|
|||||
|
|||||
|
குறைகூறும் கூட்டம்!
குறைகூறும் கூட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 7:31-32.
31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
குனிவது குற்றம், நிமிர்வது குற்றம்,
குறைதான் கூறும் நம் சுற்றம்.
இனிமை பெற்றும், ஏற்றம் உற்றும்,
எண்ணம் கெட்டால் பிதற்றும்.
தனியாய் அமர்ந்து, தம்குறை உணர்ந்து,
தம்மைத் திருத்துவதே மாற்றம்.
பணிவாய் நடந்து, பண்புகள் புகழ்ந்து,
பாராட்டார்க்கு ஏமாற்றம்!
ஆமென்.
யார் பெரியவர்?
யார் பெரியவர்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:27-28.
27 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.
28 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தன்னைத்தானே உயர்த்தும் உலகில்,
தாழ்மை அணிந்து மொழிபவர் யார்?
முன்னே பின்னே அறியாதவர்க்கும்,
முக அக அன்பைப் பொழிபவர் யார்?
இன்னாள் ஊழியர் யோவான்போன்று
எளிமை கொண்டால் உயர்ந்திடுவார்.
சொன்னால் கேட்க மறுத்து முரண்டால்,
சோதனை நாளில் அயர்ந்திடுவார்!
ஆமென்.
காற்றில் அசையும் நாணலல்ல!
காற்றில் அசையும் நாணலல்ல!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:24-26.
24 யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
25 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
காற்றில் அசையும் நாணலல்ல,
கடவுளின் ஈவாம் பற்றுறுதி.
தோற்று மறையும் தூளுமல்ல,
தூய்மை நாடும் நம்முறுதி.
ஏற்று வாழும் கிறித்தவரே,
இயேசு யாரெனச் சொல்வோமே.
மாற்றுவோம் பலர் ஐயங்களை;
மாறாப் பற்றால் வெல்வோமே!
ஆமென்.
நாட்டை வளைத்தது போதாதென்று,
நாட்டை வளைத்தது போதாதென்று,
நாம் நுழைந்தோம் அவர் காட்டில்.
வீட்டை இழந்த விலங்குகள் இன்று,
விருந்திற்கு வந்தார் நம் வீட்டில்.
மாட்டை அடித்து, மானையும் பிடித்து
மழைதரும் மரத்தையும் அழிக்கின்றோம்.
காட்டில் வாழும் விலங்கிடமிருந்து,
கற்க எப்போது விழிக்கின்றோம்?
-கெர்சோம் செல்லையா.
கண்ணற்றோர் காண்கின்றார்!
கண்ணற்றோர் காண்கின்றார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:20-23.
20 அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
21 அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர்குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
22 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
23 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
கண்ணற்றோர் காண்கின்றார்;
காதற்றோர் கேட்கின்றார்.
எண்ணற்றோர் பிணி நீங்கி,
எழுந்தின்று நடக்கின்றார்.
உண்ணாது அழுபவரே,
உம் கண்ணீர் அவர் அறிவார்.
என்னாளும் நிலைநிற்கும்,
இறைவாக்கால் அருள் புரிவார்!
ஆமென்.
ஐயம் கொள்ளும் அடியவரே!
ஐயம் கொள்ளும் அடியவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:17-19.
17 இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
கிறித்துவில் வாழ்வு:
ஆவியில் பிறந்த அடியவரும்,
அவ்வப்போதுப் பதறுகிறார்.
பாவியர் துன்பம் கொடுப்பதனால்,
பார்வை விலகித் தவறுகிறார்.
சாவினை நினைத்துச் சாகாமல்,
சரியாய் அவர் பணி செய்திடுவார்,
மேவிய மீட்பைப் பெறுவதுடன்,
மேலும் விண்முடி எய்திடுவார்!
ஆமென்.
யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?
யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:16-17.
16 எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
கிறித்துவில் வாழ்வு:
ஊர் புகழும் புகழ்ச்சி எல்லாம்,
உண்மையாக இருக்குமோ?
பேர் பெருமை என்பது எல்லாம்,
பெரிதாய் நன்மை பெருக்குமோ?
நேர்மையென்று இருந்தால் மட்டும்,
நிலைக்கும் அந்த புகழ்ச்சியே.
பார் படைத்த இறை வழியில்,
பாராப் பெருமை இகழ்ச்சியே!
ஆமென்.
இளைஞனே எழுந்திரு!
இளைஞனே எழுந்திரு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:11-15.
11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
கிறித்துவில் வாழ்வு:
எண்ணில் அடங்கா இளவயதோர்,
இன்றும் இறந்து கிடக்கின்றார்.
பண்ணும் செயலின் விளைவறியார்,
பாவம் விரும்பி நடக்கின்றார்.
மண்ணே வாழ்வு என மயங்கும்,
மக்கள் தெளியத் தொட்டருளும்.
விண்ணே இரங்கும், விளிக்கின்றேன்.
விரைந்து இவரை மீட்டருளும்!
ஆமென்.
இப்படிப்பட்ட பற்றுறுதி!
இப்படிப்பட்ட பற்றுறுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:9-10.
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பற்று கொண்டோம் என்றுகூறி,
பலபேர் முன்பு உயர்த்தும் நாம்,
சற்று நேரம் நமது பற்றைச்
சரிதானோவென ஆய்வோம்.
வெற்று வேட்டாய் வெடியாதிருக்க,
வேண்டும் பற்றில் தாழ்மை.
கற்று நாமும் தாழாவிட்டால்,
காண்போம் வாழ்வில் ஏழ்மை!
ஆமென்.