இறைவேண்டல்

நல்வாழ்த்து:
கேட்கும் ஏழையர் பெறுவதற்கு,
கிறித்துவின் அருளைக் கேட்கின்றோம்.
மீட்பைக் கண்கள் காண்பதற்கு,
மேலும் நெஞ்சைத் திறக்கின்றோம்.
வேட்கை வேறு எதுவுமில்லை.
விருப்பம் உமதே தொழுகின்றோம்.
நாட்கள் வேண்டும் உழைப்பதற்கு;
நம்பி உம்மைப் பணிகின்றோம்!

நல்வாக்கு: மத்தேயு 26:36-37.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு:

“பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘ நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.”

நல்வாழ்வு:

அழுதிட ஆயிரம் குறையிருந்தும்,
அவற்றை ஆண்டவர் ஒதுக்கிவிட்டு,
தொழுது இறையிடம் கேட்டதெல்லாம்
தொலைந்தோர் மீட்பைக் குறித்தாமே.
விழுந்து வேண்டும் இறைமகனின்
விருப்பை இன்று அறிந்துவிட்டு,
எழுந்து நமக்காய் அழுவதெல்லாம்,
ஏற்றது இல்லை அறிவோமே!
ஆமென்.

Leave a Reply