நலம் எது என்று நாம் கேட்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.
“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
ஏன், எதற்கு, எப்படி என்று,
எத்தனை கேள்வி நாம் கேட்டோம்?
வான் மைந்தன் நம்முன் இன்று,
வந்து கேட்டால் என் சொல்வோம்?
நான் என்னும் அகந்தை விட்டு,
நலமெது என்று நாம் கேட்போம்.
தேன் இனிமை வாக்கு தொட்டு,
தூயவர் திட்டம் தெரிந்திடுவோம்.
ஆமென்.
Day: November 6, 2016
ஆணையுரிமை யார் தந்தார்?
ஆணையுரிமை யார் தந்தார்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:27-28.
“அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
ஆணையுரிமை யார் தந்தாரென,
அறவழி அடைக்கும் அறிஞரே,
சாணை பிடிக்காக் கத்தி அதுவே;
சண்டையிடும் நீர் வறியரே.
கோணலை நேர்மை என்றேயுரைத்துக்
கொடுமை செய்யும் தலைவரே,
வீணராய் இப்படி நடப்பவர் முடிவில்,
வெம்பி நொந்து அலைவரே!
ஆமென்.
பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:25-26.
” நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்’ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
எத்தனை எத்தனையோ முறைகள்
எளிதாய் தவறுகள் நாமிழைத்தோம்.
அத்தனையும் அவர் மன்னித்தார்;
அதனால்தானே உயிர் பிழைத்தோம்.
இத்தனை ஆண்டுகள் பெற்றிருந்தும்,
எங்கே, எவர்க்கு மன்னித்தோம்?
பித்தினை விட்டே திருந்திடுவோம்;
பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
ஆமென்.