விலையில்லை!

விலையின்றிக் கொடுப்போம்!


நெல்லும் மணியும் நிறைந்த வயலை,


நெடு வழியாக்கத் துடிக்கும் நாம்.

வெல்லும் வாழ்க்கை ஏழையுமடைய,

விலையிலாக் கல்வி கொடுப்போமா? 

கொல்லும் கொடிய குண்டினை வாங்கக்
கோடிகோடி கொடுக்கும் நாம்.

செல்லும் ஏழைகள் நீடூழி வாழச்

செலவிலா மருத்துவம் கொடுப்போமா?


-கெர்சோம் செல்லையா.

மழலையர் !

மழலையரைப் பார்த்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:15-17.15  பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.16  இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.17  எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தந்தை தாயைப் பார்த்துப் பயின்றும்,

தவறுகள் என்னில் இருப்பதனால்,

மைந்தனேசு மாற்றிச் சொன்னார்;

மழலையர் பண்பைப் பார் என்று.

இந்த அறிவும் இவர்கள் அன்பும்,

இன்று என்னில் இராததனால்,

சொந்த வாழ்வில் குறைவுபட்டேன்;

சொற்படித் திருத்துவீர் இன்று!

ஆமென். 

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:13-14.

13  ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14  அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஆயம் வாங்கும் அலுவலர் ஒருவர்,

ஆண்டவர் கோயில் முன் நின்று,

மாயம் நிறைந்த மனதை உணர்ந்து,

மன்னிப்பிற்குத் தாழ்த்துகிறார்.

சாயம்பூசிச் சாவினை மறைத்து, 

சரிதான் என்கிற நாம் இன்று,

காயம் ஏற்று கனியும் அவர்முன்,

கசியும்போது வாழ்த்துகிறார்!

ஆமென்.

பெருமை!

திமிராய்ப் பார்க்கிறவர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:9-12.

9   அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10  இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11  பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒரு முறை காசு கொடுத்து விட்டு,

ஊர் நிறை செல்வம் வேண்டுகிறார்.

இரு முறை நோன்பு எடுத்து விட்டு,

இதுவே வழியெனத் தோண்டுகிறார்.

தெரு வரைத் தம்மைப் புகழ்ந்துவிட்டு,

திமிராய்ப் பிறரை எள்ளுகிறார்.

திரு மறை கூறும் அன்பு விட்டு,

தேடின், தெய்வம் தள்ளுகிறார்!

ஆமென்.

நீடிய பொறுமை!

நீடிய பொறுமை வேண்டும்!கிறித்துவின் வாக்கு லூக்கா 18:6-8.
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

இலைமறை காயாய் ஒளிப்பதனால்,

இல்லை நேர்மை என்பீரா?

விலையாய்த் தீர்ப்பு அளிப்பதனால்,

வெறுத்து, தீமை தின்பீரா?

அலைபோல் ஆடும் உள்ளத்தை

அடங்கி இருக்கச் சொல்வீரா?

நிலை கண்டிறையும் இறங்கிடுவார்;

நீடிய பொறுமை கொள்வீரா?

ஆமென்.

நேர்மையற்றோர் முன்பு!

நேர்மையற்றோர் நடுவில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:3-5.

3   அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.

4   வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

5   இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

நேர்மையற்ற நடுவரும்,

நெறிமுறைதான் பேசுவார்.

கூர்மையற்ற அறிவினால்,

கொடுமையைத்தான் பூசுவார்.

யார் கொடுப்பார் தீர்ப்பு,

என்று ஏழை ஏங்குவார்.

பார் அறியும் இறைவனோ,

பரிவினில் தாங்குவார்!

ஆமென்.

வாழ்வு வந்தபோது!

வாழ்வு வந்தபோது!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:1-2.

1   சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

2   ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

தாழ்வு நோக்கிப் பெயர்கையிலே

தாங்கும் என்று அழுதவர்கள்,

வாழ்வு வந்து உயர்கையிலே,

வறியரை நினைக்கலையே.

ஏழ்மையென்று வெறுக்கையிலே,

இறைநிழலை மறுப்பதனால்,

கீழ்மையுற்று வருந்திடுவார்;

கிறித்தவரும் உணரலையே!

ஆமென்.

கொரோனாவிற்கு மருந்து!

கோயிலை மூடி விட்டோம்;
கொரோனா வராதுயென்று.
வாயினைக் கட்டி வைத்தோம்
வந்தாலும் தடுக்குமென்று.
நோயினில் விழுந்தவரை

நோகாமல் எழுவீர் என்று,
ஆய்வினில் மருந்து தந்து,
அருளுவீர் இறையே இன்று!

-கெர்சோம் செல்லையா.

இறைவன் எங்கே? உள்ளார் இறைவன் உள்ளில்; உணர்வீர் பற்று கொள்ளில். தள்ளார் விரும்பும் கோயில், தருவீர் நல்லுடல் வாயில். அள்ளார் செய்யும் சடங்கில், அருளார் நன்மை கிடங்கில். எள்ளார் இரங்கும் பண்பில்,  இருப்பார் இறையும் அன்பில்! -கெர்சோம் செல்லையா.