எழும்பி நின்ற அடியவர் நடுவே, 

இறை வாக்களித்தார் பேதுரு.

குழம்பி நின்றவர் தெளிவு பெறவே, 

கிறித்து நல்கிய புத்துரு.

அழுக்குணந்தவர் உளம் திருந்தவே, 

அளித்தார் அந்நாள் முழுக்கு. 

இழுக்கு துறந்தார் பத்து முன்னூறு;

இதுவே திரு அவை, விளக்கு!

(திருத்தூதர் பணிகள் 2).

அரேமிய மொழியைப் பேசும் அடியார், 

ஆவியில் நிறைந்து எழும்புகிறார். 

பிறமொழி பேசும் பெரும் வரம் பெற்று, 

புறத்தியாரையும் எழுப்புகிறார். 

ஒரேமொழி இணைக்கும் என்கிற கருத்தை, 

உடைத்து இறையே எழும்புகிறார். 

யார் யார், எம்மொழி என்னும் பிரிவினை,

இல்லாதாரையும் எழுப்புகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2).

பன்னிரு அடிகளும், பற்றுள்ளோர்களும், 

பாங்காய் இணைந்து வேண்டுகையில்,

சொன்ன தம் வாக்கை நிறைவேற்றிடவே,

தெய்வம் ஆவியர் ஆகிறார்.

அன்னிறை நாளும், ஐம்பதென்றிருக்க,

அவை பிறந்துத் தோன்றுகையில், 

என்னிலத்தோர்களும், இயேசுவில் ஒன்று,

என்று இறையும் ஏகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2.1-47)

மதித்தலே மதி!

ஏற்றத் தாழ்வுகள் என்கிற நிலைமை,

எங்கும் இருப்பது நாம் அறிவோம்.

மாற்றார் மதிக்கும் மதியில்லாமை,

மரமாய்க் கனிவது நாம் அறிவோம்.

போற்றற்குரிய இறைமகன் நமக்கு, 

பொழியும் வாக்கும் நாம் அறிவோம். 

நேற்றைய இழிவின் நிழலை இழக்க, 

நிற்பது யார்? நாம் அறியோம்!

-கெர்சோம் செல்லையா.

மண்ணிலும் விண்ணிலும் மாபெரும் ஆளுமை, 

மனிதனாய் வந்த இறைவனுக்கே. 

விண் தரும் மீட்பை விரைந்தெங்கும் உரைக்க, 

வேண்டும் பல்லின அரவணைப்பே.

எண்ணிப் பணிந்து கழுவினால் வாழ்வார்;

என்றும் இறைவன் இவரிடமே.

கண்ணிமை போன்று காப்பார் இயேசு;

காணும் கண்கள் எவரிடமே?

ஆமென்.

(மத்தேயு 28:18-20).

பன்முறை காட்சிகள் பலருக்கு ஈந்து, 

பார்த்தவர் ஐயம் போக்கினார். 

நன்மறை வாக்கும் நயமாய்த் தந்து, 

நம்பும் அடியர் ஆக்கினார். 

என் முறை வந்த அந்நாள் இரவில், 

எளியன் இழிவும் நோக்கினார்.

வன்முறை விட்டேன், வழியும் கண்டேன்;

வாடா அன்பில் தூக்கினார்!

(மத்தேயு 28).

இறப்பின் பின்னர் என்ன நடக்கும்?

இதையறிந்தவர் யார் இங்கே?

திறப்பின் வாசல் இயேசுவை நோக்கும்;

தெரியும் புது வாழ்வங்கே.

உறக்கம் போல இறப்பு வந்தாலும்,

இருக்கப்போவது இனி எங்கே?

மறக்காதிருப்போம், மாதிரி இயேசு

மன்னவரோடு நாம் அங்கே!

(மத்தேயு 25)

கொன்று போட்டால் கேட்பாரில்லை, 

கொல்வோம் என்பார் நடுங்கிட, 

அன்று தெய்வம்  அதிசயம் செய்தார்;

அவர் மகனை உயிர்ப்பித்தார். 

சென்று ஒளிந்த  அடியரைத் திருத்த,

செய்தியை மட்டும் சொல்லாது, 

தின்று, தெளியத் தொடவும் வைத்தார்;

தெய்வ மகன் மெய்ப்பித்தார்!

(மத்தேயு 28, மாற்கு 16, லூக்கா 24, யோவான் 20 & 21).

எடுத்து அடக்கம் செய்வதற்கென்று,

எழுந்தார் அரிமத்தி யோசேப்பு.

அடுத்து உள்ள அன்னார் தோட்டம், 

அமைந்திருந்ததும் சிறப்பு. 

கொடுத்து நறுமணம் பெற்றவர் அன்று,

குன்றிணை நிக்க தெம்மு. 

படுத்து விடுவார் என நினைத்தார்கள்;

பாருங்கள் இறையின் பம்மு!

(யோவான் 19:38-42)

இறுதி மூச்சை யாரிடம் விடுவோம்,

என்று கேட்பவர் யார் இங்கே?

அறுதி வாக்கை ஆண்டவர் கூறும்,

அந்தக் காட்சி பார் அங்கே.

உறுதியாக ஒன்றினை அறிவோம்;

உயிர் ஈகிறார் இறை இங்கே.

மறதி என்றும் கெட்டிட வேண்டாம்; 

மனித உயிர் நிறைவங்கே!

( லூக்கா 23:46).