யாருக்கும் தெரியாததா?

யாருக்கும் தெரியாததும்…கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:2-3.

2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
யாருக்கும் தெரியா எண்ணமும்கூட,
இறையால் இன்று வெளிப்படுமே.
பேருக்குத் தூயோனாக இருந்தால்,
பிழைகள் பெருகிப் பழித்திடுமே.
தாருக்கும் வேண்டும் நறுமணமென்று 
தரைச் செடி யாவும் அறிந்திடுமே.
ஊருக்கு நல்லவன் பட்டம் அல்ல;
உள்ளில் உண்மை தெரிந்திடுமே!
ஆமென்.

புளித்த மாவு!

புளித்த மாவு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:1.

1அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சிறு புளித்துண்டு மாவில் விழவே, 
சேர்த்து பானையில் கொட்டிவைத்தேன்.
இரு பெருங்காலம் கடந்த பிறகே,
யானும் நினைந்து, கட்டவிழ்த்தேன்.
அருவருப்பான வாடை எழவே,
அப்புளிப் பானையைப் போட்டுடைத்தேன்.
பெருமையும் இதுபோல் பரவுதல் கண்டே,
பேரிடர் ஒழிக்கப் பாட்டெடுத்தேன்! 
ஆமென்.

சொன்னார் குறை!

சொன்னார் குறை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:53-54.

53இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
54அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
தன்னால் கூடும் என்பவனும்,
தவறேன் என்று சொல்பவனும்,
முன்னாள் தன்குறை உணர்வதுதான்,
முதலில் கற்கும் இறையறிவாம்.
பன்னாள் இப்படி நாம் கேட்டும்,
பலவித முறையில் வழிபட்டும், 
சொன்னார் குறையே தேடுகிறோம்
சொத்து நமக்கு குறையறிவாம்!
ஆமென்.

ஆசு இரியர் = ஆசிரியர்.

ஆசு இரியும் ஆசிரியர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:52.

52நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஆசிரியும் பணிப் பெருமை,
ஆசிரியர் மறந்ததினால்,
காசுரியும் கடையர்தமை,
கல்வி வள்ளல் என்கின்றார்.
வீசு மண இறைவாக்கை,
விரும்புகின்ற எளியவர்தான்,
மாசு ஒன்றும் சேர்க்காமல்,
மாதிரியாய் நிற்கின்றார்.
ஆமென்.

பழி வாங்கும் இறைவன்!

பழிவாங்குவார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:49-51.

49ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
51நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவின் வாக்கு உரைத்தவரை,
அடித்துக் கொன்றதும் நம் நாடு.
வெறியின் செயல்கள் செய்தவரை
விழுந்து புகழ்வதும் பண்பாடு.
பொறியில் சிக்கிய வெறியர்களை,
புனிதம் என்பதோ பெருங்கேடு. 
நெறியின் இறைவன் பதில் தருவார்.
நேர்மைதானே அவர் கோடு!
ஆமென்.

அப்பன் கொன்றான்….

அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:47-48.

47உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.48ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
அழகாய்ப் பின்னர் கல்லறை அமைத்தான்.
தப்பாய் நடந்தான், தலைமுறை வளர்த்தான்.
தவற்றின் உணவைத் தானும் சமைத்தான்.
எப்போதிவனும் தன்னை உணர்வான்?
இவைகள் விட்டு, உம் வழி தெரிவான்?
ஒப்பாரில்லா இறைவனின் மகனே,
உம்மைக் காட்டும், நன்மை புரிவான்!
ஆமென்.

சுமை!

அடுத்தவன் தலைமேல்…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:45-46.45
அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.46அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அடுத்து ஒருவன் தலைமேல் வைத்து,
அவன் சரியில்லை என்னும் நாம்,
எடுத்து, சுமையினை ஏந்தி, பிடித்து,
என்சுமை என்று சுமந்ததுண்டா?
படுத்து, உருண்டு, பாடி, நடித்து,
பழங்கதை பேசும் கிறித்தவர் நாம்,
கெடுத்து விட்ட ஊழியம் சிறக்க,
கிறித்து சிலுவை சுமந்ததுண்டா?
ஆமென்.

அறுபத்தெட்டு!

அறுபத்தெட்டு ஆண்டுகள்!

உருவாய் வாழும் ஆண்டை எண்ணி,
ஊரார் அளப்பின், அறுபத்தெட்டாம்.
கருவாய் இருந்த காலமும் எண்ணி,
கணக்குப் பார்ப்பின் அருள் திரட்டாம்.
எருவாய் என்றோ போகவிடாமல்,
என்னைக் காப்பதோ இறைக் கூட்டாம்.
திருவாய் மொழியும் தெய்வ அன்பால்,
தொடர வைப்பதும் அவர் பொருட்டாம்!
-கெர்சோம் செல்லையா.

உயிரே! உயிரே!

உயிரே! உயிரே!


ஒருவர் இருவர் இறப்பது கண்டு,

ஏதோ விபத்தெனச் செல்கின்றார்.

பெருந்திரள் மக்கள் மடிவது கேட்டு,

பிறவிப் பயனெனச் சொல்கின்றார்.

குருதியெடுத்தல் சரியேயென்று,

கொள்பவர் இன்று வெல்கின்றார்.

அருமை உயிரோ ஆண்டவர் ஈவு;

அதை ஏன் மக்கள் கொல்கின்றார்?


-கெர்சோம் செல்லையா.

நம்மைப் பிடித்த பிணவாடை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:43-44.
43பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.44மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

தம்மை உயர்வென எண்ணுதல்போல்,

தவற்றில் உயர்ந்தது வேறில்லை.

இம்மை மறுமை இவ்விரண்டில்,

இவர்க்கு உய்யும் பேறில்லை.

நம்மைப் பிடித்த பிணவாடை,

நன்றாய் அகல வேண்டிடுவோம்.

எம்மை ஆளும் இறைமகனின்,

இயல்பாம் தாழ்மை பூண்டிடுவோம்!

ஆமென்.