எழுந்து வந்த இறைமகன் காணும்,

ஏங்கும் காட்சி என்னவெனில்,

விழுந்து தூங்கி வழிந்த அடியர்,

விவரம் இன்றி இருந்ததுதான்.

அழுந்து நிலையில் உடலும் கூனும்,

ஆவி நடத்தா நம் வாழ்வில்,

கொழுந்து எரிய எண்ணெய் தேவை;

கொட்டும், நம் திருந்தலில்தான்!

(மத்தேயு: 26:40-44)

வேண்டிடும் காட்சி காணுவதோடு,

வேண்டற் பொருள் கண்டிடுவோம்.

ஆண்டவர் இயேசு கேட்டதுபோன்று,

அவர் விருப்புள் அண்டிடுவோம்.

தூண்டிடும் ஆயிரம் இச்சையடக்கி,

துன்பக் குவளையும் ஏந்திடுவோம்.

தாண்டிடும் காலம் வெகு விரைவில்;

தலைவன் அவருடன் நீந்திடுவோம்!

(லூக்கா 22:41-42).

நீங்களும் நானும் வேண்டிடும் வேளை,

நிலத்தில் வேர்வை வடிந்ததுண்டோ?

தாங்கிடும் இறையின் மகன் மன்றாட, 

தரையில் குருதி வடிந்திடுதே.

ஏங்கிடும் மக்கள் நோக்கிடும் நாளை,

இன்றே கொணர முடிந்ததுண்டோ?

வாங்கிடும் அருளால் யாவும் கூடும்.

வருவோர் துன்பும் முடிந்திடுதே!

(லூக்கா 22:44).

எது எது வேண்டும் என்று நான் விரும்பி,

இறையிடம் பட்டியல் போடுகிறேன்.

அது அது வந்தும், வராமல் இருந்தும்,

ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இது இது இறைவன் விருப்பென்றறிந்து,

என்னைத் தந்து தாழுகிறேன்.

புது புது பொருளைப் பொழிந்து நிரப்பும், 

புனிதரருளால் வாழுகிறேன். 

(மாற்கு: 14:32-40).

வேண்டலின் மாதிரி கற்றுத் தந்து, 

விளிக்கும் கிறித்து உரைத்தபடி,

ஆண்டிட நம்மை இறையிடம் ஈந்து,

அவர் விருப்பு செய்வோமா?

மாண்டிடும் மக்கள் பெருந்திரள் கண்டு,

மடியு முன் உறவை மீட்பதற்கு,

நீண்ட நெடும்பணி நமக்கு உண்டு;

நிறைவுற அன்பு பெய்வோமா?

(மத்தேயு 26:36-44).

மற்றவர் உறங்கச் செல்லும் நேரம்,

மன்றாடுகிற இயேசுவைப் பார்.

உற்றவர் மூவர் உடன் சென்றாலும்,

உறங்கி விழுகிற காட்சியும் பார்.

கற்றவர் என்கிற கண்ணுடை நாமும்,

கனவில் நாளைக் கழிப்பது பார். 

கொற்றவர் இயேசு சொற்படி வேண்டு;

குறை இல்லாத மாட்சியும் பார்!

(மாற்கு 14:32-40).

ஏங்கும் இறைமகன் வேண்டல் காண,

யோவான் பதினேழு பாருங்கள்.

தூங்கா இரவில் தொடங்கும் அவரது, 

தூய மன்றாட்டைக் கேளுங்கள்.

நீங்காதிருக்கும் நிற, இனப் பிரிவுகள்

நேர்மையுள் இணைய வாருங்கள்.

வாங்கிய வாக்கை விற்றது போதும்;

வரட்டும் ஒற்றுமை, வாழுங்கள்!

(யோவான் 17: 20-26).

தந்தையும் மைந்தனும் ஒன்றாய் இருந்து,

தரணியை ஆள்வது கண்டிட்டும்,

மைந்தர் என்கிற பேறுடை கிறித்தவர், 

மண்ணில் ஒன்றாய் இருக்கலையே.

நிந்தையும் பழியும் நித்தமும் சொரிந்து,

நெறியற்ற அலகை தண்டித்தும், 

மந்தையின் மேய்ப்பர், மறைப்பணி தலைவர்,

மனதை இணைத்துப் பெருக்கலையே!

(யோவான் 17)

நன்றிப் பாடலை பாடிடும் இயேசு,

நடந்து மொழியும் அன்பைப் பாரீர்.

இன்றைய நாளில் ஈவாய் அருளும்,

இறை ஆவியர் பண்பும் பாரீர்.

ஒன்றிலும் இனிமேல் கவலை வேண்டாம்;

உழைக்க அவரது கூட்டில் வாரீர்.

என்றும் வாழ நமக்கென எழுப்பும்,

ஈடு அற்ற வீட்டிலும் வாரீர்!

(யோவான் 14-16).

மற்றொரு அடியார் சிமியன் பேதுரு,

மறுதலிப்பாரென இயேசுரைக்க,

ஊற்றவர் யாவரும் கை விட்டாலும்,

உயிர் தருவேனெனெ முழங்கினார்.

சற்று நம் வாழ்வை நாமும் பார்த்தால்,

சறுக்கி அவர் போல் வீழ்கிறோம்.

பற்றுறுதி வெறும் சொற்பேச்சல்ல;

பண்பிருப்பவரே வழங்குவார்!

(லூக்கா 22:31-34).