இரண்டு ஆற்றின் இடையே செழித்த இராக்கின் பெயர்தான் சினையார். திரண்டு செல்வம் அங்கு கொழிக்க, தெய்வ ஊற்றிலோ நனையார். மிரண்டு நோக்கிப் பார்க்கும் படிக்கு, மேட்டிமைச் சிகரம் புனைவார். உருண்டு உடைகிற கல்லைப் பிடிக்க, ஓடும் போதும் நினையார்! (தொடக்க நூல் 11:1-10)
மூன்றாய் பிரிந்து நாற்றிசை சென்ற முன்னோர் பற்பல இனம் கண்டார். சான்றாய் வாழ்ந்து சென்றவர் என்ற சரியாப் புகழ் யார் கொண்டார்? தோண்டார் என்ற நினைப்பில் தானே, தொல்லை கொடுத்து வாழ்ந்திட்டார். ஆண்டான் எங்கே? அடிமை எங்கே? அனைவரும் அடியில் தாழ்ந்திட்டார்! (தொடக்க நூல் 10:1-32).
மழையால் இழப்பு வந்திருந்தாலும், மழை வில் தோன்றி அழகு தரும். பிழையால் மனிதர் நொந்திருந்தாலும், பேரிறை உடன்படி அமைதி தரும். இழப்பை மறந்து இறையை நாடின், இயற்கையுமிரங்கி இனிமை தரும். உழைக்கும் மனிதர் உண்மை சூடின், உவக்குமிறை தர வாழ்வு வரும்! (தொடக்க நூல் 9:7-17).
உதிரத்தில் தான் உயிர் உறைதல்; ஒருவரையும் கொல்லாதீர். எதிரி என்றாலும் இறை சாயல்; எனவே தீது சொல்லாதீர். பதிலாய்ச் செய்யும் பழிவாங்கல், பாவச்செயல், செல்லாதீர். அதுவே அந்நாள் உடன்படிக்கை; அதற்கெதிராக நில்லாதீர்! (தொடக்க நூல் 9:1-17)
எட்டு பேர் வெளியே வந்து இப்புவி எங்கும் பெருக, தொட்டு அவரை வாழ்த்தினார், தொடக்கமிலா இறைவன். கட்டு மூன்றாய் அவர் பிரிந்து, காணும் இடம் பரவ, விட்டு விடா உடன்படி செய்தார், விண்ணுலகின் அரசன்! (தொடக்க நூல் 8:14-9:19)
மும்முறை சென்ற புறாவைப்போல, முடிவுடன் வாழ முயன்றால், நம்மிடம் எப்படி தீதும் ஓட்டும்? நமது எண்ணம் திருந்தட்டும். செம்மறை காட்டும் நல்வழி நடக்க, சிந்தையைத் திருப்பி விட்டால், எம்மனமாயினும் நன்மையே கொட்டும்; இறையின் அமைதி பெருகட்டும்! (தொடக்க நூல் 8:8-12).
காக்கப்பட்ட நோவா அன்று, காக்கையை அனுப்பும் போது, நோக்கும் இடம் எங்கும் சென்று, நுழைத்தது பிணத் தீது. ஏக்கம் கொண்ட நாமும் இன்று, எடுக்கும் உட்பொருள் ஏது? தாக்கும் தீது வேண்டாம் என்று, தடுக்கட்டும் இறைத் தூது! (தொடக்க நூல்:8: 6-7).
பற்றின் தொடக்கம் எதுவென பார்த்தேன்; படைத்தவர் பண்பெனும் அருளிலாம். முற்றும் இதனை ஆய்ந்தும் பார்த்தேன்; முதலும் முடிவும் அதுவேயாம். பெற்றுக் கொண்டவர் பண்பையும் பார்த்தேன்; பெருந்தீதென்னும் பொருளிலாம். சற்றும் தகுதி அற்றதும் பார்த்தேன். தெய்வ அன்பு இதுவேயாம்! (தொடக்க நூல் 6:8 & 9: 20-29)
அன்றைய மனிதரில் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் நோவா என்பதாம். தன்னுடன் சேர்த்து தன் வீட்டாரை, தப்ப வைத்தது உண்மையாம். இன்றைய மனிதர் இவனிடம் கற்க, இருக்க வேண்டிய தென்னதாம்? நன்றாய் அறிந்து நாம் பிடிப்போம், நற்பற்றுறுதி பண்பையாம்! (தொடக்க நூல் 5:28-9:29)
3. அழிவு! நல்லது என்று நானிலம் படைத்த நல்லிறை வருத்தி வாழாதீர். சொல்வது கேட்டு நடப்பது நன்மை; சொரியும் மழையில் வீழாதீர். எல்லையில்லாத இறையின் அன்பை, ஏளனம் செய்து அலையாதீர். தொல்லை தருவர் துயரே பெறுவர்; தெய்வம் இலாது தொலையாதீர்! (தொடக்க நூல் 6:1-7).