தடுக்கும் கல்!

இடற வைக்கும் கல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:1-2.

1   பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

2   அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.

கிறித்துவில் வாழ்வு:

ஒடுக்கப்பட்ட ஏழைகளை 

ஒன்றிற்குதவார் என்றெண்ணி,

தடுக்கல் இட்டுப் பின்தள்ளும்,

தவற்றின் உருவாம் மானிடரே,

எடுக்கும் அந்தப் பாறாங்கல்,

எந்திரக் கல்லாய் உம் கழுத்தில்,

அடுக்கப்பட்டு கடல் தள்ளும்,

அழிவை உணர்ந்தால், ஏனிடரே?

ஆமென்.

காணாத தொற்று!

கொரோனா தரும் அறிவு!


காணாத தொற்றுநோய் ஓன்று,

கடவுளைக் காட்டுதே இன்று.

பேணாத அவ்வறிவில் நின்று,

பேசவும் வைக்குதே இன்று.

கோணாத உதவிகள் நன்று;

கொரோனா சொல்லுதே இன்று.

நாணாது வழங்குவீர் என்று,

நாடும் வேண்டுதே இன்று!


-கெர்சோம் செல்லையா.

திருமறையுண்டு!

திருமறையுண்டு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16: 29-31.

29  ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

30  அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

31  அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கையில் திருமறை நூலுண்டு.

கருத்தோ எதிர்மறை வேறுண்டு.

பையில் நிறையப் பொருளுண்டு.

பகிரும் அன்பு எங்குண்டு?

மையில் கருமை நிறமுண்டு.

மனமும் அதுபோல் தானுண்டு.

செய்யுள் வழியும் கேட்பதுண்டு.

செயல்படுவோர்கள் எங்குண்டு?

ஆமென்.

எல்லோருக்கும் எல்லாமுமாக!

எல்லோருக்கும் எல்லாமுமாக மாறுவது!

‘இறையன்பு இல்லம்’ என்னும் எங்கள் முதியோர் இல்லத்தில் எல்லா இனத்தவர்-சமயத்தினர், எல்லா மாநிலத்தவர் -மொழியாளர் என்று எல்லாப் பண்பாட்டு இந்தியத் தாய்மார்களும், ஒரே குடும்பமாக எங்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இது எங்கள் யாவருக்கும் மகிழ்வையும், மன நிறைவையும் தருவதால், இப்பணியை இறைவனின் திருப்பணி எனக்கண்டு, இறைவனைப் போற்றுகிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவில் உறங்கச் செல்லும் வேளை, எண்பத்திரண்டு வயதுத் தாயார் ஒருவருக்கு, நெஞ்சுவலி வரவே, எங்கள் வீட்டருகிலுள்ள மருத்துவமனைக் கதவுகளைத் தட்டினோம். முதலுதவி மருந்துகள் கிடைத்தாலும், முழுமையான மருத்துவத்தை அரசு மருத்துவக் கல்லூரிதான் தந்தது. உயிர்காக்கும் துடிப்பை மருத்துவப் பணியாளர், தாதியர், மருத்துவர், சிறப்பு மருத்துவர் என்று யாவரிலும் அந்நள்ளிரவில் கண்டு, உண்மையிலே நானும் என் மகனும் மகிழ்ந்து வாழ்த்தினோம். இருப்பினும், இறைவனின் திருத்திட்டம் வேறாக இருந்ததால், அமைதியாக அந்த அக்காள் தன்னுயிரை அவரிடமே ஒப்படைக்க, அதிகாலையில் உடலோடும், உள்ளில் வலியோடும் இல்லம் வந்தோம்.

அந்த அக்காளின் உறவினர் இருவரைத் தவிர வேறு எவரும் சென்னையில் இல்லை. வெளியூர்-வெளிநாட்டு உறவினர்களுக்கும் ஊரடங்கால் சென்னைக்கு வரயியலவில்லை. இந்து சமய உயர்பிரிவைச் சேர்ந்த இந்த அக்காளின் இறுதிச் சடங்கை எப்படிச் செய்வது? யார் எரிவூட்டுவது? வெளியூரின் உறவுகள் எங்கள் இறையன்பு இல்லத்தை நம்பி அப்பொறுப்பினை எங்களிடமே ஒப்படைத்தார்கள். இந்து சமயச் சடங்கைச் செய்ய உறவினர் ஒருவர் வந்தார். என் மகனும், ஓட்டுநர் ஒருவரும் உடலைச் சுமக்க, எரியூட்டும் பணி எனக்குக் கிடைத்தது.

