புதிய அரசுக்கு வாழ்த்துகள்!

எப்படி இருந்தார் என்றுநாம் பாரோம்;

இவர் பின்னாலே இருப்பவர் பாரோம்.

இப்பெரு நாட்டை ஆண்டிடும் பொறுப்பு,

இவருக் கீந்த இறை பார்ப்போம்.

நற்பணி செய்து நன்மை தாரோம்;

நாட்டை உயர்த்த நேர்மை தாரோம்;

அப்படி மட்டும் ஆள்வோம் என்றால்,

ஆசி, அருள், என்றுரைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

காடிக் கசப்பை வாங்கிய இயேசு,

கனியும் வாக்கு, முடிந்தது.

தேடிக் கொண்டு இப்புவி வந்த,

தெய்வப் பணியும் முடிந்தது.

மூடிக் கொண்டு அலகை செல்ல,

முடிக்கும் வாக்கு, முடிந்தது.

ஆடிக்கொண்டு அலைவோர் மீள,

அருளிய திட்டமும் முடிந்தது!

(யோவான் 19:30).

தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,

தாகம் மிகுந்த அவர் கேட்டார்.

அன்னிலை  விருப்பு  உடல் மெய்க்கெனினும்

ஆய்வோர் இன்று மெய் கண்டார்.

இன்னில மைந்தர் உயிர் நீர் அருந்த, 

ஏங்கும் இயேசு நமைக் கேட்டார்.

நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;

நம்முட் கைப்பு பொய் கண்டார்! 

(யோவான் 19:28-29).

மூன்றாம் வாக்கை மொழிந்த பின்னர்,

மும்மணி நேரமும் காரிருள்.

சான்றோன் சுமக்கும் உலகின் பாவம், 

சான்று பகர்ந்திடும் பேரருள்.

ஏன்தான் இறையே ஏன்தான் இறையே,

என்று கேட்பதோ ஏக்கம்;

நான்காம் வாக்கில் நன்கு தெரியும், 

நம்வினை இருள் நீக்கம்!

(மத்தேயு 27:45-46)

அங்கு வந்த பெண்கள் நடுவில்,

அன்னை மரி நிற்பது கண்டு,

தங்க இடமும் தகுந்த வாழ்வும்,

தருகின்ற இயேசு பொழிகிறார்.

பொங்கு சினமாய் வாழ்ந்த யோவான்,

புரிந்து இன்று அன்பு கொண்டு,

எங்கு முள்ள முதியரைப் பேணும்,

ஏற்பாட்டை  வழி மொழிகிறார்!

(யோவான் 19:25-27)

தன்னினத்தவரை காப்பதாய் நினைத்து, 

தவறிச் செல்வார் நடுவினிலே,

இன்னொரு மனிதர் தொங்குதல் கண்டு,

இரண்டு கள்வரும் நிந்தித்தார்.

அந்நிலை வேளையில் இயேசுவின் வாக்கு, 

அவரில் ஒருவரை உணர்த்திடவே, 

மன்னனாய் ஏற்கும் பற்றினைக் கொண்டு, 

மகிழ விண்ணைச் சந்தித்தார்!


(மத்தேயு 27:44 & லூக்கா 23:39-43)

2026–ஆண்டின் தேர்தல்!

2026–ஆண்டின் தேர்தல்!

தேறுதல் தருகிற தலைவர் என்று,
தேர்தலில் வாக்கு அளிக்கிறோம்.
மீறுதல் செய்வார், மிரட்டவும் வருவார்;
மீட்பார் இலாது முழிக்கிறோம்.
மாறுதல் என்றால் மாயையே இன்று!
மனம் தளராது விளிக்கிறோம்.
ஆறுதல் வேண்டும்; யார் இனி தருவார்?
ஆண்டவர் ஆளச் செழிக்கிறோம்!

-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com

வெறுத்தலை விதைத்து, வெறுத்தலை வளர்த்து,

வெறுப்பின் விளைச்சல் அறியார் முன்,

பொறுத்தலே இறைவழி, பொறுப்பீர் என்று, 

புனிதர் சிலுவையில் வேண்டுகிறார். 

அறுத்தலை விரும்பி, அறுத்தலில் விழுந்து, 

அழுகிற  மாந்தர் திரும்பிப் பின், 

நிறுத்திட,  நாமும் பொறுத்தலை இன்று, 

நினைந்து வாழவும்,  தூண்டுகிறார்!

(லூக்கா 23:34).

முரண்டு பிடிக்கும் தன்மை இல்லாமல்,

முதலில் இயேசு தனை விட்டார்.

இரண்டு கள்வர் இடம் வலம் தொங்க,

இழிவில் அறையவே விட்டார்.

திரண்டு வந்த வழிப் போக்கினரால்,

தீயன் என்றும் பழிக்கப் பட்டார்.

அரண்டு மறைந்த அடியார் எங்கே?

அவராலுமே கை விடப் பட்டார்!

(மாற்கு 15).

கொல்கதா என்னும் கொலைக்கள மலைக்கு,

குருசு சுமந்தவர் நடக்கிறார்.

செல்கிற வழியில் சீர் மனப்  பெண்கள், 

சிறிது வெறியம் கொடுக்கிறார். 

நல்நினைவோடு தன் கடன் முடிக்க,

நடக்கும் ஏசுவோ தடுக்கிறார். 

வெல்கிற எண்ணம் கொள்கிற தலைக்கு,

வெறியம் எதற்கு? உடைக்கிறார்!

(மாற்கு 15).