ஓய்வு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:54-56.

கிறித்துவில் வாழ்வு: 
அச்சம் கொண்ட அடியார் அன்று, 
ஆண்டவர் ஏசுவைக் கைவிடவே,  
துச்சம் என்று துணிந்தோர் வந்து,  
தூயனை அடக்கம் செய்திட்டார். 
மிச்சம் இருந்த பெண்கள் நின்று, 
மீதிப் பணிகள் செய்திடவே, 
பச்சைச் செடிகள் படர்ந்த காவில், 
பரனும் ஓய்வு எய்திட்டார்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

நம்மில் நீதியில்லையே!

சாதியும் நீதியும்!

நீதியுள்ள நாட்டினிலே,

சாதியில்லையே.

சாதியுள்ள வீட்டினிலே,

நீதியில்லையே.

ஆதிநாளில் மக்களிலே,

சாதியில்லையே.

பாதியிலே மாக்களாக,

நீதியில்லையே- நம்மில்

நீதியில்லையே.

வீதிகளில் இணைகையிலே,

சாதியில்லையே.

மோதி நாம் பிணங்கையிலே,

நீதியில்லையே.

சேதி கூறும் தெய்வத்திலே,

சாதியில்லையே.

மீதி வைத்துச் செய்கையிலே,

நீதி இல்லையே- நம்மில்

நீதியில்லையே!

நீதியுள்ள நாட்டினிலே,

சாதியில்லையே.

சாதியுள்ள வீட்டினிலே,

நீதியில்லையே.

-கெர்சோம் செல்லையா.

நல்லடக்கம்!

நல்லடக்கம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா  23:52-53.

கிறித்துவில் வாழ்வு:  
நல்லறை வீடு இல்லாரும்,  
நாட்டின் எதிரி என்பாரும்,  
கொல்லப்படுகிற வேளைகளில்,  
கொளுத்தப்படுவதைக் காண்போரே,
செல்லப் பிள்ளை இயேசுவிற்குச்  
சேர ஓரிடம் இலாதிருந்தும்,  
கல்லறை ஓன்று கன்மலையில், 
கட்டியிருந்ததைக் காண்பீரே. 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

தாழ்மை தரும் மேன்மை!

தாழ்மை தந்த மேன்மை!  
அரிமத்தியா யோசேப்பு!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:50-51.  

பிறக்கும்போதும் இருந்தது தாழ்மை;  
பிறருக்குதவும் பொழுதும் தாழ்மை. 
இறக்கும்போதும் இருந்தது தாழ்மை. 
இயேசு வாழ்வே தாழ்மை தாழ்மை.  
சிறக்கும்படியாய் வந்தது மேன்மை.  
சீர்மிகு அறிஞர் தந்தார் மேன்மை.  
உரக்கச் சொல்வோம் தாழ்வில் மேன்மை.  
உண்மைக்கென்றும் மேன்மை, மேன்மை! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

அண்டிக் கொள்வோம்!

அண்டிக் கொள்வோம் சிலுவையிலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 48-49.  

கிறித்துவில் வாழ்வு:  
தொண்டர் துடித்தார் தொலைவினிலே. 
 துயரைத் தாங்கும் வலுவிலையே. 
பெண்டிர் வடித்தார் ஏங்கலிலே. 
பெருகும் கண்ணீர் தேங்கலையே.   
கண்டோர் அடித்தார் மார்பினிலே.  
காணா மக்கள் சார்பினிலே.         
அண்டிக் கொள்வீர் சிலுவையிலே. 

அருள் மாமழை பொழிகையிலே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

அறைந்தவன் சான்று!

அறைந்தவன் சான்று!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:47. 

கிறித்துவில் வாழ்வு:  
கட்டளை பெற்று அறைந்தவரும்,  
கண்ணால் கண்டு சான்றுரைத்தார். 
கொட்டிய இயேசுவின் திருஉதிரம், 
குற்றம் அற்றது என்றுரைத்தார்.  
பட்டியல் இன்றும் நீளுவதாய் 
பலரும் செய்தி எடுத்துரைப்பார்.   
வெட்டிடும் கைகள் உணர்வடைய,    
விரைந்து ஆவியர் தடுத்துரைப்பார்!
-ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

எப்படி முடிக்கிறோம்?

கிறித்துவில் வாழ்வு:  


மைந்தனின் பணியை மாண்புடன் முடித்தார்.  

மறைநூல் வாக்காய் வாழ்ந்து படித்தார்.      

தந்தவர் கைகளில் தன்னுயிர் கொடுத்தார்;  

தரணியை மீட்கவே அதையும் விடுத்தார். 


நிந்தைச் சிலுவையும் மாற்றி அமைத்தார்.  


நேர்ந்தத் தீங்கிலும் வெற்றி சமைத்தார்.  


இந்த இயேசுவின் வழிவந்து நடப்பார்,  


இனியமீட்புடன் இப்புவி கடப்பார். 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.  

மறையும் கதிரோன்!

மறையும் கதிரோன்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:44-45.  

கிறித்துவில் வாழ்வு:  
இருள் போக்கும் திட்டம் என்று, 
இறைமகனார் தொங்கக் கண்டு,  
பொருள் கூறும்படியாய்ச் சென்று,   
போனதே கதிரோன் அன்று. 
திரள் துன்பம் தொடர்ந்து இன்று,   
தீங்கைத்தான் தருதல் கண்டு, 
மருள் உற்ற வேளை போன்று,  
மறைவது நமக்கும் நன்று!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.