எளியரின் காணிக்கை!
நற்செய்தி மாலை: மாற்கு12:41-44.
“இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ‘ இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
எல்லாம் இருப்போர் ஏதோ கொடுத்தால்,
எப்படி நூற்றுக்கு நூறாகும்?
இல்லாதவர்கள் யாவும் கொடுத்தால்,
இறைவன் விரும்பும் பேறாகும்.
நல்லாயர்போல் ஏழையை மதித்தால்,
நமது திரு அவை சீராகும்.
சொல்லால் செயலால் வாழ்ந்து கொடுத்தால்,
சுற்றம் போற்றும் பேராகும்!
ஆமென்.
கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்.
கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்.
“இல்லா நிலையில் யாவும் படைத்த
இணையற்றவரே இறைவன்.
எல்லோருக்கும் மீட்பின் பொருளாய்
இப்புவி வந்தவர் மைந்தன்.
வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து,
வாழ வேண்டுமே மனிதன்.
நல்லாவியரால் நடத்தப்பட்டு,
நன்மை செய்வான் புனிதன்.”
கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,
புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்,
-செல்லையா,
இறையன்பு இல்லம்,
செக்ரெட்டேரியட் காலனி,
இரட்டை ஏரி, சென்னை.
www.iraiyanbuillam.com
பெருமையை வெல்வீர்!
பெருமையை வெல்வீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:38-40.
“இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ‘ மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
வேர்போல் வளர்ப்பீர் இறை மேல் பற்றை;
வெளியே வேண்டாம், ஆழம் செல்வீர்.
தேர்போல் குலுங்கும் கனியைக் காட்டி,
தெளிவில்லார்க்கு அறிவைச் சொல்வீர்.
நேர்மாறாக நடப்பது காண்பீர்;
நிறுத்தாவிடில் நீர் நேர்மையைக் கொல்வீர்.
யார் இவன் கூற, எனப் பழிக்காது,
இறையின் வாக்கால் பெருமையை வெல்வீர்!
ஆமென்.
தாவீதின் இறைவாக்கு!
தாவீதின் இறைவாக்கு!
நற்செய்தி மாலை: மாற்கு 12:35-37.
“இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, ‘ மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ ஆண்டவர் என் தலைவரிடம், ″ நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் ″ என்று உரைத்தார் ‘ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி? ‘ என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
தாவிதின் மகனாய்ப் பிறப்பவர் எனினும்,
தலைவர் என்றுதான் விளித்தார்.
தாழ்மையில்லா உலகம் எனினும்,
தந்தை அன்பில்தான் அளித்தார்.
பாவியர் மீட்பு அரிதே எனினும்,
பரிந்தவர் குருதிதான் தெளித்தார்.
பகுத்தறிவிற்குப் புரியாதெனினும்,
பணிந்தவர் யாவருந்தான் களித்தார்!
ஆமென்.
இறையின் சாயல் அன்பே!
இறையின் சாயல் அன்பே!
நற்செய்தி மாலை: மாற்கு 12:32-34.
“அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.”
நற்செய்தி மலர்;
ஒன்றே ஓன்று தெய்வம் ஓன்று.
ஒன்றின்மேலே இல்லை என்று,
அன்றே சொன்னார், அதனை இன்று,
அறியும் அறிவே நமக்கு நன்று.
என்றே உரைக்கும் நம்மில் இன்று,
இறையின் சாயல் அன்பு என்று,
நன்றே சொன்னார் இயேசு அன்று,
நன்மை வழியில் நடந்து சென்று!
ஆமென்.
இரண்டு கட்டளைகள்!
இரண்டு கட்டளைகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:28-31.
“அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக” என்பது முதன்மையான கட்டளை. “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.”
நற்செய்தி மலர்:
திரண்டு கொழுத்தத் தீமை வாழ்வில்,
தெய்வக் கட்டளை கேட்க வேண்டும்.
இரண்டு பண்புகள் என்றும் வேண்டும்.
இவற்றின்படிதான் வாழ வேண்டும்.
முரண்டு பிடித்தல் நிறுத்திவிட்டு,
முழு அன்போடு இறையிடம் வேண்டும்.
சுரண்டுபவர்தான் மனிதரென்றாலும்,
சோராதன்பைச் செலுத்த வேண்டும்!
ஆமென்.
விண்ணின் தூதர் போன்று…
விண்ணின் தூதர்போல்….
நற்செய்தி மாலை: மாற்கு 12:24-27.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? ‘ ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ‘ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
விண்ணின் தூதர் எப்படி இருப்பார்?
விளக்கம் சொல்ல அறியேன் நான்.
கண்ணில் காணும் படம்போல் எழுத,
கற்பனைகூடத் தெரியேன் யான்.
எண்ணம் கடந்த இந்த அறிவை ,
இறைப்பற்றாலே புரிவேன் நான்.
மண்ணைவிட்டுப் பிரியும்போது,
மாற்றம் கண்டு அறிவேன் யான்!
ஆமென்.
உயிர்த்தெழுதல்!
உயிர்த்தெழுதல்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:18-23.
“உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, ‘ போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே! ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
இறந்தபின் என்ன நடக்கும் என்று,
எவர்க்கும் தெளிவாய்த் தெரியாது.
இதனால் கேள்விகள் எழுவது இயல்பு;
இருப்பினும் பகடி கூடாது.
பிறப்பின் நோக்கம் தெரிந்தவர் இன்று,
பேசும் உயிர்ப்பின் பொருள் ஏது?
பேரருளாலே இறையுள் இணையும்,
பேறேயன்றி வேறேது?
ஆமென்.
அரசை மதித்துக் கொடுப்போம்!
அரசை மதித்துக் கொடுப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:13-17.
“பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
எடுக்கும் எண்ணம் பெருத்த நாட்டில்,
இறைவன் வாக்கை எடு என்பேன்.
கொடுக்கும் பண்பு குறையும் வீட்டில்,
குவியும் பொருளைக் கெடு என்பேன்.
அடுக்கும் காசில் ஆயம் கேட்கும்,
அரசை மதித்துக் கொடு என்பேன்.
படுக்கும் முன்பே யாவையுமெடுத்து,
படைத்தவர் காலடி விடு என்பேன்.
ஆமென்.
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…
நற்செய்தி மாலை: மாற்கு 12:9-12.
“திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். ‘ கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று ‘ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா? ‘ என்று அவர் கேட்டார். தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.”
நற்செய்தி மலர்:
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்,
புரியா உயர்வைத் தாண்டிடுவார்.
பொறுமையோடு இறையைப் பார்த்தால்
புவியில் அவருடன் ஆண்டிடுவார்.
மறைக்கப்பட்ட வரலாற்றைத்தான்,
மனிதர் இனிமேல் தோண்டிடுவார்.
அறையப்பட்டும் உயிர்த்தார் ஒருவர்;
அவர்போல் எழும்ப வேண்டுடிவார்!
ஆமென்.