இன்றும் கேட்போம் நற்செய்தி!

நல்வாழ்த்து:
அன்பில் வாழ்ந்து இறை புகழ்வோம்;
அறிவை வளர்த்து இறை புகழ்வோம்.
துன்பம் தந்திட வருபவர்க்கும்
நன்மை செய்து நாம் புகழ்வோம்!
நல்வாக்கு: மத்தேயு 25:29-30.
ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ‘ என்று அவர் கூறினார்.”
நல்வாழ்வு:
இல்லாதிருப்பது வளர்ந்திடுமோ?
என்றும் இல்லை, இவ்வுலகில்.
எல்லாம் வளர வேண்டுமெனில்
இருக்க வேண்டும் அவை முதலில்.
சொல்லால் இயேசு உரைத்தபடி
சொந்தமாக்குவோம் பற்றுறுதி.
நல்லாயனே நிரப்பிடுவார்,
நமது கிண்ணம் வழியும்படி!
ஆமென்.

இன்றைய நற்செய்தி

நல்வாழ்த்து:
இறைவனின் பிள்ளையே வாழ்த்துகிறேன்;
இயேசுவின் பெயரில் வாழ்த்துகிறேன்;
கறைகள் போக்கும் திருவாக்கால்
கழுவப்படவே வாழ்த்துகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 25: 26-28.
“அதற்கு அவருடைய தலைவர், ‘ சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ‘ என்று கூறினார். ‘ எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.”

நல்வாழ்வு:
கொடுக்கும் இறையே கூடக் கொடுப்பார்;
கொடியவர் கெடுக்க விடாது தடுப்பார்.
எடுக்கும் நாமும் ஏய்ப்பதை விடுவோம்;
இயேசு தருவதில் இன்பம் அடைவோம்!
ஆமென்.

இறைவாக்கு

சூது நிறைந்த உலகினிலே,
சொரியும் கண்ணீர் வாழ்வினிலே,
தூது கேட்போம், துயர் நீங்கும்.
தூயவர் வாக்கே நமை மீட்கும்!
நல்வாழ்த்து:
படையோ பணமோ செல்லாது.
படைத்தவர் முன்னே நில்லாது.
கடவுளை மட்டும் நாடிடுவாய்;
காப்பார், அவரைப் பாடிடுவாய்!
நல்வாக்கு: மத்தேயு 25:24-25.
“ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ‘ என்றார்.”

நல்வாழ்வு:

பண்பாய் வாழ்ந்து பணி செய்ய
படைத்தவர் ஈவு அளிக்கின்றார்.
நண்பன் போன்று கை பிடித்து
நன்மை மட்டும் அளக்கின்றார்.
எண்ண மறந்த தன்னலத்தார்
ஈவைப் புதைத்து, பழிக்கின்றார்.
வெண்ணை போதும் நெய் எடுக்க;
விண்ணின் விருப்பில் மகிழப்பார்!
ஆமென்.

தூது

தூய்மையாக வாழ விரும்பின்,
தூது கேட்பீர் நண்பர்களே.
வாய்மையான தெய்வ வாக்கால்,
வாழ்வில் மாற்றம் காணுங்களே!
நல்வாழ்த்து:
உள்ளிருக்கும் இறையே போற்றி;
ஊக்குவிக்கும் மைந்தா போற்றி.
கள்ளமில்லா ஆவியர் போற்றி;
கழுவ வேண்டிக் கேட்டேன், போற்றி!

நல்வாக்கு:

மத்தேயு 25:22-23.
“இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ‘ என்றார்”
நல்வாழ்வு:
இரண்டோ மூன்றோ எதுவோ,
இறைவன்  தருவது என்போம்.
முரண்டு பிடிக்கும் உலகம்
மீள்வதர்க்கென்று அறிவோம்.
வறண்ட வாழ்வை மாற்றும்
வருவாய்க்காகச் செய்யோம்.
உறங்கி விழுந்தத் தமிழர்
உணர்ந் தெழும்பச் செய்வோம்!
ஆமென்.

வாக்கும் வழியும்

வாழ இயலா ஏழைக்கும்
வழியாய் இருக்கும் இறைமகனை,
தாழப் பணிந்து வேண்டுதற்கு,
தமிழில் இதனை எழுதுகிறேன்!
ஆழம் நிறைந்த அவரன்பை,
அன்றாடம் நாம் ருசிப்பதற்கு,
கோழை எனக்கும் இரங்கிட்டார்;
கிறித்து புகழைப் பாடுகிறேன்!
நல்வாழ்த்து:
இறைவன் படைத்தது எல்லாம்
இன்பமும் நன்மையுமே.
குறை கூறுதலை நிறுத்தி,
கிறித்துவை நோக்கிடுமே!
நல்வாக்கு;
மத்தேயு 25:19-21.
“நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ‘ என்றார்.
நல்வாழ்வு:
சிறியதில் உண்மை,
சிகரத்தில் உயர்த்தும்.
வறியவர் உணர்ந்தால்
வாழ்வும் சிறக்கும்.
பெரியதாய் வளர
பேரருள் கேட்பீர்.
சொரியும் இறைவன்
சொற்படி நடப்பீர்!
ஆமென்.

நற்செய்தி

இன்றைய நற்செய்தி!
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மறைநூல் வாக்கை வழங்குகிறேன்.
பகிர்தலால் இன்பம் பரவிடவே,
படைத்தவரிடத்தில் வேண்டுகிறேன்.
நல்வாழ்த்து:
உம்மைப் புகழ்வதே என் வாழ்வு.
உணர்ந்து நடப்பதே நல் வாழ்வு.
செம்மை வழியைக் கடை பிடித்துச்
செயலில் புகழ்வதே நல் வாழ்த்து!
நல்வாக்கு:
மத்தேயு 25:16-18
”ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.”

