அடியார் தெளிவுறும் காலம் வரையில்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:9-10.
“அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ‘ மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘ இறந்து உயிர்த்தெழுதல் ‘ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
அடியார் தெளிவுறும் காலம் வரையில்,
அமைதியில் கற்பார், அறிவீரே.
அறியாதவராய்ச் சொற்போர் புரிதல்,
அழகிலை என்பதும் தெரிவீரே.
விடியா இருட்டில் வெளிச்சம் கொடுத்தல்,
விளக்கின் பணிதான் அறிவீரே!
வேண்டும் எண்ணெய் நமது விளக்கில்;
விண்ணின் விருப்பைத் தெரிவீரே!
ஆமென்.
Category: Uncategorized
இயல் இசைப் பொழிவு கேட்பவரே!
இயல் இசைப் பொழிவைக் கேட்பவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 9:7-8.
“அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.”
நற்செய்தி மலர்:
எங்கெல்லாமோ ஓடியும் ஆடியும்,
இயலிசைப் பொழிவைக் கேட்டீரே!
இங்கே நம்முள் உறைந்திருக்கும்
இறை மொழி கேட்க மாட்டீரே!
அங்கெல்லாம் போய் வந்தபின்பும்
அமைதி கேட்டது நம் மதியே!
மங்காச் செல்வம் தெய்வ அன்பே;
மகிழ்ந்து ஏற்றால், நிம்மதியே!
ஆமென்.
மலை மேல் இருத்தல்…
மலைமேல் இருத்தல்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:4-6.
“அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ‘ ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ‘ என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
மலை மேல் இருத்தல் நல்லது என்று,
மறுவுரு கண்டவர் எண்ணுகிறார்.
தலைக்கொரு கூடம் அமைக்கும் தம்மை
தலைவராய் உயரப் பண்ணுகிறார்.
கலையழகுள்ள மலையில் இறங்கும்
காட்டு அருவியைக் காண்பவர் யார்?
நிலைகள் உயரும், நேர்மை பரவும்;
நீர்போல் இறங்கி, பயன்தரப் பார்!
ஆமென்.
செய்வோம் நன்மை!
அன்புடன் செய்வோம் நன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 9:1-3.
” மேலும் அவர் அவர்களிடம், ‘ இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.”
நற்செய்தி மலர்:
தோற்றம் மாறிய இயேசுவின் உடையோ,
தூய்மையில் உயர்ந்த வெண்மை.
மாற்றம் இல்லா மனிதரின் நெஞ்சோ,
மடமையில் உறைந்த தன்மை.
ஏற்றம் கொண்ட இறைப்பணியாலே,
எங்கும் உரைப்போம் உண்மை.
ஆற்றல் இல்லா மனிதரும் மீள்வார்;
அன்புடன் செய்வோம் நன்மை!
ஆமென்.
வீண் வீண்!
வீண் வீண், வாழ்வே வீண்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:36-38.
“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்’ என்றார்.”
நற்செய்தி மலர்:
கொட்டும் மழையெனப் பொன்பொருளும்,
கோட்டை கொத்தள வீடுகளும்,
வெட்டும் சுரங்கத் தோட்டங்களும்,
வேண்டும் அளவில் சேர்த்தாலும்,
தட்டும் மைந்தன் தந்தருளும்,
தந்தையாம் கடவுளின் விடுதலையை
மட்டும் ஒருவர் பெற மறுத்தால்,
மனிதப் பிறப்பே வீணாகும்!
ஆமென்.
எமது வேலை!
எம் வேலை, உம் வேலை!
எண்ணிக்கையைப் பெருக்கும் நோக்கில்
இயேசுவின் வாக்கு உரைக்கவில்லை.
மண்ணில் மாபெரும் அரசு அமைத்து,
மாற்றார் வீழ்த்தவும், குரைக்கவில்லை.
கண்ணில் காணா கடவுளின் அன்பைக்
கருத்தாய்ச் சொல்வதே, எம் வேலை.
பண்ணும் தீச்செயல் தவறென உணர்ந்து,
பற்றால் மீளவதோ, உம் வேலை!
ஆமென்.
– கெர்சோம் செல்லையா.
நீ வா…
நீ வா என்று அழைக்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:34-35.
“பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ‘ என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.”
நற்செய்தி மலர்:
ஈவாய்ப் பெற்ற இம்மையின் வாழ்வை,
இறைவனின் பணிக்கென அமைப்பவர் யார்?
நோவாய்ப்பட்ட மானிடம் தழைக்க,
நுகமாம் சிலுவை சுமப்பவர் யார்?
ஏவாள் ஆதாம் வழியில் செல்வார்,
இன்று மீள்வார், உழைப்பவர் யார்?
நீ வா என்று அழைப்பவர் குரலை
நெஞ்சில் ஏற்றால், பிழைப்பவர் பார்!
ஆமென்.
ஆண்டவருக்கே அறிவுரையா?
ஆண்டவருக்கே அறிவுரையா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:31-33.
” மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ‘ என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ‘ என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ‘என்று கடிந்துகொண்டார்.”
நற்செய்தி மலர்;
ஆண்டவருக்கே அறிவுரை கூறும்
அளவில் கிறித்தவர் நடக்கின்றார்!
அதனால்தானே ஊழியர் இன்று,
ஆணவம் கொண்டு கிடக்கின்றார்!
வேண்டுவோரின் வெறுமை காணும்,
வேந்தன் பற்றையும் பார்க்கின்றார்.
வெற்றியுள்ள வாழ்வும் ஈந்து,
விண்ணின் அரசில் சேர்க்கின்றார்!
ஆமென்.
எந்தன் தந்தை….
எந்தன் தந்தை செல்லையா!
“பிள்ளகைளின் பெருமை
அவர்கள் தந்தையரே.”
(நீதிமொழிகள் 17:6).
“புனிதன் இயேசு வழியில் வந்தாய்.
புரிந்த பணிக்குப் பெருமை தந்தாய்.
இனியவள் கிளாறியால் அறுவர் ஈந்தாய்;
இவர்கள் உயர உழைத்துத் தேய்ந்தாய்.
மனிதர் நடுவில் நிமிர்ந்தே நின்றாய்;
மதி என்றாலே நேர்மை என்றாய்.
தனியன் என்றார் முன்பு வென்றாய்;
தந்தைக்கிலக்கணம் தந்தே சென்றாய்!”
-கெர்சோம் செல்லையா.
கெட்டார் கெட்டார்!
கெட்டார் கெட்டார்!
மெய்யென்றால் சதை காட்டும் திரைப்படத்தார்,
மேலோங்கி ஒழுக்கத்தைக் கைவிட்டார்.
பொய்யாலே புனைந்துரைக்கும் ஊடகத்தார்,
பொருளீட்ட அவ்வழுக்கை வெளியிட்டார்.
அய்யரெல்லாம் அருள் மறந்து போய்விட்டார்;
அறமறியாத் தலைவர்கள்தான் உயர்ந்திட்டார்.
உய்யும்வழி உரைப்பவரும் உறங்கிட்டார்.
உண்மையைத் தெரியாரோ கெட்டார், கெட்டார்!
-கெர்சோம் செல்லையா.