உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்!

நற்செய்தி: யோவான் 5:29.

29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

நல்வழி:

நன்மை செய்வோர் உயிர்த்தெழுந்து,

நல்லிறையோடு ஆண்டிடுவார்.

வன்முறையாளரும் எழும்பி வந்து,

வாடா நெருப்பில் மாண்டிடுவார்.

அன்பின் வடிவாம் மகன் அன்று,

அவரவர் பயனை அளந்திடுவார்.

இன்று எதிர்த்து இகழ்பவரோ,

இனிய மீட்பை இழந்திடுவார்!

ஆமென்.

கல்லறையும் கேட்கும்!

கல்லறையும் கேட்கும்!

நற்செய்தி: யோவான் 5:28.

28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

நல்வழி:

கல்லறைக்கும் காது உண்டு;

கடவுட்சொல் அது கேட்கும்.

நல்லவர்க்கும் வாழ்வுண்டு.

நம்பிக்கையே நமை மீட்கும்.

சில்லறைக்கும் துரு உண்டு.

சீர்வாக்குச் சான்று தரும்.

இல்லையென்றால் எது உண்டு?

இரண்டுமுறை சாவு வரும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.