கிறித்தவ ஊழியனாய்ப் பலமுறை இடுகாட்டில் இறைவேண்டல் ஏறெடுத்து மண் போட்டதுண்டு. குடியிருப்பு நண்பனாய்ப் பலமுறைச் சுடுகாட்டின் நிகழ்வுகளில் முன் நின்றதுமுண்டு. இப்போது, இந்து சமய அம்மையாருக்கு எரியூட்டும் பேறும், எனக்குக் கிடைத்தது. இது இறைவனின் திருவருளே. இதற்கு ஒப்புதல் கொடுத்தது அக்குடும்பத்தாரின் பெருந்தன்மையே.

கொரோனா கொடுமையான தீமைகள் தருவதாயினும், இத் தீமைகளை நன்மையாக்கும் இறைவன், இந்நாட்களில் நமக்குத் தருகிற சமய நல்லிணக்கத்திற்காக, இறைவனைப் போற்றுவோம். இறைவனின் மக்களாய் யாவருக்கும் நன்மையே செய்வோம். எந்த விளம்பரமும் இன்றி, இரவு பகல் பாராது உதவுகின்ற மருத்துவத் துறையினர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர் ஆகியோரின் கைம்மாறு கருதாக் கடமையைப் போற்றுவோம்.

”எல்லோருக்கும் எல்லாமுமாகுவோம்!”

-கெர்சோம் செல்லையா.

இறந்தவன் எழுந்து வந்தாலும் ஏற்பதில்லை!

இறந்தவன் எழுந்து வந்தாலும் ஏற்பதில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:27-28.

27  அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

28  நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

செத்தவன் சொன்னதும் கேட்டதில்லை.

செத்துப் பிழைப்பினும் பார்ப்பதில்லை.

சித்து விளையாட்டிவை தேவையில்லை.

சிந்திக்கவே எனக்கு நேரமில்லை.

இத்தரை மாந்தரில் பெரும்பாலோர்,

இப்படி நினைப்பதில் வியப்புமில்லை.

மொத்தமும் போகும் நாள்வரையில்,

மீட்பரைச் சொல்வதில் பயனுமில்லை!

ஆமென்.

இயேசுவே பதில்!

பதிலும் வரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:25-26.

25  அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

26  அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

பிறப்பு வரும், பின்னால் வாழ்க்கை வரும்.

பிணிகள் வரும்,  பிழைக்கும் நலமும் வரும்.

சிறப்பு வரும், சிறுமையைத் தாண்டின் வரும்.

சிரிப்பும் வரும், சிந்தும் நீரினிலே வரும்.

இறப்பு வரும், இதன்பின் என்ன வரும்?

இறவா நிலைவாழ்வு எங்கு வரும்?

பறப்பு வரும், பற்பல வினாவும் வரும்.

பதிலும் வரும், பரிசு ஏசுவிலே வரும்!

ஆமென்.

ஒடுக்கப்பட்டோர்!

ஒதுக்கப்பட்டோர் உயர்வார்!
கிறித்துவுவின் வாக்கு: லூக்கா 16:22-24.
22  பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.23  பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.24  அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
கிறித்துவில் வாழ்வு:
ஒதுக்கப்பட்ட ஏழையர் அன்று,
உருகிய காட்சி கண்டோரே,
செதுக்கப்பட்ட சிலைபோல் நின்று,
சொல்கிற சாட்சி கேட்பீரே.
பதுக்கப்பட்ட செல்வம் என்று,
பரிவின் இரக்கம் கொண்டோரே,
பிதுக்கப்பட்ட எளியர் இன்று,
பேசும் விடுதலை ஏற்பீரே!
ஆமென்.

கண்ணில் காணும் ஏழை!

கண்ணில் காணும் ஏழை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:19-21.

19  ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

20  லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

21  அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் ஆளும் இறைதான் இன்று,

வீட்டின் முன்னே கிடக்கின்றார்.

கண்ணில் கண்டும் ஏழையர் என்று,

கனியார் கல்போல் கடக்கின்றார்.

மண்ணில் இறையைத் தேடிக் கொண்டு,

மதியார் மலையிலும் நடக்கின்றார்.

உண்ணும் வீட்டில் கொடாரைக் கண்டு,

ஒளியும் இறையோ அடக்கின்றார்! 

ஆமென்.

அறிவா? அறிவீனமா?

இந்தியனாக எழுதுகிறேன்!

இதை வாசிக்கவே பலர் மறுக்கலாம்; சிலர் வெறுக்கவும் செய்யலாம். எனினும் உங்கள் எண்ணத்தை, எழுத்தை நான் மதித்து வாசிப்பதுபோல இதையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்தியன் ஒருவன், இயேசு கிறித்துவே தனக்கு எல்லாம் என்று நம்பிக்கொண்டு, அவரது அன்பையே வாழும் வழி முறையாகக் கொண்டு, இந்தியாவில் வாழ முடிவெடுத்தால், இந்தியாவிற்கு அதனால் கேடுகள் வருமா? பிற இந்தியருக்கு அவனால் பாடுகள் வருமா?

