அங்கு வந்த பெண்கள் நடுவில்,
அன்னை மரி நிற்பது கண்டு,
தங்க இடமும் தகுந்த வாழ்வும்,
தருகின்ற இயேசு பொழிகிறார்.
பொங்கு சினமாய் வாழ்ந்த யோவான்,
புரிந்து இன்று அன்பு கொண்டு,
எங்கு முள்ள முதியரைப் பேணும்,
ஏற்பாட்டை வழி மொழிகிறார்!
(யோவான் 19:25-27)
The Truth Will Make You Free
அங்கு வந்த பெண்கள் நடுவில்,
அன்னை மரி நிற்பது கண்டு,
தங்க இடமும் தகுந்த வாழ்வும்,
தருகின்ற இயேசு பொழிகிறார்.
பொங்கு சினமாய் வாழ்ந்த யோவான்,
புரிந்து இன்று அன்பு கொண்டு,
எங்கு முள்ள முதியரைப் பேணும்,
ஏற்பாட்டை வழி மொழிகிறார்!
(யோவான் 19:25-27)
தன்னினத்தவரை காப்பதாய் நினைத்து,
தவறிச் செல்வார் நடுவினிலே,
இன்னொரு மனிதர் தொங்குதல் கண்டு,
இரண்டு கள்வரும் நிந்தித்தார்.
அந்நிலை வேளையில் இயேசுவின் வாக்கு,
அவரில் ஒருவரை உணர்த்திடவே,
மன்னனாய் ஏற்கும் பற்றினைக் கொண்டு,
மகிழ விண்ணைச் சந்தித்தார்!
(மத்தேயு 27:44 & லூக்கா 23:39-43)
2026–ஆண்டின் தேர்தல்!
தேறுதல் தருகிற தலைவர் என்று,
தேர்தலில் வாக்கு அளிக்கிறோம்.
மீறுதல் செய்வார், மிரட்டவும் வருவார்;
மீட்பார் இலாது முழிக்கிறோம்.
மாறுதல் என்றால் மாயையே இன்று!
மனம் தளராது விளிக்கிறோம்.
ஆறுதல் வேண்டும்; யார் இனி தருவார்?
ஆண்டவர் ஆளச் செழிக்கிறோம்!
-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com
வெறுத்தலை விதைத்து, வெறுத்தலை வளர்த்து,
வெறுப்பின் விளைச்சல் அறியார் முன்,
பொறுத்தலே இறைவழி, பொறுப்பீர் என்று,
புனிதர் சிலுவையில் வேண்டுகிறார்.
அறுத்தலை விரும்பி, அறுத்தலில் விழுந்து,
அழுகிற மாந்தர் திரும்பிப் பின்,
நிறுத்திட, நாமும் பொறுத்தலை இன்று,
நினைந்து வாழவும், தூண்டுகிறார்!
(லூக்கா 23:34).
முரண்டு பிடிக்கும் தன்மை இல்லாமல்,
முதலில் இயேசு தனை விட்டார்.
இரண்டு கள்வர் இடம் வலம் தொங்க,
இழிவில் அறையவே விட்டார்.
திரண்டு வந்த வழிப் போக்கினரால்,
தீயன் என்றும் பழிக்கப் பட்டார்.
அரண்டு மறைந்த அடியார் எங்கே?
அவராலுமே கை விடப் பட்டார்!
(மாற்கு 15).
கொல்கதா என்னும் கொலைக்கள மலைக்கு,
குருசு சுமந்தவர் நடக்கிறார்.
செல்கிற வழியில் சீர் மனப் பெண்கள்,
சிறிது வெறியம் கொடுக்கிறார்.
நல்நினைவோடு தன் கடன் முடிக்க,
நடக்கும் ஏசுவோ தடுக்கிறார்.
வெல்கிற எண்ணம் கொள்கிற தலைக்கு,
வெறியம் எதற்கு? உடைக்கிறார்!
(மாற்கு 15).
நூறு முறையில் விசாரித்தாலும் ,
நொடி தவறா இயேசுவை,
ஆறு தவணை விசாரித்தார்கள்,
அந்த இரவு நேரத்தில்.
கூறு கெட்ட மதியீனரால்,
கொணரப்பட்ட பழிகளை,
தாறு மாறாக்குகின்றார்;
தம் மௌன சாரத்தில்!
(லூக்கா 22 & 23)
குற்றம் அற்றவர் என்றறிந்தாலும்,
கொல்லத் துடிக்குது ஒரு கூட்டம்.
முற்றம் வந்து முழக்கம் போட்டு,
முடிவு கட்டிட வெறி ஊட்டும்.
கற்றவரோயெனில் காண மறுக்கிறார்.
கவலை அவர்க்கு பரி வட்டம்.
பெற்ற தண்டனை சிலுவைச் சாவு;
பின்னர் புரியும் இறை திட்டம்!
(லூக்கா 23)
தள்ளப்பட்டுத் தண்டனை அடையும்
தவறு இழையா அவர் தலையில்,
முள்ளின் முடியை வைத்தும் அடித்தார்,
முரட்டுப் படை வீரர் அன்று.
வெள்ளம் பாய்ச்ச, ஆழத் திறக்கும்,
வீறு கொள்கிற ஏரைப் போல்,
கள்ளம் நினையார் முதுகும் கிழித்தார்,
கசையடி முப்பத்தொன்பதென்று!
(மத்தேயு 27:27-31)
பிழையொன்றுமில்லார் என்று அறிந்தும்,
பிலாத்து கொல்லக் கொடுக்கின்றார்.
மழையென்று வந்த நேர்மை தெரிந்தும்,
மறுத்து, குவளையில் கேட்கின்றார்.
கழுவிடும் நீர்தனில் கறைகள் கரையும்;
கருத்தால் முழுக்குமே எடுக்கின்றார்.
எழுதிடும் தீர்ப்புகள், இறையின் விருப்பா?
எண்ணார், தம்மைக் கெடுக்கின்றார்!
(மத்தேயு 27:1-26)
வந்த வீரரைத் தடுக்க எண்ணி,
வாளை எடுத்தான் ஒருவன்.
அந்த தவற்றையும் முடிவு பண்ணி,
அதிசயமாக்கினார் இறைவன்.
எந்த வாளால் எவர் வாழ்ந்தாலும்,
அவரையும் அவ்வாள் வீழ்த்தும்.
இந்த அறத்தால் நிலை தாழ்ந்தாலும்,
இறையே நம்மை வாழ்த்தும்!
(மத்தேயு 26:51-56; லூக்கா 22:49-53 & யோவான் 18:1-11).
அந்த இருளில் வந்த கயவன்,
ஆண்டவர் தேர்ந்த அடியன்.
மைந்தனேசை முத்தம் இட்டு,
மாட்டி விடுகிற தடியன்.
இந்த மாதிரி அன்று ஒருவன்;
இன்றோ பலபேர் உள்ளர்.
எந்த அவையிலும் நேர்மை இல்லை;
யாவரும் இங்கு கள்ளர்!
(மத்தேயு 26:45-50)
எழுந்து வந்த இறைமகன் காணும்,
ஏங்கும் காட்சி என்னவெனில்,
விழுந்து தூங்கி வழிந்த அடியர்,
விவரம் இன்றி இருந்ததுதான்.
அழுந்து நிலையில் உடலும் கூனும்,
ஆவி நடத்தா நம் வாழ்வில்,
கொழுந்து எரிய எண்ணெய் தேவை;
கொட்டும், நம் திருந்தலில்தான்!
(மத்தேயு: 26:40-44)