என்ன பேசுகிறோம்?

என்ன பேசுகிறோம்?

இறைவாக்கு: யோவான் 12:5

50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

இறைவாழ்வு: 

எதை எதையோ பேசுகிறோம்.
எண்ணாமல் பேசுகிறோம்.
கதை கதையாய் பேசுகிறோம்.
கற்பனையால் பூசுகிறோம்.
அதை பின்னர் ஆராய்ந்தால்,
அறிவின்மை வீசுகிறோம்.
இதை மாற்றும் வழியுண்டா?
இறை உள்ளில் பேசட்டுமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

முடிவு கட்டும்!

முடிவு கட்டும்!
இறைவாக்கு: யோவான் 12:48-49.

48 – என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

49 – நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.  

இறைவாழ்வு:
நாக்கைச் சுழற்றி உரையாற்றுவதும், 
நன்மை அற்ற வினையாற்றுவதும்,
போக்கிடமறியா பொய்யின் வண்ணம்;
புண்ணின் தொடக்கம் நமது எண்ணம்.
தாக்கிடும் நோயைத் தடுத்தழிப்பதும்,
தந்த மகிழ்வைத் தொடர்ந்தளப்பதும்,
ஆக்கிடும் ஏசுவின் அருமைத் திட்டம்;
அவரருள் வாக்கே  முடிவு கட்டும்! 

ஆமென். 
கெர்சோம் செல்லையா. 

மீட்பதே பணி!

மீட்பதே பணி! 

இறை வாக்கு: யோவான் 12::46-47.

இறை வாழ்வு: 

வேட்கை இன்று விண்வரை சென்று,
வெறித்தனமாக ஆடுவதால்
மீட்பை விட்டு விடுபவர் கெட்டு,
மீளாத் துயரில் வாடுகிறார்.
சேட்டை செய்து சிறுமையும் எய்து,
சேதம் கண்டவர் தேடுவதால்,
ஆட்டை நடத்தி, அன்பில் கிடத்தி,
அருளும் கோனால் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மைந்தனைப் பாரீர்!

இறைவாக்கு: யோவான் 12:44-45.

  1. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
  2. என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

இறைவாழ்வு:

தந்தை இறையைப் பார்க்க விரும்பி,
தம் வழி செல்லும் மானிடரீர்,
மைந்தன் இயேசைக் கண்டு, திரும்பி,
மனது கொடுக்க, ஏன் மறந்தீர்?
தொந்திரவான மனிதரில் நிறுத்தி,
தூய்மையை நாடா மானிடரீர்,
எந்திரமான உம் செயல் விருத்தி
அடையுதே தீது; அது துறப்பீர்!

ஆமென்.

கெர்சோம் செல்லையா.

நாலடி நல்வாக்கு!

நாலடி நல்வாக்கு!

தன்னை உயர்வாய் எண்ணினவனும் கெட்டான்.
உன்னை தாழ்சாதி என்பவனும் கெட்டான்.
முன்னே இதனை அறியாதவனாய்க் கெட்டான்.
பின்னே அறிய மறுப்பவனும் கெட்டான்!

-கெர்சோம் செல்லையா.

  1. கெட்டான் = கெட்டுப் போனான்
  2. கெட்டான் = கெட்டவன்

என்ன பாடுகிறோம்?

இறையறிந்தோர், பாடுகிறார்!

காசு காசென்றே, ஓடுகிறார்;
கை நிறையவே, ஆடுகிறார்.
தூசு தூசென்றே, சாடுகிறார்;
துயரில், இறை தேடுகிறார்!
மாசு நீங்கிட யார் பாடுவார்?
மதி பொங்கிட யார் பாடுவார்?
ஏசு தங்கிட யார் பாடுவார்?
இறையறிந்தால், பாடுவார்!

-கெர்சோம் செல்லையா.

கிறித்தவர் என்று சொல்லுங்கள்!

யோவான் 12:42-43.

இறை வாழ்வு: 

உள்ளில் வந்து உறையும் இறையை,
ஊரார் காணச் சொல்லாமல்.
தள்ளித் தொலைத்த தன் காதலிபோல்,
தயங்கி, மறைப்பவர் கிறித்தவரா?
அள்ளிச் செல்வீர் என்று மயக்கும்,
ஆயிரம் சலுகை பின் செல்லாமல்,
வெள்ளியைப் போல உருக்கும்போதும்,
விண்ணைப் பார்ப்பவர் கிறித்தவரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இன்றையத் தேவை!

இன்றையத் தேவை!

இறையருள் நாடல் இன்றையத் தேவை.
இதை ஈவதுதான் இறை நம்பிக்கை.
குறை பெருத்திருத்தல் நமது வாழ்க்கை.
கிறித்துவில்தான் நிறை நம்பிக்கை!
மறைபொருள் தேடல் மாண்பின் தன்மை;
மாயை நீக்கும் வாக்கின் நன்மை.
திரைமறைவாய் வரும் தீயோன் தீமை,
தெய்வ விழியில் நோக்கின் நன்மை!

-கெர்சோம் செல்லையா.

எங்கள் வழியாய்…..

இறை வாக்கு: யோவான் 12: 38-41.

இறை வாழ்வு:


எங்கள் வழியாய் இறையுரை கேட்டும்,

ஏற்க மறுப்பவர் இங்குண்டு. 

தங்கள் வழியால் விண்ணகம் எட்டும்,

தகுதி நிறைந்தவர் எங்குண்டு?

மங்கள வாழ்வில் நாட்டம் காட்டும்,

மாந்தர் உள்ளிலும் இருளுண்டு. 


திங்கள் ஒளிபோல் மகிழ்ச்சி கூட்டும்,

தெய்வ வழியிலே அருளுண்டு!


ஆமென். 

கெர்சோம் செல்லையா. 

மூளை இருக்கிறதா?

மூளை இருக்கிறதா?

எல்லோருக்கும் மூளையைத் தந்து,
இயக்கவே இறைவன் படைத்தார்.
இல்லை பலர்க்கு, என்று மறுத்து,
இழிஞர் உலகையே உடைத்தார்.
கல்லார் இல்லாக் காட்சி நிறைந்து,
களிக்கவே இறைவன் கொடுத்தார்.
பொல்லாரோயெனில் தமக்கேயெடுத்து,
புவியின் நன்மை கெடுத்தார்!

-கெர்சோம் செல்லையா.