பரிவு!

விலங்கிற்குதவும் மனிதரே!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 14:1-6.

1   ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2   அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.3   இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.4   அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,5   அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.6   அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
விழுந்து விட்டது விலங்குயென்றால்,
விரைந்துதவப் பதறுகிறோம்.
எழுந்து வராதது தலைவருமென்றால்.
ஏங்கித் துடித்துக் கதறுகிறோம்.
அழுது மாள்வது எளியவராதலால்,
அக்கரையெடாது நழுவுகிறோம்.
பழுது என்பது உள்ளிருப்பதால்,
பரிவு வாக்கினால் கழுவுகிறோம்!
ஆமென்.

கோழியின் குஞ்சே!

குஞ்சினைக் காக்கும் கோழி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:34-35.

34  எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.35  இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

குஞ்சினைக் காக்கும் கோழியைப் போன்று,

கிறித்து முயன்றார் அன்னாளில்.

வஞ்சக யூதரோ வாக்கினை வெறுத்து,

வாழ்வினை இழந்தார் பின்னாளில்.

கொஞ்சிடும் குழந்தை என்றே நினைத்து,

கோட்டையாய் காக்கிறார் நன்னாளில்.

மிஞ்சினால் மீண்டும் வருமே அழிவு;

மீள்வோர் பணிகிறார் இன்னாளில்!

ஆமென்.

எருசலேம்!

எருசலேம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:32-33.  

32  அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன்.

33  இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:

புனிதம் என்று புகழ்ந்த இடமும்,

பொய்யரின் கோட்டையாயிற்றே.

மனிதம் வெறுத்த கொலையுங்கூட

மன்னர்க்கு வேட்டையாயிற்றே.

இனிதாய் வாழ விரும்பும் எவரும்,

எதிர்த்து இம்மலை ஏறாரே.

தனியாய் வெல்ல இயேசு சென்றார்;

தம் குருசெடுத்துப் போறாரே!

ஆமென்.

பொல்லார் நடுவில் நல்லார்!

நல்லோரைப் பிறரிலும் கண்டோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:31
  31 அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக்கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். 
கிறித்துவில் வாழ்வு:

கொல்லப் பார்க்கும் அரசனும் கண்டோம்;

கொடுமை அறிந்தோர் காப்பதும் கண்டோம்.


பொல்லா அரசரின் பொய்யும் கண்டோம்;

புனிதரைக் காக்கும் மனிதரும் கண்டோம்.

நல்லோர் என்பார் பிறரிலும் கண்டோம்;

நயவஞ்சகத்தின் நடுவிலும் கண்டோம்.

எல்லையில்லா அன்பையும் கண்டோம்;

எங்குயென்றால், இயேசுவில் கண்டோம்!

ஆமென்.

இந்தியன் யார்?

இந்தியன் யார்?

சாதியைத் தாண்டிப் பார்க்கிறவன்,
சரியிணை என்று சேர்க்கிறவன்,
ஆதிக்க ஆளுமை வெறுக்கிறவன்,
அவன்தான் இனிமேல் இந்தியன்.

சமயம் கடந்து பாராதான்,
சரியிணை என்று சேராதான்,
அமைதி வாழ்வை வெறுக்கின்றான்;
அவன்தான் எதிர்ப்பு இந்தியன்!

-கெர்சோம் செல்லையா.

விருந்து வீடு!

கிறித்துவின் வாக்கு:லூக்கா 13:28-30.

28 – நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
29 – கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30 – அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
எட்டு திக்கிலும் வந்தமர்வார்,
இறையரசில் விருந்துண்வார்.
கெட்டு விட்டார் அது காண்பார்,
கிறித்திலாது வருந்துகிறார்.
திட்டு கொட்டும் இந்நாட்டார்,
திறவாக் கதவைத் தட்டுகிறார்.
விட்டு விட்டீர் வாய்ப்பென்பார்,
விருந்து வீட்டைப் பூட்டுகிறார்!
ஆமென்.

வளர்ச்சி?

ஒரு சிலர் வளர்வதுதான் வளர்ச்சியா?

ஓரிரு முதலைகள் வாழும் குளத்தில்,
உயிர்தப்ப மீன்கள் என்செய்யும்?
ஈரிரு முதலாளிகள் செழிப்பதில்,
இந்தியா எப்படி முன்னேறும்?
பாரிதை வளர்ச்சி என்றுரைத்தாலும்,
பாவியால் ஏற்க முடியலையே.
யாரிதை நிறுத்தி, எளியரைக் காப்பார்?
இறையரசன்றி விடிவிலையே!
-கெர்சோம் செல்லையா.

அறிவோம், அறிவார்!

அறிவார் அவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:25-27.

25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அன்பரைக் கண்டோம் என்பதல்ல;
அவருரை கேட்டோம் என்றுமல்ல;
இன்பமாம் விருந்தில் பங்குமல்ல;
இயேசுவுள் வருதலே கிறித்தவமாம்.
வன்முறை என்றும் நல்லதல்ல;
வஞ்சக நெஞ்சும் நன்மையல்ல.
நன்முறை கிறித்துவின் அன்பேயாம்;
நடந்தால் அவரும் அறிவாராம்!
ஆமென்.

இடுக்கமான வாசல்!

இடுக்கமான வாசல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா13:22-24.

22அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள் தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார்.
23அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
ஒடுக்கும் மனிதர் கெடுக்கும் நாளில்,
உண்மை எங்கே ஒளித்திருக்கும்?
இடுக்கம் என்ற வாசலைப் பாரும்;
இதனுள் மீட்பாய் விழித்திருக்கும்.
நடுக்கம் தந்தோர் வழியும் பாரும்;
நால்வழிச் சாலைபோல் விரிந்திருக்கும்.
தடுக்கும் காவல் அடுத்தே இருக்கும்;
தண்டனைத் தீர்ப்பில் தெரிந்திருக்கும்!
ஆமென்.






புளித்த மா!

புளித்த மாவு போல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா13:20-21.

20மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கொஞ்சம் புளித்த மாவைச் சேர்த்தால்,
குடுவை முழுதும் புளிக்கிறது.
வஞ்சம் இல்லார் நம்மில் சேர்ந்தால்,
வாழ்வும் மகிழ்வால் களிக்கிறது.
அஞ்சும் தீமை அரசுள் நுழைந்தால்,
அதுவே அனைத்தினை அழிக்கிறது.
கெஞ்சும் நமக்கு அமைதி எங்கே?
கிறித்து அரசே அளிக்கிறது!
ஆமென்.