உணவு!

வாழ்வது உணவிற்கா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:16-17.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.

17. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
கிறித்துவில் வாழ்வு:
வாயிலும் வயிற்றிலும் அடித்தவராய்,
வாழ்வது உணவிற்கேயென்று, 
நாயினைப் போன்று ஊளையிடும் 
நன்றி மறக்கும் மானிடரே, 
ஆயிரம் கோடி உயிர் எனினும்,
அன்றைய உணவை அளந்தளிக்கும்,
தாயினும் மேலாம் இறையன்பு,
தருவதை மறப்பதுதான் இடரே!
ஆமென்.

LikeShow More ReactionsComment

பசியாற்றும் இயேசு!

பசியாற்றும் இயேசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:12-15.
12 சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
14 ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.

15 அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இல்லை உணவு என்றாலும்,
இயேசுவின் அடியார் நம்புகிறார். 
எல்லோருக்கும் படியளக்கும்,
இறைமுன் பந்தி அமருகிறார்.
சொல்லால் உணவு படைப்பவரின்,
சீர்மிகு செயலைக் காணுகிறார்.
பொல்லா ஐயம் கொண்டவர்தான்,
புசியாதிருந்து நாணுகிறார்!
ஆமென்.

தனிமை தேடிய இயேசு!



10தனிமை தேடிய இயேசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:10-11.
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.

கிறித்துவில் வாழ்வு:
தனிமை விரும்பும் வேளையிலும்,
தவிக்கும் மக்கள் வருகின்றார்.
இனிமை வாழ்வு இவரடைய,
இயேசு இறை வாக்கருள்கின்றார்.
மனிதர், வாழ்வில் ஓய்வமைதி 
மாபெரும் பேறாய் அடைந்தாலும்,
புனிதர் வாக்கு உரைப்போர்க்கு,
புவியில் ஓய்வு கிடையாதே!
ஆமென்.

கலங்கும் கயவர்!

கலங்கும் கயவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:7-9.
7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்டயாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
கலக்கிடும் கயவர் கலங்குவார் ஒருநாள்.
காணும் காட்சிகள் கலக்கும் அந்நாள்.
விலக்கிடும் தீமைகள் வேண்டாம் இந்நாள்,
விலகச் செய்கிறார் இறைவன் முன்னால்.
துலக்கிடும் கலன்களின் அழகு எதனால்?
தூய ஆவியர் செயல்படுவதனால்.
அலக்கிட உள்ளம் கொடுப்பீர் இதனால்,
அந்நாளேதான் இனிய பொன்னாள்!
ஆமென்.

பிணி களைவோம்!

பிணி களைவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:6
6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இயேசு என்றால் எதுவெனக் கேட்கும்,
ஏழ்மையின் ஊர்கள் ஈங்குண்டே.
காசு பொருளே கடவுள் என்னும்,
கடை நிலையாளரும் ஆங்குண்டே.
ஆசு இரிய, இறை வாக்குரைக்கும்,
அன்புப் பணியில் பாங்குண்டே.
பேசுவதோடு நிற்கிறோம் நாமும்;
பிணி களையாவிடில் தீங்குண்டே!
ஆமென்.