மகனை அனுப்பிய தந்தை.

மகனை அனுப்பிய தந்தை.
நற்செய்தி மாலை: மாற்கு 12:6-8.
“இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘ இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும் ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
தந்தை மகனை அனுப்பி வைத்தார்;
தவற்றைத் திருத்தும் வழிவகுத்தார்.
நிந்தை செய்தோர் இதை மறந்தார்;
நேர்மைவிட்டு குருசிலறைந்தார்.
மைந்தனேசோ உயிர்த்தெழுந்தார்;
மன்னிப்பருளி, மீட்பும் தந்தார்.
இந்த நிகழ்வை முன்னறிவித்தார்.
யாவரும் மீள இன்றும் உரைத்தார்!
ஆமென்.

No automatic alt text available.

திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!

திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:4-5.
“மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.”
நற்செய்தி மலர்;
அடிப்பார், உதைப்பார், அகந்தையில் நடப்பார்;
அடுத்தவர் உரிமையை மறுத்திடுவார்.
இடிப்பார், இகழ்வார், இடுக்கண் கொடுப்பார்;
எழை எளியரை வெறுத்திடுவார்.
வெடிப்பார், தகர்ப்பார், வெட்டியும் கொல்வார்,
வீணர் நாட்டில் பெருகுகிறார்.
துடிப்பார், துவள்வார், துயரில் அமிழ்வார்,
திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
ஆமென்.

No automatic alt text available.

மொத்தமும் தமது சொத்தென்று!

மொத்தமும் தமது சொத்தென்று!
நற்செய்தி மாலை: மாற்கு 12:1-3.
“இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: ‘ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
அத்தனையும் தம் திறனென்று,
அறியாமையைத் தெரிகின்றார்.
மொத்தமும் தமது சொத்தென்று,
முதலுடன் பயனையும் உரிகின்றார்.
குத்தகை பெற்றவர் என மறந்து,
கொள்ளை, கொலையும் புரிகின்றார்.
இத்தனை செய்பவர் இந்நாளில்,
யாவுமிழந்து திரிகின்றார்!
ஆமென்.

Image may contain: 1 person

வெந்நீரை வடித்துழைத்த காசு!

வெந்நீரை வடித்துழைத்த காசு!

ஐநூறு ஆயிரங்கள் வேண்டாமே;
ஐம்பதும் நூறுந்தான் வேண்டுமே!
எந்நாட்டில் இப்படி யார் சொல்வார்?
இந்தியர்தான் முதன்முதலில் சொல்கின்றார்!

செந்நாய்கள் கடிப்பதுபோல் சேர்ப்போமே,
சொன்னவர்கள் இன்றெங்கே? பார்ப்போமே!
வெந்நீரை வடித்துழைத்த காசு மட்டும்
வேகாது, என்றறிந்து, ஈர்ப்போமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: fire and one or more people

நலம் எது என்று நாம் கேட்போம்?

நலம் எது என்று நாம் கேட்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.
“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
ஏன், எதற்கு, எப்படி என்று,
எத்தனை கேள்வி நாம் கேட்டோம்?
வான் மைந்தன் நம்முன் இன்று,
வந்து கேட்டால் என் சொல்வோம்?
நான் என்னும் அகந்தை விட்டு,
நலமெது என்று நாம் கேட்போம்.
தேன் இனிமை வாக்கு தொட்டு,
தூயவர் திட்டம் தெரிந்திடுவோம்.
ஆமென்.

Image may contain: sky, cloud, outdoor and nature

ஆணையுரிமை யார் தந்தார்?

ஆணையுரிமை யார் தந்தார்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:27-28.
“அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
ஆணையுரிமை யார் தந்தாரென,
அறவழி அடைக்கும் அறிஞரே,
சாணை பிடிக்காக் கத்தி அதுவே;
சண்டையிடும் நீர் வறியரே.
கோணலை நேர்மை என்றேயுரைத்துக்
கொடுமை செய்யும் தலைவரே,
வீணராய் இப்படி நடப்பவர் முடிவில்,
வெம்பி நொந்து அலைவரே!
ஆமென்.

Image may contain: beard, text and one or more people

பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!

பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:25-26.
” நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்’ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
எத்தனை எத்தனையோ முறைகள்
எளிதாய் தவறுகள் நாமிழைத்தோம்.
அத்தனையும் அவர் மன்னித்தார்;
அதனால்தானே உயிர் பிழைத்தோம்.
இத்தனை ஆண்டுகள் பெற்றிருந்தும்,
எங்கே, எவர்க்கு மன்னித்தோம்?
பித்தினை விட்டே திருந்திடுவோம்;
பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
ஆமென்.

Image may contain: 1 person , text

அடைந்தோம் என்ற உறுதி!

 

அடைந்தோம் என்ற உள்ளுணர்வு …
நற்செய்தி மாலை:மாற்கு 11:24.
“ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.”
நற்செய்தி மலர்:
கிடைக்கும் என்ற நம்பிக்கை,
கிறித்துவில் கிடைக்கும், கேட்டிடுவோம்.
அடைந்தோம் என்ற உள்ளுணர்வும்,
அவர் தருவார், அதைக் கூட்டிடுவோம்.
உடைப்பது கடினம் என்பவர் முன்,
உடைந்த பூட்டைக் காட்டிடுவோம்.
விடைக்கென்றேசு இருப்பதனால்,
வேண்டாம் கவலை, கொட்டிடுவோம்!
ஆமென்.

Image may contain: one or more people

இனிய ஒளிநாள் வாழ்த்துகள்!

இனிய ஒளிநாள் வாழ்த்துகள்!

இருளைப் பிரித்து, எழும்பும் ஒளிபோல்,
பொருளை விரித்து, அறிவொளி கொடுப்போம்.
அருளைத் திரிக்கும் பிரிவினை வெறுத்து,
ஒருமைப்பாட்டில் வெற்றியும் எடுப்போம்!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

மலையைப் பெயர்க்கும் பற்று!

மலையைப் பெயர்க்கும் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 11:20-23.
“காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, ‘ ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று ‘ என்றார். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘ பெயர்ந்து கடலில் விழு ‘ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்”.
நற்செய்தி மலர்:
மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும்,
மாபெரும் பற்றும் எனக்கில்லை.
கலையழகுள்ள சிலைபோல் கட்டும்,
கைத்திறன் அறிவும் எனக்கில்லை.
விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும்,
விண்ணின் அன்பும் எனில் இல்லை.
இலைபோல் வாடும் நிலையை ஓட்டும்,
இயேசுவைப் பார்த்தேன், குறைவில்லை!
ஆமென்.