அழுக்கு எங்கே?

ஒரு வண்டி அழுக்கை உள்ளே வைத்து!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 11:37-41.37அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.38அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.40மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?41உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.


கிறித்துவில் வாழ்வு:

இரு கை கால்களைக் கழுவிக் கொண்டு,

யான் மட்டும் தூய்மை என்றோரே,

பெரு வண்டி அழுக்கை மூடிக்கொண்டு,

பெருமையில் தொலைந்து போனீரே.

ஒரு முறைகூட உமக்குச் சொல்வேன்;

உள்ளழுக்கேதான் கேடு தரும்.

அருளால் கழுவும்; ஏழைக்கிரங்கும்;

அப்புறம் பாரும், தூய்மை வரும்!

ஆமென்.

கண்ணெனும் விளக்கு!

விழித்திடும் கண்ணே விளக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:34-36.

34கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
35ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
36உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
விழித்திடும் கண்ணே விளக்காகும்;
வீணாய் வைத்தால் இருளாகும்.
செழித்திடும் வாழ்விற்கு வழியாகும்;
செயல்படுத்துவதோ அருளாகும்.
பழித்திடும் கூட்டமும் பலவாகும்;
பாராதீர் அவை மருளாகும்.
கழித்திடும் இரவும் பகலாகும்;
காண்பீர் வாழ்வின் பொருளாகும்!
ஆமென்.

விளக்கு!

விளக்காய் மாறுவோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:33.33 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
கிறித்துவில் வாழ்வு:

எங்கும் வெளிச்சம் பரவுக என்னும்,

இறைவனை நினைவு கூருங்கள்.

இங்கும் இருளைக் கிழித்துச் செல்லும்,

எரிகிற விளக்கென மாறுங்கள்.

மங்கும் திரியைத் தூண்டிக் கொடுக்கும்,

மரத் தண்டின்மேல் சேருங்கள்.

பொங்கும் பகைவர் புரியாதிருந்தும்,

போற்றும் புதுமையும் பாருங்கள்!

ஆமென்.

மனந்திரும்புங்கள்!

மனந்திரும்புங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:31-32;
31தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவின் முதிர்ச்சி எங்கே தெரியும்?
அனைவரை மீட்கும் நேர்மையிலே.
குறுகிய அறிவு எங்கே சரியும்?
கொடுமையைப் புகழும் பார்வையிலே.
வெறியும் வெறுப்பும் எங்கே முடியும்?
விரும்பா அழிவில் தோற்பதிலே.
நெறியும் வாழ்வும் எங்கே தொடங்கும்?
நேர்மை இயேசுவை ஏற்பதிலே!
ஆமென்.

மன்னிக்கும் அன்பு!

மன்னிக்கும் அன்பு!


அன்பின் தன்மை பலவகை உண்டு.

அம்மா அப்பா உறவில் உண்டு.

துன்பில் உதவும் நட்பிலுமுண்டு.

தூய்மைக் காதல் தருவதுமுண்டு. 


இன்னும் மேன்மை வேறொன்றுண்டு;

இறையின் பண்பாய்க் காண்பதுண்டு.

மன்னிப்பென்று கொடுப்பதில் உண்டு.

மாபெரும் அன்பு இயேசுவிலுண்டு!


-செல்லையா.

யோனா!

யோனாவின் முன்னடையாளம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:29-30.

29ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார்.

கிறித்துவில் வாழ்வு:
மூன்று நாட்கள் மீனின் வயிற்றில்,
முன்பு யோனா இருந்ததுபோல்,
சான்று கேட்கும் சந்ததியார்க்குச்
சாவை வென்றவர் இருந்தாரே.
தோன்றுகின்ற அறியாமையினால்,
துணிகரக் கேள்வி கேளாமல்,
ஊன்றுகோலென வாக்கைப் பிடித்தோர்,
ஒரு நாள்கூட வருந்தாரே!
ஆமென்.

பெரும் பேறு!

பெரும்பேறு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:27-28.

27அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
28அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்ற அன்னை மரியைவிடவும்,
பேறு பெற்றார் இல்லையென்று,
உற்று நோக்கிய ஒரு தாய் சொல்ல,
உண்டு மேலாம் பேறு என்றார்.
பற்று கொண்டு பணி செய்வார்தான்,
பாரில் மிகப்பெரும் பேறடைவார்.
கற்று நிற்கும் நீங்களும் நானும்,
காத்து நடந்தால், ஏறு என்பார்!
ஆமென்.

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்துகள்!


எழுபதும் இரண்டும் கடந்த பின்னும்,

இந்தியர் ஒன்றெனக் காட்டவில்லை.

பழுதினைக் கொணரும் தீதென அறிந்தும்,

பாழாம் சாதியை ஓட்டவில்லை.

அழுதிடும் மக்கள் அலறிக் கேட்டும்,


அவரையும் உறவெனக் கூட்டவில்லை.

தொழுகையை நாடும் தலைமைக்கின்னும்,

தூய்மை என்றால் நாட்டமில்லை!


-கெர்சோம் செல்லையா.

வெற்றிடம்!

வெற்றிடம் வேண்டாம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:24-26.

24அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
25அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,
26திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
வெற்றிடமாக வீட்டை வைத்தால்,
விரும்பாப் பேய்கள் படியேறும்.
சுற்றிலுமுள்ளத் தீயோர் குழுவும், 
சொந்தம் பேசிக் குடியேறும்.
பற்றினைப்பெற்று, பரமனைப் பிடித்தால்,
பாழ்பட்ட வாழ்வும் சீராகும்.
கொற்றவரேசு குடித்தனம் வந்தால்,
கோணல் யாவும் நேராகும்! 
ஆமென்.

காக்கும் கடவுள்!

காக்கும்கடவுள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:21-23.

21 ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
22 அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

கிறித்துவில் வாழ்வு:
தீங்கு செய்யும் நோக்கங் கொண்டு 
திருடன் அலகை அலைகின்றான்,
ஆங்கு அவனது வலிமை முன்பு,
அடிமையோ நிலை குலைகின்றான்.
ஏங்கி நிற்கும் ஏழையர் கண்டு,
இரங்க மறுப்பான் தொலைகின்றான்.
தூங்கி வழிவான் இறைவன் ஆகான்;
தாங்கி மீட்பதே தலையென்பான்!
ஆமென்.