். ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார் ″ .
நற்செய்தி மலர்:
துடிக்கும் அடியவர் துயரம் கண்டு,
துன்ப நாளைக் குறைப்பவரே,
குடிக்கும் கவலை குவளை உண்டு;
கொடுத்தேன் அதையும் குறைப்பீரே.
பிடிக்கும் உமது அன்பு கொண்டு,
பேதையரையும் நிறைப்பவரே,
முடிக்கும்படியாய்த் தந்த தொண்டு,
முழுமையாக நிறைப்பீரே!
ஆமென்.