என்னிறைவன்!
அன்பு,அறிவு, ஆற்றல், அமைதி,
அனைத்தும் நிறைந்தவர் என்னிறைவன்.
உண்மை, ஒழுக்கம், நேர்மை, தாழ்மை,
ஒன்றிலும் குறையார் என்னிறைவன்.
பண்பின் வடிவம் ஒருவரில் கண்டேன்;
படைத்தருள்கிறார் என்னிறைவன்.
நன்மை செய்தல் வாழ்வெனச் சொல்லி,
நானிலம் ஆள்கிறார் என்னிறைவன்!
-செல்லையா.
பிள்ளைப் பேறு!
நல்வழி:
பற்றும் உறுதி இல்லாதவனாய்,
பன்னிரு ஆண்டுகள் நானலைந்தேன்.
சற்றும் நேர்மை புரியாதவனாய்,
சகதியில் விழுந்து சீர்குலைந்தேன்.
சுற்றம் உணர, சூழ்நிலை வெல்ல,
சொல்லொளி காட்டி எனையிழுத்தார்.
முற்றும் மீட்டு முழுவாழ்வளிக்க,
முதலில் பிள்ளை என்றழைத்தார்!
ஆமென்.
-செல்லையா.
இறையொளி!
இறையொளி!
நற்செய்தி: யோவான் 1:10-11
நல்வழி:
எந்த மாந்தரும் ஒளியைப் பெறுவார்;
இறையும் மகனாய் வெளிப்பட்டார்.
இந்த ஒளியைப் பெற்றவர் தருவார்;
எங்கும் ஒளியை பரப்பிட்டார்.
சொந்த உறவோ ஏற்க மறுத்தார்;
சொல்லால் செயலால் தடுத்திட்டார்.
அந்த ஒளியை அடக்குதல் எளிதோ?
ஆதவன் முன்பு அடங்கிட்டார்!
ஆமென்.
-செல்லையா.
ஒளியும், விளக்கும்!
ஒளி வேறு, விளக்கு வேறு!
நற்செய்தி வாக்கு: யோவான்: 1:6-9.
6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
நல்வழி பாட்டு:
வெளிச்சம் கொடுக்கும் விளக்கானாலும்,
விளக்கும் வெளிச்சமும் வேறாகும்.
ஒளியை வழங்கும் யோவாணுர்ந்து,
உரைக்கும் வாக்கும் பேறாகும்.
தெளிவைப் பெற்ற அடியாரெவரும்,
தெய்வம் வாழ்த்தும் விளக்காகும்.
எளிமை, தாழ்மை, தூய்மை, அன்பு,
இவையே இயேசுவின் ஒளியாகும்!
ஆமென்.
-செல்லையா.
ஒளி!
ஒளி!
நற்செய்தி வாக்கு: யோவான் 1:4-5.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
நல்வழி பாட்டு:
இருளாயிருக்கும் இப்புவியெங்கும்,
இறையே ஒளியாய் இருக்கின்றார்.
அருளாயதனை நமக்கு ஈந்தும்,
அறிவில்லாதார் வெறுக்கின்றார்.
ஒருநாளேனும் உண்மை உணர்வார்;
உலகம் ஒளியை வெல்லாது.
பொருளாயிதனைப் பாடி வடிப்பேன்;
புனைந்துரைத்தல் இல்லாது!
ஆமென்.
-செல்லையா.
வேண்டு!
அருள் வடிய வேண்டு!
தொடக்கம் அறியாத் தொற்று ஓன்று,
தொண்டையின் கீழே வருகிறது.
கிடக்கும் இடமும், மருந்துமிலாது,
கேட்கவே அச்சம் தருகிறது.
அடக்கம், எரித்தல் சடங்கும் இன்று,
ஆட்களில்லாமல் முடிகிறது.
முடக்கும் தொற்று முடிய வேண்டு.
முன்னே இறையருள் வடிகிறது!
-செல்லையா.
இறை வாழ்க!
இறை வாழ்க!
நற்செய்தி வாக்கு: யோவான் 1:1-3.
- நல்வழி பாட்டு:
- படைப்பினை எவரும் பார்க்கும் முன்பே,
- படைத்தவர் இருந்தார்; அவர் வாழ்க!
- விடையறியாரும் வேண்டும் முன்னே,
- விண் வாக்கானார்; அவர் வாழ்க!
- கிடைத்திட அரிதாம் மீட்டிடும் அருளே,
- கிறித்துவாய் வந்தார்; அவர் வாழ்க!
- உடைத்திடுவோரும் உயிர் வாழ்வதற்கே,
- உயிரும் ஈந்தார்; அவர் வாழ்க!
- ஆமென்.
- -செல்லையா.
நாடோறும் தொழுவோம்!
கிறித்துவில் வாழ்வு:
நாடோறும் கோயில் சென்று,
நன்கு தொழுதார் அந்நாளில்.
கூடேறும் பறவை நினைத்து,
கோயில் நோக்கார் இந்நாளில்.
ஈடேறும் எண்ணம் கொண்டோர்,
என்றும் தொழுவார் தம்முள்ளில்.
காடோடும், காரிருள் ஓடும்;
கடவுள் ஆள்வார் நம்முள்ளில்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
விண் சென்றார் விண்ணரசர்!
விண் சென்றார் விண்ணரசர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24: 50-51.
கிறித்துவில் வாழ்வு:
எங்கிருந்து வந்தாரோ,
அங்கு சென்றார் மீட்பர்.
இங்கு எவர் எண்வாரோ,
இறை வாக்கு கேட்பர்.
தங்குமிடம் இது இல்லை.
தாழ்பணிந்தால் அறிவர்.
பொங்குமருள் பெருகிவர,
பேரின்பம் பெறுவர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
வாழ்த்து!
வெற்றி பெற்ற முதல்வரை வாழ்த்துவோம்!
குற்ற முரைத்தார் குழிகளில் வீழ,
கோட்டை பிடித்த முதல்வரே,
உற்றவர் இனிமேல், உமக்கு யார் யார்?
உண்மையில் ஏழை மனிதரே!
தொற்றுகள் போன்று, ஒட்டியே வருவார்,
தூய்மை வெறுக்கும் தரகரே.
பற்றினை என்றும், எளியரில் வைத்து,
பாரை ஆள்வீர் தலைவரே!
-கெர்சோம் செல்லையா
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டெரியட் காலனி,
சென்னை-600099.