ஒரு மூலையிலிருந்து உலகைப் பார்க்கிறேன். எண்: 1

ஒரு மூலையிலிருந்து உலகைப் பார்க்கிறேன்!எண்:1.


எத்தனை காலமாய் இம்மனித இனம் வாழ்கிறது, என்றும் எனக்குத் தெரியாது. 
அத்தனை கால வரலாறு கற்றாலும் எனக்குப் புரியாது. இத்தனை ஆண்டுகள், என் பெற்றோர், என் ஆசிரியர், நான் கற்ற நூல்கள், இவைகளுக்கு மேலாக என்னை நடத்தும் இறையாவியர் எனக்குச் சொல்லித்தந்த உண்மையை, மொத்தமாய் எழுத இயலாவிட்டாலும், ஒரு மூலையிலிருந்து உலகை, ஒரு கோணத்தில் நான் பார்ப்பதையே, எழுதுகிறேன்.
கிறித்து பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலும், கிறித்து பிறந்தபின் வந்த இருபது நூற்றாண்டுகளிலும், உணர்ந்தோ, உணராமலோ, ஓருண்மையை உலகோர் சொல்வார்கள்.
“இறைவனின் முன்பு யாவரும் ஒன்றே”
இறைவனின் பார்வையில், இந்நாட்டான், அந்நாட்டான் என்றும் இல்லை; இவ்வினத்தான், அவ்வினத்தான் என்றும் இல்லை; ஏழை என்றும் செல்வன் என்றும் இல்லை; ஆண் வேறு,  பெண் வேறு என்றும் இல்லை. யாவரும் ஒன்றே. யாவரும் ஓருதிரத்திலிருந்து வந்தவரே, (அப் 17: 26)
இறைவனும் மனிதரைப் பிரிக்கவில்லை; இறைவனின் படைப்புகளும் பிரிக்கவில்லை. கதிரவன் கண்ணிலும் யாவரும் ஒன்றே. காற்று, மழை, நெருப்பிலும் யாவரும் ஒன்றே.  

இத்தனை ஆண்டுகளாய் எத்தனையோ பேர் இதை எடுத்துச் சொல்லியும், எண்ணற்றச் சட்டங்கள் வலியுறுத்தியும், எல்லா நாட்டு நடுவர் மன்றங்கள் தீர்ப்பு எழுதியும், மனிதர்கள் ஒருவரை உயர்த்தியும், மற்றொருவரைத் தாழ்த்தியுமே பார்க்கிறார்கள். வென்றவர், தோற்றவரைத் துரத்தி விட்டதும் உண்டு; தோற்றவர், வென்றவரால் அடிமைப்பட்டதும் உண்டு. வெளிநாட்டார் வந்து அடிமையாக்கியதும் உண்டு. உள்நாட்டிலே தம் நாட்டாரை அடிமையாக்குவதும் உண்டு. நாட்டுப் பற்று என்ற பெயரால், பிற நாட்டை எதிரியாய்ப் பார்ப்பவரும், தம் நாட்டு மக்களையே இணையாய் எண்ணாமல், தாழ்த்துவதும் உண்டு. அடிமையாய் நடத்துவதும் உண்டு. இறைவனின் பெயரைச் சொல்பவரும் இக்கூட்டத்தில் இருப்பது வருத்தமான ஓன்று.
எண்ணற்றோர் சொல்லி வந்த உண்மையை யாரும் கேளாததினால், இன்று கொரோனா சொல்லித் தருகிறது. அதன் கண்ணில் ஏழை, செல்வன் என்று வேறுபாடும் இல்லை; இந்தியா சீனா என்று வேறு நாடும் இல்லை. எல்லோரும் ஒன்றே. ஆணில்லை, பெண்ணில்லை; அனைவரும் ஒன்றே. 
அழிக்கும் தொற்று நோயே அனைவரையும் ஒன்றாய்ப் பார்க்கும்போது, ஆக்கும் திறமைகொண்ட மானிடா நீ ஏன் பிறரைப் பிரித்துப் பார்க்கிறாய்? உன்னை உயர்ந்தவன் என்றும், முன் நிற்பாரைத் தாழ்ந்தவன் என்றும் உன் இறுமாப்பில் ஏன் உரைக்கிறாய்?

ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும்; 

வண்டியும் ஒருநாள் ஓடம் ஏறும். 

மூடம் ஒழிய, இறையைப் பாரும்;

முன்னிற்பாரை மதிக்கப் பாரும்!


-கெர்சோம் செல்லையா.

விற்போமா?

விற்று விட்டு வா!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:22-23.

22  இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

23  அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

விட்டுவிட்டே வரவில்லை;

விற்றுவிட்டுத் தருவோமா?

பட்டு மெத்தை படுக்கையிலும்,

பணம் உண்டு, விடுவோமா?

தட்டுகின்ற இயேசுயென்றால்,

தங்கத்திலும் தருவோம் நாம்.

வட்டிலிலே உணவு இல்லா 

வறியரெனில் கொடுப்போமா?

ஆமென்.

திருச்சட்டம்!

திருச்சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:20-21.