நல்வாழ்வு:

ஒன்று தானே என்று எண்ணி
ஒளித்துப் புதைத்தான் ஒருவன்.
இன்று இப்படிச் செய்யாதிருக்க
எடுத்துரைக்கிறார் இறைவன்.
சென்றுபோன நாட்களில் செய்த,
தவறை இனிமேல் தொடராதீர்;
என்று கூறும் அடியனும் பணிய
எனக்கும் வேண்டல் ஏறெடுப்பீர்!
ஆமென்.

வானின் செய்தி

வந்தேன் மீண்டும் உம்மிடமே;
வானின் செய்தி கொடுத்திடவே.
தந்தேன் நெஞ்சை இறையிடமே;
தமிழர் மீட்பு அடைந்திடவே!
நல்வாழ்த்து:
விடுதலை அளிக்கும் இறையைப் புகழ்வீர்;
வேண்டும் நன்மை வருவது காண்பீர்.
கெடுதலை வெறுக்கும் நெஞ்சம் ஈவீர்;
கிறித்து அரசில் இடம் பிடிப்பீர்!

நல்வாக்கு:

மத்தேயு 25:14-15.
தாலந்து உவமை

”விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.”

நல்வாழ்வு:
ஐந்தோ இரண்டோ ஒன்றோ,
அளித்தவர் ஆண்டவரன்றோ?
தந்தவர் விருப்பை எதிர்த்துத்
தவறாய் உழைத்தல் நன்றோ?
எந்த வரம் என்றில்லை.
இங்கு தேவை வாழ்க்கை.
அந்த அறிவு வந்தால்
ஆகாதது ஒன்றில்லை!
ஆமென்.

எனது சாதி!

எந்த சாதி என்பவரே,
எனது சாதி சொல்லவா?
அந்த சாதி யாவருக்கும்
சொந்த சாதி அல்லவா?

நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் சாதி மாறுகிறவன். எப்படித் தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் இறைவேண்டல் ஏறெடுத்து, திருமறை வாசிக்கிறேன். அப்போது மட்டும் அந்தணன்.

அதன் பின்னர், என் வீட்டாரோடும், மற்றவர்களோடும் சண்டைபோடுகிறேன்; அப்போது நான் சத்திரியன்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடையவர்களை விற்கப் பார்க்கிறேன்; அவர்களை வைத்துப் பொருள் சேர்க்கப் பார்க்கிறேன். அப்போதெல்லாம் நான் வைசியன்.

உடல் உழைக்கும் போதெல்லாம், நான் சூத்திரன்.

உடல் அழுக்கைக் களையும்போதோ, நான் பஞ்சமன்.

இப்படி நான் மட்டுமல்ல, சாதி வேறுபாடு பார்க்கிற எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் சாதி மாறுகிறார்கள்!

எனவேதான் சொல்கிறோம்:

ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்!
நன்றே கேட்போம்; யாவரையும் இணைப்போம்!

நற்செய்தியும் நல்வாழ்வும்

பேசும் வாக்குகள் வாக்கல்ல;
பிழைகள் உண்டு அறிவீரே.
இயேசுவின் வாக்கே திருவாக்கு;
இதனை உணர்ந்து வருவீரே!
நல்வாழ்த்து:
நம்பிக்கையாலே நேர்மை தரும்
நல்லிறையே உமைப் போற்றுகிறேன்.
எம்மக்கள் யாவரும் நேர்மைபெற
இன்றும் உம்மை வேண்டுகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:10-13.
”அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ‘ என்றார்கள். ‘ அவர் மறுமொழியாக, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ‘ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
நல்வாழ்வு:
அருட்கதவு திறந்துளது;
ஆண்டவருள் வாருங்கள்.
அடைத்தபின்னர் திறவாது;
அனைவருக்கும் கூறுங்கள்.
இருட்காலம் வருகிறது;
இயேசுவையே பாருங்கள்.
இன்றே விடுதலை நாள்;
இறையரசில் சேருங்கள்!
ஆமென்.
பி.கு.
பயணம் அழைப்பதால் செல்கின்றேன்.
பாதுகாக்கிறார் மகிழ்கின்றேன்.
இயன்ற வரையில் மன்றாட
இனிய நண்பா, கேட்கின்றேன்!

நற்செய்தி

வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு,
வேண்டும் நம்முள் அருள் வாக்கு.
பற்றிக் கொண்ட பாவம் நீக்கு;
பாரில் இதுவே சரி நோக்கு!
நல்வாழ்த்து:
தீமைகள் என்னைச் சூழ்ந்தாலும்,
தெய்வமே உம்மைப் புகழ்ந்திடுவேன்.
ஊமையாய் இருக்க வைத்தாலும்,
உள்ளத்தால் நான் போற்றிடுவேன்.
நல்வாக்கு:மத்தேயு 25:8-9.
”அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘ எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ‘ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘ உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ‘ என்றார்கள்.”
 

நல்வாழ்வு:

கொடுத்து மகிழும் இறையிடம் கேட்போம்;
கொடுக்கும் காலம் வாங்கிடுவோம்.
அடுத்து  நிற்கும் மனிதரைக் கேளோம்;
ஆவியரிடமே ஏங்கிடுவோம்.
தடுத்து நிறுத்தும், தவற்றை உணர்த்தும்,
தந்தையின் வாக்கைப் பரப்பிடுவோம்.
எடுத்து வைக்கும் விளக்கில் எண்ணெய்
இருக்க வேண்டும், நிரப்பிடுவோம்!
ஆமென்.