திருந்துதலே விருந்து!

திருந்துதலே விருந்து!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:30-31.  

கிறித்துவில் வாழ்வு: 
விருந்தினரென்று வீட்டில் வந்து,  
விருந்தளிப்பவர் இயேசு.  
இருந்துமில்லா கண்கள் திறந்து, 
இறைவன் முன்பு பேசு.  
வருந்திச்சேர்த்தும் பயன் தராது,   
வாழ்வளியா காசு.   
திருந்துதல்தான் விருந்து இன்று; 

தேவையற்றவை வீசு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

பின்னால் நிற்கும் இயேசுவுக்கே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:28-29.  

கிறித்துவில் வாழ்வு:  
முன்பின் தெரியார் என்றாலும், 
முகம் அறியார் வந்தாலும், 
அன்பாய் ஏற்று அமுதளிக்கும், 
அரிய பண்பைக் கொண்டோமா?
இன்னாள் இப்படி நாம் செய்யும்,      
எல்லா நன்மை உதவிகளும்,  
பின்னால் நிற்கும் இயேசுவுக்காம்; 
பிறரில் இறையைக் கண்டோமா? 
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.  

முன்பே உரைத்தார்!

முன்னர் உரைத்தது நடந்திருந்தும்….
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:25:-27. 

கிறித்துவில் வாழ்வு:  
முன்னே அறிவோர் உரைத்திருந்தும், 
மோசே தொடங்கி வரைத்திருந்தும், 
பின்னே பலரெதிர் பார்த்திருந்தும்,     
பேதமை அடியரில் அகலலையே.  
சொன்னது போன்றே நடந்திருந்தும், 
சொற்படி உயிர்த்தவர் உடனிருந்தும்,  
என்னில மக்களை மீட்டெடுக்கும்,  
இறையறிவின்னும் புகலலையே!  
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.  

நம்பவில்லை!

நம்பவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:22-24.  

கிறித்துவில் வாழ்வு:  
பெண்கள் வாக்கும் கேட்பதில்லை; 
பெரியோர் அறிவும் ஏற்பதில்லை. 
கண்கள் இருந்தும் திறப்பதில்லை. 

காரிருள் நெஞ்சும் சிறப்பதில்லை.  

நண்பா, நம்மிலும் இந்த நிலை. 
நம்ப மறுக்கும் மந்த நிலை.  

பண்பால் சிறப்பது எந்த நிலை?  
பற்றெனப் பற்றும் அந்த நிலை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.

முடிவாய் வருகிற உயிர்ப்பு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:17-21.  

கிறித்துவில் வாழ்வு: 
அடியார் என்று பெயர் பெற்றும், 
அறியாமையும் தொடர்கிறது.     
படியார் பாரார்; அது வரைக்கும்,     
பாவப் பண்பும் படர்கிறது.    
துடியாய்த் துடித்து இறந்திருந்தும், 
தூயனுயிர்ப்பும் தெரிகிறது.  
முடிவாய் வருவது உயிர்ப்பாகும்;      
முக்காலமும் புரிகிறது!  
ஆமென். 
-கெர்சோம் செல்லையா.  

நெஞ்சில் காண்போம்!

நெஞ்சில் காண்போம்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:13-16.  

கிறித்துவில் வாழ்வு:  
நன்றாய் வேண்டல் செய்கின்றோம்;  
நல்லிறை நூலும் கற்கின்றோம்.  
சென்றார் வந்தார் நினையாமல்,  
செய்தியுரைத்தும் நிற்கின்றோம்.
என்றாலும் நாம் குறைகின்றோம்.  
எங்கெல்லாமோ பார்க்கின்றோம்.  
நின்றாள்கின்ற இறைமகனை,  
நெஞ்சில்கண்டு ஆர்ப்பரிப்போம்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

ஓடும் பேதுரு!

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை மறுத்த பேதுரு இன்று,  
முதல்வனாய் அறிய ஓடுகின்றார்.  
இம்முறை கேட்பது சரியோயென்று,  
இயேசுவின் உடலைத் தேடுகின்றார். 
செம்மறை காட்டும் சீலைகள் கண்டு.  
சிந்தை நடுங்கவே ஆடுகின்றார்.  
தம்மிடம் இருக்கும் ஐயம் கொண்டு, 
தயக்கமுற்றவர் வாடுகின்றார்!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

வீண் பேச்சா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:8-11.  

கிறித்துவில் வாழ்வு: 
பித்தென எண்ணிப் பிதற்றல் என்றது, 
பிரறல்ல, இயேசுவின் பிள்ளைகளே.
ஒத்துக் கொள்ள அவரை வைத்தது 
உயிர்த்த இயேசுவின் கல்லறையே.  
செத்தவர் உயிர்த்து எழும்பி வருவது, 
செரிக்க இயலா வல்லமையே.  
எத்தனையோ பேர் இதனைக் கண்டு,  
இயேசுவை நம்புதல் நல்லருளே!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

நினைவுகூருங்கள்!

நினைவுகூருங்கள்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:7  

கிறித்துவில் வாழ்வு: 
முன்பே உரைத்த இறைவாக்கு,  
முழுதும் நிகழ்வது நீ கண்டு,    

இன்றே இயேசுவை ஏற்றுக்கொள்;  
இனிய வாழ்வு உனக்குண்டு. 
அன்பே நமக்கு வழியென்று,  
ஆண்டவர் சொல்வது நீ கேட்டு,  
நன்றே உன்னைத் திருத்திக்கொள்.  
நன்மை தரவே இப்பாட்டு!  
-ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

இயேசுவின் உயிர்ப்பு!

இயேசுவின் உயிர்ப்பு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:5-6.  

கிறித்துவில் வாழ்வு:  


இறந்தவர் கிடக்கிற கூட்டத்திலே,  

எழுந்தவர் என்பவர் ஒருவரில்லை.   

பிறந்தவர் முடிக்கிற தோட்டத்திலே, 


பின்னர் நிகழ்வதும் தெரிவதில்லை. 


சிறந்தவர் இயேசு எழுகையிலே, 


சிதறின பழமை எண்ணங்களே. 


திறந்தவர் அவரைத் தொழுகையிலே, 

 
தெரியுது உயிர்ப்பின் வண்ணங்களே! 


ஆமென்.