இவைகள் வலைகள்!

இவைகள் வலைகள்!


கொன்று வந்த கொலைஞனையும்,

கொல்லத் தூண்டிய தலைவனையும்,

இன்று மக்கள் போற்றுவதால்,


ஏற்படுவதுதான் படுகொலைகள்!

என்று என்றும் நாம் அறியோம்;

எப்படி என்றும் நாம் தெரியோம்,

ஓன்று மட்டும் உறுதியென்போம்;

உணராருக்கு, இவை வலைகள்!


-கெர்சோம் செல்லையா.

நன்மை செய்வோம்!


நான்குபேர்க்கு நன்மை செய்யார்,

நல்லவராக இராரே.

ஏங்குவோர்க்கு இரங்காதிருப்பார்,

இயேசு பெயரைப் பெறாரே.

வாங்குவதில்தான் உலகோர் சிறப்பார்;

வழங்க மகிழ்ந்து வராரே.

தாங்குமிறையை நம்பி வாழ்வோம்;

தலை குனிவெதுவும் தராரே!


-கெர்சோம் செல்லையா.

இறைப்பற்று என்றால் என்ன?

இறைப்பற்று என்றால் என்ன?


இறைப் பற்றென்று இயம்புவதெல்லாம்,

இன்னொரு உயிரை எடுப்பதுவா?

விறைப்பாய் நின்று  வீரம் பேசி,

வெறியால், நன்மை தடுப்பதுவா?

குறைத்துப் பார்த்து, கொடுமை செய்து,

குற்றம் புரிந்ததை எண்வோமா?

முறைப்படி வாழ, முடிவை எடுத்து,

முதற்கண் அன்பைப் பண்வோமா? 


-கெர்சோம் செல்லையா.

வெட்கப்படாதீர்!

வெட்கப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9.26-27.

26என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றைப் பெற்றவர் மறைப்பதினால்,
பலபேர் நன்மை இழக்கின்றார்.
பெற்றக் கிறித்தவர் கொடுப்பதினால்,
பெரிதாய் வளர்ந்து தழைக்கின்றார்.
சற்றும் வெட்கம் கொள்ளாமல்,
சான்றாய் வாழ வருபவர் யார்?
முற்றுப் பெறாத இறையரசில்,
முடியா வாழ்வு பெறுபவரார்!
ஆமென். 


இலங்கைக்கு இரங்கும் இறைவா!

இலங்கைக்கு இரங்கும் இறைவா!
கொல்லும் வெறியை அறமெனச் சொல்லும்,கொள்கை உள்ளோர் பெருத்திட்டார்.வெல்லுவதொன்றே இலக்காய் எண்ணி,விண்ணின் அறத்தை மறுத்திட்டார்.சொல்லும் செயலும் வேறாய்ப் போனச்சொற்பொழிவாளரே ஆளுகின்றார்.இல்லா அறத்தை இவர்களில் தேட,எளியோர் இலங்கையில் மாளுகின்றார்!
-கெர்சோம் செல்லையா.

தன்னைக் கெடுத்து…..

தன்னைக் கெடுத்து யாவும் பெறுதல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:25.

25மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

கிறித்துவில் வாழ்வு:
ஊரை மடக்கி, உலையில் போட்டும்,
உண்ண ஒருசிறு பருக்கையில்லை.
பாரை அளந்து, பக்கம் வைத்தும்,
பாங்காய் அமரவும் இருக்கையில்லை.
வேரை வெட்டி, மரத்தினை நாட்டும்,
வீண் செயலெல்லாம் வளர்ச்சியில்லை. 
தேரை உண்ணும் பாறைக்குள்ளும்,
தெய்வம் தரவே, தளர்ச்சியில்லை! 
ஆமென்.

நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்!

நெஞ்சில் எனையே அவிக்கின்றேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:23-24.
3 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

கிறித்துவில் வாழ்வு:
எனக்கென வந்தச் சிலுவையினை,
எடுத்து நன்மை செய்தேனா?
தனக்கென வாழ்ந்துத் தேய்ந்ததினால்,
தடுமாறும் நான் உய்வேனா?
மனக் கணக்கிட்டுப் பார்க்கின்றேன்;
மன்னிப்பிற்காய்த் தவிக்கின்றேன்.
நினைக்கவே வெட்கம் மூடுவதால்,
நெஞ்சில் எனையே அவிக்கின்றேன்!
ஆமென்.

நாளை நடப்பதை நாமறியோம்!

நாளை நடப்பதை நாமறியோம்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:22.

22மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாமறியோம்.
நடப்பதுங்கூடத் தானறியோம்.
வேளை வருவதை அறிந்தவராய்,
விண்ணின் கோனோ முன்னுரைத்தார்.
வாளை நம்பி விழுபவரோ,
வலிமையாகப் படை சேர்ப்பார்.
ஆளை மீட்க வந்தவரோ,
அப்படியின்றி, அன்புரைத்தார்!
ஆமென்.

அடங்கியது அடியனின் ஐயம்!

அடங்கிவிட்டது அடியனின் ஐயம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:20-21.

20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
கடந்து உள்ளில் வாழும் கடவுள்,
காணும்படியாய் வருவாரா?
நடந்து வந்து நம்முன் தோன்றி,
நன்மையை நமக்குத் தருவாரா?
கிடந்தது புரண்டு கேள்விகள் கேட்டேன்;
கிறித்து நெஞ்சில் வருமுன்னர்.
அடங்கிவிட்டது அடியனின் ஐயம்;
ஆண்டவர் இயேசுவே என் மன்னர்!
ஆமென்.

யாரென நினைக்கிறார்?

என்னை யார் என்று நினைக்கிறார்கள்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:18-19.

18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அவரவர் கோணத்தில் பார்த்துவிட்டு,
அதுவே சரியெனப் பேசுகின்றோம்.
சுவரென யானையைத் தடவிவிட்டுச்
சொல்லால் வண்ணம் பூசுகின்றோம். 
தவறுகள் எவையென அறிவதற்குத்
தந்தையின் பார்வை பெற்றிடுவோம்.
எவரது கருத்து உண்மையென்று,
இறைவாக்கால் நாம் கற்றிடுவோம்!
ஆமென்.