ஊரடங்கு!

ஊரடங்கு!
அடங்க மறுத்துப் போவோர் செல்லும்,
அழகிய சென்னைச் சாலைகளை,
முடங்க வைத்து, அறிவுரையூட்டும்
முதல் ஆசான் குரோனாவாம்.
கிடங்கு போலப் பிறரது இடத்தில்,
கொட்டும் நமது குப்பைகளை,
சடங்கு செய்தல் போலகற்றின்,
சாவு எப்படி வருவானாம்?

-கெர்சோம் செல்லையா.

கொடுக்கும் இறையைத் தடுக்காதே!

தடுக்கும் மனிதனும், கொடுக்கும் இறையும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:29-32.

29  அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

30  வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

31  அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

32  உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

தம்பிகள் மீள்வதைத் தடுக்கும் மனிதர்,

தரணியில் பலபேர் உண்டய்யா.

வெம்பிடும் ஏழையர் வாழ்வடைவர்,

விண்ணின் அணைப்பு கொண்டய்யா.

நம்பிடும் அடியர் மகிழ்ந்துரைப்பர்,

நற்செய்தியாலே மீளய்யா.

எம்பிரான் இயேசு இறையரசர்;

எம்மை என்றும் ஆளய்யா!

ஆமென்.

விரும்பா நோய்கள் ஒழியட்டும்!

விரும்பா நோய்கள் ஒழியட்டும்!

ஒருநாள் வீட்டில் ஒளித்திருந்தால்,
உள்ளே வராது தொற்றென்று,
கொரோனா ஒழிப்புத் திட்டம் தந்தது,
கோலோச்சும் மைய அரசின்று.
திருநாள் ஞாயிறு கூடும் நமக்கும்,
தேவை இறையின் அருளென்று,
விரும்பா நோய்கள் ஒழிந்துபோக,
வீட்டில் வேண்டுவதே நன்று!

-கெர்சோம் செல்லையா.

அன்பற்ற அண்ணன்!

அன்பற்ற அண்ணன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:25-28.

25 அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;26 ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.27 அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.28 அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒழுக்கம் நேர்மை ஊருக்குரைக்கும்,

உள்ளில் அன்பு இல்லையெனில்,

புழுக்கம் கொண்டு, புண்ணாகிடுமே;

புரிந்து, நன்மை செய்வோமா?

அழுக்கை முதற்கண் தன்னிலகற்றும்,

அரிய பண்பு இல்லையெனில்,

மழுக்கம் கண்டு, மண்ணாகிடுமே;

மனம் திரும்பி உய்வோமா?

ஆமென்.

ஏற்கும் அன்பு!

ஏற்கின்ற அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:21-24.21  
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.22  அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.23  கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.24  என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இறந்தவன் எழுந்து வருவதுபோன்று,
இளையவன் வீட்டுள் வருகின்றான்.
பிறந்தநாள் மகிழ்வு தருவதுபோன்று,
பேரின்ப மகிழ்வும் தருகின்றான்.
சிறப்புடை, மோதிரம், செருப்பும் கொடுத்து,
சிறியனைத் தந்தை ஏற்கின்றான்.
மறக்கயியலா விருந்தும் படைத்து,
மன்னிப்பன்பில் சேர்க்கின்றான்.
ஆமென்.

கொரோனா!

தொற்றாது தொற்று நோய்!

இறைவாக்கு: சங்கீதம்/திருப்பாடல் 91

இறைவேண்டல்:

இத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்வாய்,

என்று அனுப்பிய என் இறையே,

அத்தனை காலம் நலமாய் வாழ்வேன்,

அதனால் இல்லை, ஒரு குறையே.

எத்தனை விதமாய் நோய் வந்தாலும்,

எனக்கு மருந்து உன் மறையே.

பித்தன் என்று பிறர் பழித்தாலும்,

பெருகும் அருளால் எனை நிறையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பழுத்த அன்பு!

பழுத்த அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15: 18-20.

18  நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

19  இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

20  எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

கிறித்துவில் வாழ்வு:

அழுக்கு உடையில், அவல வடிவில்,

ஆங்கே ஒருவன் தெரிகின்றான்.

கழுத்து நீட்டிக் காத்தவன் தந்தை,

கண்டு மகனென அறிகின்றான்.

இழுத்து மூடி, ஒளித்திராமல்,

எழுந்து ஓடி அணைக்கின்றான்.

பழுத்த அன்பு, தந்தையில் கண்டேன்;

பரமனும் இதுபோல் இணைக்கின்றான்!

ஆமென்.

பட்டினிக் காலம்!

பட்டினிக் காலம்!

கிறித்துவி வாக்கு: லூக்கா 15:16-17.
16  அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.17  அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
அட்டிலில் உணவு பெருக்கெடுத்து,
அழகு தட்டினில் வழியும்போது,
கொட்டினார் அதனை வெளிப்புறத்து,
கொடாது ஏழை எளியவருக்கு.
பட்டினிக் காலம் என்று ஓன்று,
பலரது வாழ்வில் வரலாமென்று,
சுட்டினார் உவமை கிறித்து அன்று;
சுவையும்கூட மிகமிக நன்று!
ஆமென்.

மதியிலார் நிலை!

மதியிலார் நிலை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:13-15.

13  சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

14  எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

15  அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:

தந்தையின் அன்பை ருசிக்கும் வேளை,

தருவது குறைவென நினைப்போரே,

சொந்தக் கைகள் செய்யும் வேலை,

சொல்கிற செய்தியும் நினைப்பீரே.

அந்தத் தொழிலை இழிவாய்க் கருதி,

அவன் நிலைக்காக அழுவோரே,

மைந்தன் ஒருவன் அடிமையாகும்,

மதி இழப்பிற்கும் அழுவீரே!

ஆமென்.

உடன்பாடில்லா நிலையில்!

உடன்பாடில்லா நிலையில்

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:11-12.

11  பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

12  அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

கிறித்துவில் வாழ்வு:

அடங்காப் பிள்ளையை அடிக்கச்சொன்னது,

ஆண்டவர் அருளிய திருச்சட்டம்.

உடன்பாடில்லா நிலை வந்தாலும்,

உரிமை கொடுப்பதோ அருட்திட்டம்.

முடங்காதவனாய் மறைநூல் கற்றும்,

முதியனின் அன்பு எனில் இல்லை.

கடன்காரன் நான், கனிய உதவும்.

காண்பார் வாழ்வில் உம் சொல்லை!

ஆமென்.