இந்நாட்டார், அந்நாட்டார்!

இந்நாட்டார், அந்நாட்டார்!

என்னை ஆளும் இறைவழி சொன்னால்,
ஏற்க மறுப்பார், இந்நாட்டார்.
சொன்னால் கேட்பார்; சொற்படி நடப்பார்;
சொந்த நாட்டார், அந்நாட்டார்.
அன்பின் உறவு, அனைவரும் ஓன்று,
அடிக்கடிச் சொல்வார் இந்நாட்டார்;
பின்னால் சாதி, சமயமே பாரார்;
பிரித்து வையார் அந்நாட்டார்.

ஊரும் உறவும் பார்த்துச் செய்வார்,
உதவ மறுக்கும் இந்நாட்டார்.
யாரும் வந்தால், இறையாய்ப் பார்ப்பார்;
இனவெறி அற்ற அந்நாட்டார்.
சீரும் சிறப்பும் தேடிச் செல்வார்;
தேவை மிகுந்த இந்நாட்டார்.
பேரும் புகழும் தொண்டிலடைவார்;
பெருமை பேசார் அந்நாட்டார்.

ஏற்றம் நாடும் ஏழைக்கிரங்கார்,
ஏழ்மை வெறுக்கும் இந்நாட்டார்.
ஆற்றும் தொண்டு ஆண்டவர்க்கென்பார்;
அரசியல் செய்யார் அந்நாட்டார்.
மாற்றம் தருகிற வழியும் கேட்பார்,
மதிப்பிற்குரிய இந்நாட்டார்.
போற்றும் தூய்மை புரிந்து வாழ்வார்;
புனிதர் மட்டுமே அந்நாட்டார்!

-கெர்சோம் செல்லையா.

இறையன்பு!

இறையன்பு!

நற்செய்தி: யோவான் 3:16.  

நல்வழி: 

இலை மேல் நீர்த்துளி இருப்பது போன்று, 

இயங்கும் நமது புவி வாழ்வில், 


நிலை வாழ்வென்னும் மீட்பு கண்டு,  

நெஞ்சை அதனிடம் கொடுப்போமா?  


அலை கீழ் ஆழம், மலை மேல் உயரம்,  

அளந்தும் வளர்கிற இறையன்பு,  


சிலை போல் நின்று வியக்கும் நமக்கு,  


சிலுவையில் உண்டு, எடுப்போமா? 

ஆமென்.  


-செல்லையா.