உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:27-33. 

27  உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:

28  போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.

29  சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

30  பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

31  மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.

32  எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

33  இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

இனிவரும் மணித்துளி எப்படியிருக்கும்,  

என்றறியாத அறிவிலி நான்,  

மனிதரின் அறிவில் எட்டாதிருக்கும்,  

மறுமையை எங்கே கற்றிடுவேன்?

பனிமலை ஒன்று மறைந்திருந்தாலும்,

பரிதி கரைப்பது காணும் நான்,   

புனிதரேசு வழங்கும் உயிர்ப்பை,

பொய்யா மொழியில் பெற்றிடுவேன்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.

கொடுப்போமே!

கொடுப்போமே! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:21-26.  

21  அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.

22  இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

23  அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

24  ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.

25  அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

26  அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு: 

உரியவருக்கு உரியவை எவையோ, 

ஒருகுறை வராமற் கொடுப்போமே. 

வரியென வாங்கும் அரசின் தீர்வை  

வன்மை எனினும் கொடுப்போமே. 

சரியெது தவறெது காட்டும் இறைக்கு,  

சரிவர அனைத்தும் கொடுப்போமே.

நெறியிதை அறிந்து நேர்மையில் வாழ,

நெஞ்சை இன்றே கொடுப்போமே!  

ஆமென்.

வஞ்சமாய் வந்து!

நல்லவர்போன்று நம்மிடம் வருகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:19-20.

19  பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

20  அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:   

நல்லவர்போன்று நம்மிடம் வந்து, 

நமது வாயைக் கிளறுகிறார்.  

இல்லையுண்மை, இவரில் இல்லை;  

இதை அறியாதார் உளறுகிறார்.  

எல்லாமறிந்த இறையோ இன்று,  

எச்சரிப்படையச் சொல்லுகிறார்.  

சொல்லுமுன்னர் எண்ணுதல் நன்று;  

செவிடர் தமையே கொல்லுகிறார்! 

ஆமென்.

பாறையாகிய இயேசு!

கிறித்து என்னும் பாறை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:17-18.

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு

கிறுத்து என்னும் பாறைமீது,

கிறுக்கர் விழுந்து நொறுங்குகிறார்.

அறுத்து விடுகிறதாக இழுத்து,

அவரது அடியில் நசுங்குகிறார்.

பொறுத்து போகும் அவரிடத்து,

புரிந்து வந்தோர் வாழுகிறார்.

வெறுத்து நின்று வீழ்ந்ததுபோதும்;

விண்ணரசரே ஆளுகிறார்!

ஆமென்.

தந்தையின் வலி!

மைந்தனைக் கொடுக்கும் தந்தை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20: 13-16.  

13  அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

14  தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,

15  அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?

16  அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:

மைந்தனைக் கொடுத்த தந்தையின் நிலையை,

மறுபடி நெஞ்சில் நிறுத்திடுவோம். 

தந்தையின் வலியைத் தந்தைதான் அறிவார்;

தவறு களையத் திருத்திடுவோம். 

நிந்தனை, துன்பம் நெருக்கும்போது,

நேர்மையின் தந்தையை நினைத்திடுவோம். 

வந்ததை எல்லாம் அவரடி வைத்து, 

வாழ்வை அவருடன் இணைத்திடுவோம்! 

ஆமென்.

அடிப்போர் அறிய!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:11-12.
அடிப்பவர் அறிய! 

11  பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.

12  அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். 
கிறித்துவில் வாழ்வு:

செந்நீர் சிந்தும் உழைப்பாளருக்கு, 

சிறியரால் அடியும் விழுவதுண்டு. 

இந்நாட்களிலும் இதுபோல் கண்டு, 

ஏழை ஊழியர் அழுவதுண்டு. 

எந்நாட்டவரும் காணும்படிக்கு, 

இறை தீர்ப்பளிக்க எழுவதுண்டு. 

அந்நாள் அழுது புலம்பாதிருக்க,  

யார்தான் இன்று தொழுவதுண்டு?  

ஆமென்.

மொத்தமும் பிடிக்க ஓடுகிறார்!

மொத்தமும் பிடிக்க ஓடுகிறார்! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:9-10.

9   பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.

10  அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

குத்தகை தந்த இறை மறந்து, 

கொடுக்கும் அளவில் நிறை குறைந்து, 

மொத்தமும் பிடிக்க ஓடுகிற, 

மூடர்தானே பெருகுகிறார். 

இத்தரை மாந்தரின் மீட்பிற்கு, 

எத்தனை எத்தனை ஊழியர்கள், 

நித்தமும் இங்கு பணிபுரிந்தும், 

நேயமுள்ளவர் அருகுகிறார்! 

ஆமென்.

மலர்ச்சியின் வழி!

மனந்திருந்துதலே மலர்ச்சியின் வழி! 

வளர்ச்சியின் பெயரால் ஆட்சிக்கு வந்தார். 

வறண்ட அறிவால் தீங்கே தந்தார்.


தளர்ச்சியூட்டும் தொற்றால் முழித்தார்.


தாங்குமிறையை மறந்தே பழித்தார்.

கிளர்ச்சி செய்வீர்  எனச்சிலர் சொல்வார்.  


கிறுக்குத்தனத்தால் யார்தான் வெல்வார்? 


மலர்ச்சி காண  விரும்பாதவர் யார்? 


மனம் திருந்தும் வழியிலே பார்! 

அறிவூட்டுதல்தான் நல்வழி ஆகும்.


அழுக்கும் தீங்கும் அதனால்  போகும். 


வெறியூட்டிடுவார் விழுவது பாரும். 


விதைப்பதுதானே விளைந்து சேரும். 


நெறிதவறாது வாழ்பவர் தேடும்.


நிறைய உள்ளார், அவரால் கூடும்.  


பறிகாரார்களும் திருந்திட ஓதும்.


 பாரை மீட்க அன்பே போதும்!

கெர்சோம் செல்லையா  

www.thetruthintamil.com

வஞ்சக நெஞ்சு!

வஞ்சக நெஞ்சு! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:5-8. 

5   அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.

6   மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

7   அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

8   அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். 

கிறித்துவில் வாழ்வு: 

பிஞ்சு குழந்தை போன்று நடித்து,

பெரிய விடைகள் தேடுகிறார். 

நஞ்சு கலந்த நெஞ்சு மறைத்து,

நயந்த வாக்கால்  மூடுகிறார். 

பஞ்சு போன்று அவர் பறந்து,

பதில் பெறாது ஒடுகிறார். 

கெஞ்சு நிலையில் விழுகிறபோது,

கீழோர் கிறித்துவை நாடுகிறார்! 

ஆமென்.

யோவானின் முழுக்கு!

யோவானின் முழுக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:3-4.

3   அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.

4   யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.

கிறித்துவில் வாழ்வு:

முரண்டு நிற்கும் மனிதர் திருந்த, 

முதற்கண் பாதை அமைக்கையில், 

இரண்டு கொண்டோர் ஒன்றைக் கொடுக்க, 

யோவான் காட்டில் முழங்கினார். 

திரண்டு வந்தோர் மனம் திரும்ப, 

தெளிநீர் ஓடை யோர்தனில், 

அரண்டு போகாதிருந்துரைத்த,

அடியார் முழுக்கு வழங்கினார்! 

ஆமென்.