எட்டு பேர் வெளியே வந்து இப்புவி எங்கும் பெருக, தொட்டு அவரை வாழ்த்தினார், தொடக்கமிலா இறைவன். கட்டு மூன்றாய் அவர் பிரிந்து, காணும் இடம் பரவ, விட்டு விடா உடன்படி செய்தார், விண்ணுலகின் அரசன்! (தொடக்க நூல் 8:14-9:19)
மும்முறை சென்ற புறாவைப்போல, முடிவுடன் வாழ முயன்றால், நம்மிடம் எப்படி தீதும் ஓட்டும்? நமது எண்ணம் திருந்தட்டும். செம்மறை காட்டும் நல்வழி நடக்க, சிந்தையைத் திருப்பி விட்டால், எம்மனமாயினும் நன்மையே கொட்டும்; இறையின் அமைதி பெருகட்டும்! (தொடக்க நூல் 8:8-12).
காக்கப்பட்ட நோவா அன்று, காக்கையை அனுப்பும் போது, நோக்கும் இடம் எங்கும் சென்று, நுழைத்தது பிணத் தீது. ஏக்கம் கொண்ட நாமும் இன்று, எடுக்கும் உட்பொருள் ஏது? தாக்கும் தீது வேண்டாம் என்று, தடுக்கட்டும் இறைத் தூது! (தொடக்க நூல்:8: 6-7).
பற்றின் தொடக்கம் எதுவென பார்த்தேன்; படைத்தவர் பண்பெனும் அருளிலாம். முற்றும் இதனை ஆய்ந்தும் பார்த்தேன்; முதலும் முடிவும் அதுவேயாம். பெற்றுக் கொண்டவர் பண்பையும் பார்த்தேன்; பெருந்தீதென்னும் பொருளிலாம். சற்றும் தகுதி அற்றதும் பார்த்தேன். தெய்வ அன்பு இதுவேயாம்! (தொடக்க நூல் 6:8 & 9: 20-29)
அன்றைய மனிதரில் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் நோவா என்பதாம். தன்னுடன் சேர்த்து தன் வீட்டாரை, தப்ப வைத்தது உண்மையாம். இன்றைய மனிதர் இவனிடம் கற்க, இருக்க வேண்டிய தென்னதாம்? நன்றாய் அறிந்து நாம் பிடிப்போம், நற்பற்றுறுதி பண்பையாம்! (தொடக்க நூல் 5:28-9:29)
3. அழிவு! நல்லது என்று நானிலம் படைத்த நல்லிறை வருத்தி வாழாதீர். சொல்வது கேட்டு நடப்பது நன்மை; சொரியும் மழையில் வீழாதீர். எல்லையில்லாத இறையின் அன்பை, ஏளனம் செய்து அலையாதீர். தொல்லை தருவர் துயரே பெறுவர்; தெய்வம் இலாது தொலையாதீர்! (தொடக்க நூல் 6:1-7).
எங்கும் தீது சூழ்ந்திருந்தாலும், யாவரும் அடிமையாயில்லை. அங்கும் இங்கும் சிலரிருப்பார்; அவரும் கெடுப்பவராயில்லை. தங்கள் நிலையை அவருணர்வார்; தம்மைத் தாழ்த்தி வேண்டுவார். இங்கே இறையும் இறங்கி வருவார்; இனிதாய் வாழத் தூண்டுவார்! (தொடக்க நூல் 4:25-26)
தீதை அடக்கும் வழிமுறை உண்டோ? தெய்வத்திடம் நாம் கேட்போமே. பாதை தெரியார் காண்பது என்றோ? பார்த்து அவரையும் மீட்போமே. நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்; நாமும் செய்து வாழ்வோமே. வாதை என்று வாயிலில் கிடக்கும், வலிய தீதை ஆள்வோமே! (தொடக்க நூல் 4:7)
தீதின் வளர்ச்சி! 4. தீதின் வளர்ச்சி! சிறு விதையாகத் தொடங்கிய தீது, சிகரம் தேடும் மரமாய் வளர்ந்து, பெரு நிலம் முழுதும் படர்ந்து பரந்து, பிள்ளைக்கனியை நஞ்சாய்த் தருதே. குறுமதிகொண்ட நெஞ்சின் சூது, கொடுமைகளுக்கு ஊற்றாய் இருந்து, தெரு முனை நாடு நகரம் இணைத்து, தெளிவு அழிக்கும் ஆறாய் வருதே! (தொடக்க நூல் 4).
அம்மண அவலம் அழகு என்று, அவிழ்த்து போடுகிறார் இன்று. தம்முளம் குத்திக் காட்ட அன்று, தவறை மூடியவர் உண்டு. செம்மனமாக நம் மனம் திகழ, செய்தார் இறைவன் ஒரு பலி. நம்பினார் வாழ்ந்து நன்கு மகிழ, நமக்கு அருளிய அவர் வழி! (தொடக்க நூல் 3)