வரும் என்று எண்ணி, பலர் எழுதுவதும், எச்சரிப்பதும், இடர்கள் கொடுப்பதும், சிலருக்கு ‘அறிவு’ என்றும், ‘ஆன்மிகம்’ என்றும், இன்னும் ஒருபடி மேலேறி, ‘இந்திய நாட்டுப் பற்று’ என்றும் தெரிகிறதே!, இது அறிவா? இல்லை, அறியாமையா?

கடவுளிடம் அன்புகொள்; காணும் மனிதரிடமும் (அயலாரிடமும்) அன்புகொள்! இதுதானே இயேசுவின் திருவாக்கு.

துன்புறுத்தும் நிலையிலும் வன்முறையை நாடாது, அன்புகொள்வதுதானே அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறை.

இதைச் சொல்ல உரிமையும், இதன்படி வாழ உரிமையும் கொடுத்த நாடு, என் இந்திய நாடு. இந் நாட்டைப் போற்றுவதும், இந்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதும் இந்நாட்டில் பிறந்த எனது கடமையல்லவா?

நாடு என்பது, பலருக்கு மண்ணாகத் தெரியலாம். அதை விரும்பி, நாட்டுப் பற்று என்று சொல்லலாம். மண்ணும், நிலமும், மாபெரும் மலையும், தண்ணீர் ஆறும், தருகிற வளமும், மட்டுமா நாடு? அவற்றை மட்டும் போற்றுவதுவா நாட்டுப் பற்று?

நாட்டின் மண்ணை விரும்புவோரே, நாட்டில் வாழும் அல்லது வாடும் மனிதரைப் பாருங்கள். அவர்கள் உங்கள் இனம், மொழி, இடம், சாராதவர்களாய் இருக்கலாம்; அல்லது சமயம், பண்பாடு, கொள்கைகளைச் சேராதவர்களாய் இருக்கலாம். அல்லது செல்வங்கள், சொத்துக்கள் பாராதவர்களாய் இருக்கலாம். ஆயினும் அவர்களும் இந்தியர்களே. அவர்களை வெறுத்து, அவர்கள் வாழும் மண்ணை மட்டும் விரும்பினால் அது நாட்டுப் பற்றாகுமா?

இவர்கள் மீது அன்புகொள் என்கிற கிறித்துவின் வாக்கு, எப்படி இந்திய நாட்டுப் பற்றிற்கு எதிராகும்? இதைப் பின்பற்றும் கிறித்தவர் எப்படி இந்திய எதிரியாக இருக்க முடியும்? அன்பும், நன்மையையுமே அறவழியாகும். அவற்றை எதிர்ப்பது அறியாமையேயன்றி வேறு எதுவாகும்?

இந்த அறியாமையை அறிவு என்றும், இதுவே நாட்டுப் பற்று என்றும் தொடர்ந்து பேசுகிற, எழுதுகிற, ‘அறிஞர்’ பெருமக்களே, உங்கள் எண்ணங்களில் அன்பு பிறவாதவரை, உங்கள் பேச்சு வீண், உங்கள் எழுத்து வீண், உங்கள் செயல்கள் வீண்; உங்கள் வாழ்க்கையுமே வீண்.

வீணாய் வாழ்ந்து வீணாய்ப் போவதைவிட, அறிவை நாடுங்கள்; அன்பில் பிறக்கும் இறையறிவைத் தேடுங்கள்.

அன்பிலா வாழ்வில் அறிவுமில்லை!

அயலார் வெறுத்தல் நெறியுமில்லை.

வன்முறை வாழ்க்கை வழியுமில்லை;

வாழ உதவுவோம், பழியுமில்லை!

-கெர்சோம் செல்லையா.

ஒருவனுக்கு ஒருத்தி!

ஒருவனுக்கு ஒருத்தி!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:18

18  தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.  

கிறித்துவில் வாழ்வு:

ஒருவனுகொருத்தி, ஒருத்திக்கொருவன்,

உலகில் எவர்க்கும் போதுமய்யா.

அருள்கிற இறைக்கு அடங்கா மனிதன்,

அவனது வீட்டினில் தீது அய்யா.

திருத்தம் வேண்டும், திறன்போல் வாழ்வேன்,

தெரிவித்தால், அது வாது அய்யா.

வருத்தம் வராத வாழ்வில் மகிழ்வீர்;

வழிமுறை இறையின் தூது அய்யா!

ஆமென்.