பார் மனிதா பார்!

இப்படி மனிதர் இருக்கையிலே,
யார்தான் வந்து உதவிடுவார்?
அப்படி உதவும் மனிதர்தான்
ஆண்டவர் சாயலைக் காட்டுகிறார்!
– கெர்சோம் செல்லையா.
Amazing! Isn’t it? —
Photo: Amazing! Isn't it?
 

நல்வாழ்த்து!

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!
புரிந்துகொள்வோம், வாருங்கள்!

வென்றவர் உரைப்பது இங்கு வேதம்!
வேண்டாம் இனி வீண் விவாதம்!
சென்றவர் நிலையை எண்ணிப் பாரும்;
சேர்ப்பது செயலின் விளைவாகும்!

வாழ்க மக்களாட்சி!
வரவேண்டும் இறையாட்சி!

– கெர்சோம் செல்லையா.

நம்புவோம் நற்செய்தியை

இறைமகன் வாக்கைக் கேட்போமா?
இனிய வாழ்வைப் பெறுவோமா?
நல்வாழ்த்து:
பார்வை அற்றோர் பார்த்திட வேண்டும்;
படைத்தவர் வாக்கை ஓதுகிறேன்.
நேர்மை பெற்று நிமிர்ந்திட வேண்டும்;
நெருப்புக் கனலை ஊதுகிறேன்.
கோர்வையாக்கிக் கொடுத்திட அறியேன்.
குறைகள் உண்டு, வாடுகிறேன்.
ஆர்வம் கொண்டு செய்யும் தொண்டு;
ஆண்டவர்க்கென்று  பாடுகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 26:1-2.
இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும்.
இயேசுவைக் கொல்ல சதித்திட்டம்.
“இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம், ‘ பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார் ‘ என்றார்.”
நல்வாழ்வு:
பழுதிலா ஆட்டைப் பலியாய் வெட்டிப்
பாவம் போக்கினார் அன்று.
தொழுதிடும் அடியார் தூய்மையாவார்,
தெய்வப் பலியில் இன்று!
அழுது புலம்பும் நிலையை விட்டு,
ஆண்டவர் வழியை நம்பு.
எழுதிய வாக்கை ஏற்பவருக்கு,
இயேசு தருவார் மீட்பு!
ஆமென்.

நல்வாக்கு

வாழவைக்கும் வாக்கு!

 நல்வாழ்த்து:
அறிய இயலா இறைவனே,
அறிந்திட உம்மை வாழ்த்துகிறேன்.
சிறிய குழந்தைபோல் நானே
சீர்பட என்னைத் தாழ்த்துகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:44-46.
“அதற்கு அவர்கள், ‘ ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ‘ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘ மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். ” 
நல்வாழ்வு:
இல்லார் வடிவில் இறைவன் வருவார்;
நல்லார் அறிந்து நன்மை செய்வார்.
கல்லார் அறியார், கடவுளை மறுப்பார்;
பொல்லாராகிப் போக்கிடம் இழப்பார்!
ஆமென்.

இறைவாக்கு இனிய வாக்கு!

இனிய வாக்கு இறைவனின் வாக்கு!

நல்வாழ்த்து:
எள்ளி நகையாடும்
எதிரி முன்னிலையில்
எனக்கு அச்சமில்லை;
என்னேசு என்னுடனே.
தள்ளி விடும் மாந்தர்
தவறாய் நோக்குகையில்,
தாழ்ச்சி அடைவதில்லை;
தலைவனைப் போற்றினேனே!
நல்வாக்கு: மத்தேயு 25:41-43.
“பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘ சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ‘ என்பார்.”
 
நல்வாழ்வு:
பசிக்கு உணவளிப்போம்;
பருகிட நீர் கொடுப்போம்.
வசிக்க இடம் தருவோம்;
வாழ வழியுரைப்போம்.
புசிக்கும் ஏழையரின்
புன்னகை நெஞ்சந்தான்,
ருசிக்கும் இறையன்பு;
என்றும் நினைந்திடுவோம்!
ஆமென்.

கேட்போமா இறைவாக்கு!

இனிய வாழ்வு தரும் இறைவாக்கு!

 நல்வாழ்த்து!
உயிர்த்த இயேசுவை வாழ்த்துகிறேன்;
உயிராயிருப்பதால் வாழ்த்துகிறேன்.
பயிற்சிக்காகத் துன்பங்கள்
பரிசாய் வரினும் வாழ்த்துகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:37-40.
”அதற்கு நேர்மையாளர்கள் ‘ ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ‘ என்று கேட்பார்கள். அதற்கு அரசர், ‘ மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ‘ எனப் பதிலளிப்பார்.”
நல்வாழ்வு:
இல்லாதவர்க்கு இரங்கிக் கொடுத்தால்,
ஈசன் கணக்கில் கடனாகும்.
எல்லாம் இயேசு என்று நினைத்தால்,
இனிய வாழ்வும் திடனாகும்.
பொல்லார் நல்லார் எனப் பிரிக்காமல்
புரியும் தொண்டே உயர்வாகும்.
சொல்லால் கூறிச் சென்றுவிடாமல்,
செயலில் வடித்தால் பெயர்கூறும்!
ஆமென்.

நற்செய்தி

நற்செய்தியால் நம்மைத் திருத்துவோமா?

நல்வாழ்த்து:
கொடுக்கும்போது புகழ்கின்றேன்.
எடுத்தபின் ஏனோ மறக்கின்றேன்.
தொடுத்து இறையைப் புகழ்வதற்குத்
தூய்மை வேண்டி நிற்கின்றேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:34-36.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘ என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ‘ என்பார்.” 
நல்வாழ்வு:
கிறித்தவக் கூட்டத்து பெருமக்களே,
கிறித்துவின் வாக்கைக் கேளுங்களே.
வெறித்தனக் கொள்கைகள் விட்டுவிட்டு,
வெளியே வந்து உதவுங்களே.
பொறிதனில் விழுந்த எலியினைப்போல்
புரியா ஏழையர் ஏங்குகின்றார்.
அறிவின் பாதையில் அவர் வருவார்;
அன்புடன் உதவி செய்யுங்களே!
ஆமென்.

இன்றைய நற்செய்தி!

இன்றும் இறைவாக்கு கேட்போமா?

நல்வாழ்த்து:
உழைப்பில் நேர்மை இருக்குமென்றால்
உண்மையில் அதுதான் இறைவாழ்த்து.
பிழைகள் உணர்ந்து திருந்துவதுதான்
பெருமை சேர்க்கும் நல்வாழ்வு!
நல்வாக்கு:
மத்தேயு 25:31-33.
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு:
 ”வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.”
நல்வாழ்வு:
ஆட்டு மந்தையைப் பிரிப்பது போன்று,
நாட்டு மக்களைப் பிரிப்பார் அன்று.
கூட்டிலெங்கும் குறையே இன்று;
காட்டும்போது கழுவிடும் நன்று!
ஆமென்.