20  விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

21  அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

அத்து மீறும் மனிதரைத் தடுக்கும்,

ஆண்டவர் வழியே திருச்சட்டம்.

பத்து கட்டளை என்று சுருக்கும் ,

பழைய ஏற்பின் அருட்திட்டம்.

மொத்த கருத்தும்  உள்ளடக்கும்,

முடிவு கேட்டது திருக்கூட்டம்.

இத்தரையில் இயேசு காட்டும்,

இனிய அன்பால் விண் எட்டும்!

ஆமென்.

வங்கியும் வறியரும்!

வங்கியும், வறியரும்!


வங்கியும், வறியரும்!
தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து கற்றவர் தருஞ் சட்டம்,
அனைவரும் ஒன்றெனக் கருதாமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?
-கெர்சோம் செல்லையா.


ஒடிசாவின் நுவாபாரா மாவட்டம், பாராகான் கிராமத்தில் உத்கல் கிராம வங்கி உள்ளது. இங்கு ஜன்தன் வங்கிக் கணக்கில் பெண்களுக்கு மத்திய அரசால் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ பெறுவதற்காக, புஞ்சிமதி தேய் என்ற 60 வயது பெண் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். 100 வயதான தனது தாய் லாபே பாகல் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரது கணக்கில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ தன்னிடம் தர வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் லாபே பாகல் நேரில் வந்தால்தான் பணம் தரமுடியும் என வங்கி மேலாளர் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மறுநாள், படுத்த படுக்கையாக இருந்த 100 வயது தாயை வங்கிக்கு புஞ்சிமதி தேய் கட்டிலுடன் தெருக்களில் இழுத்துச் சென்றார்.
(தமிழ் இந்து)

வங்கியும் வறியரும்!

வங்கிப் பணியாளரும் வறியவரும்!

தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து சென்றிடும் நம் சட்டம்,
அனைவருக்காகவும் இருக்காமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?

-கெர்சோம் செல்லையா.

பணிவுண்டோ?

பிறர் நம்மைப் புகழும்போது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 18-19.

18  அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

19  அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

கிறித்துவில் வாழ்வு:

நன்மையின் உருவாய் வந்திருந்தும்,

நல்லதை மட்டுமே தந்திருந்தும்,

அன்பினால் இயேசுவைப் போற்றுகையில்,

அவரோ தடுக்கிறார் துணிந்து!

என்னென்ன தீமை செய்திருந்தோம்,

எங்கெல்லாமோ ஏய்த்திருந்தோம்;

பண்பிலார் நம்மைப் புகழுகையில்,

பார்த்தோமா உள் குனிந்து?

ஆமென்.

விலையில்லை!

விலையின்றிக் கொடுப்போம்!


நெல்லும் மணியும் நிறைந்த வயலை,


நெடு வழியாக்கத் துடிக்கும் நாம்.

வெல்லும் வாழ்க்கை ஏழையுமடைய,

விலையிலாக் கல்வி கொடுப்போமா? 

கொல்லும் கொடிய குண்டினை வாங்கக்
கோடிகோடி கொடுக்கும் நாம்.

செல்லும் ஏழைகள் நீடூழி வாழச்

செலவிலா மருத்துவம் கொடுப்போமா?


-கெர்சோம் செல்லையா.

மழலையர் !

மழலையரைப் பார்த்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:15-17.15  பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.16  இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.17  எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தந்தை தாயைப் பார்த்துப் பயின்றும்,

தவறுகள் என்னில் இருப்பதனால்,

மைந்தனேசு மாற்றிச் சொன்னார்;

மழலையர் பண்பைப் பார் என்று.

இந்த அறிவும் இவர்கள் அன்பும்,

இன்று என்னில் இராததனால்,

சொந்த வாழ்வில் குறைவுபட்டேன்;

சொற்படித் திருத்துவீர் இன்று!

ஆமென். 

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:13-14.

13  ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14  அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஆயம் வாங்கும் அலுவலர் ஒருவர்,

ஆண்டவர் கோயில் முன் நின்று,

மாயம் நிறைந்த மனதை உணர்ந்து,

மன்னிப்பிற்குத் தாழ்த்துகிறார்.

சாயம்பூசிச் சாவினை மறைத்து, 

சரிதான் என்கிற நாம் இன்று,

காயம் ஏற்று கனியும் அவர்முன்,

கசியும்போது வாழ்த்துகிறார்!

ஆமென்.

பெருமை!

திமிராய்ப் பார்க்கிறவர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:9-12.

9   அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10  இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11  பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒரு முறை காசு கொடுத்து விட்டு,

ஊர் நிறை செல்வம் வேண்டுகிறார்.

இரு முறை நோன்பு எடுத்து விட்டு,

இதுவே வழியெனத் தோண்டுகிறார்.

தெரு வரைத் தம்மைப் புகழ்ந்துவிட்டு,

திமிராய்ப் பிறரை எள்ளுகிறார்.

திரு மறை கூறும் அன்பு விட்டு,

தேடின், தெய்வம் தள்ளுகிறார்!

ஆமென்.