வஞ்சக நெஞ்சு!

வஞ்சக நெஞ்சு! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:5-8. 

5   அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.

6   மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

7   அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

8   அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். 

கிறித்துவில் வாழ்வு: 

பிஞ்சு குழந்தை போன்று நடித்து,

பெரிய விடைகள் தேடுகிறார். 

நஞ்சு கலந்த நெஞ்சு மறைத்து,

நயந்த வாக்கால்  மூடுகிறார். 

பஞ்சு போன்று அவர் பறந்து,

பதில் பெறாது ஒடுகிறார். 

கெஞ்சு நிலையில் விழுகிறபோது,

கீழோர் கிறித்துவை நாடுகிறார்! 

ஆமென்.

யோவானின் முழுக்கு!

யோவானின் முழுக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:3-4.

3   அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.

4   யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.

கிறித்துவில் வாழ்வு:

முரண்டு நிற்கும் மனிதர் திருந்த, 

முதற்கண் பாதை அமைக்கையில், 

இரண்டு கொண்டோர் ஒன்றைக் கொடுக்க, 

யோவான் காட்டில் முழங்கினார். 

திரண்டு வந்தோர் மனம் திரும்ப, 

தெளிநீர் ஓடை யோர்தனில், 

அரண்டு போகாதிருந்துரைத்த,

அடியார் முழுக்கு வழங்கினார்! 

ஆமென்.

ஐயம் தவிர், ஆளுமை காண்!

ஐயம் தவிர்! ஆளுமை காண்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:1-2.

1   அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:

2   நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

யார் கொடுத்தார் இவ்வாளுமையை?

எப்படி அடைந்தீர் இவ்வல்லமையை?

பார் படைத்தாரிடம் நாம் கேட்டோம்;

பற்றற்றதினால் பலர் கெட்டோம். 

நேர்பட விடையைக் கொடுப்பதற்கு,

நெஞ்சைக் கேட்டார் இறைமகனார்.

கார் இருள் ஐயம் கைவிட்டோம்.

கடவுளின் மாட்சி கண்டிட்டோம்!

ஆமென்.

ஏற்பவரும் எதிர்ப்பவரும்!

ஏற்பவரும் எதிர்ப்பவரும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:47-48.

47  அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,

48  ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஏற்பவர், எதிர்ப்பவர் இருக்கும் நாட்டில்,

எப்படி இறைவாக்குரைக்கின்றீர்?

பார்ப்பவர் எவரையும் ஈர்க்கும் வகையில்,

பண்பில் எப்படிச் சிறக்கின்றீர்?

தோற்பவர் வெறியில் துன்பம் தரினும்,

துணிந்து எப்படிச் சொல்கின்றீர்?

ஆர்ப்பரிக்காதீர், அமைதி நாடும்;

ஆண்டவர் வழியில் செல்கின்றீர்!

ஆமென்.

பக்றுளி ஆறு!

பஃறுளி ஆறு பாயும் காட்சி,

பார்க்க வேண்டும் அழகின் நீட்சி!

அகமதை அழைக்கும் அரிய காட்சி

ஆண்டவர் காட்டும் அருளின் மாட்சி.

முகமதைத் திருப்பும் முன்னிரு கண்கள்,

முயன்று பாராதிருப்பின் புண்கள்.

இகமிதைத் தந்த இறையின் கண்கள்

இனிமை சொல்ல, இல்லை எண்கள்!

-கெர்சோம் செல்லையா.

விண்ணப்ப வீடு!

விண்ணப்ப வீடே இறைவீடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:45-46.

45  பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:

46  என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணப்ப வீடே இறைவீடு;

விருப்பம் கூடும் நிறைவோடு.

நன்னப்பர் அருளும் அன்போடு,

நலம்பெற நாளும் மன்றாடு.

பொன்னப்பரென்ற சிலரோடு,

பொய்மை வரவே பலகேடு.

மன்னிப்பு தருகிற மொழியோடு,

மனதைச் சேர்ப்பதே வழிபாடு!

ஆமென்.

வந்திடும் விளைவு!

வந்திடும் விளைவு அறியார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:41-44.

41  அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,

42  உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

43  உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

44  உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

சந்திக்கும் காலம் அறியாமல்,

சட்டென வீழ்ந்தோர் பலருண்டு.

முந்தி நாம் சொல்லியும் ஏற்காமல்,

முடிந்து போனோர் சிலருண்டு.

வந்திடும் விளைவு எண்ணாமல்,

வாழ்ந்தால் என்ன விலையுண்டு?

எந்திரம் என்றெனப் பணியாமல்,

இறை அறிவோம், நலமுண்டு!

ஆமென்.

கல்லாய்ப் போனோர்!

கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:39-40.

39  அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.

40  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்,

கடவுள் பெயரால் வருகின்றார்.

சொல்லால் வடித்த பொய்களுடன்,

செயலில் தீங்கும் தருகின்றார்.

இல்லார் பற்றில் உயர்ந்துள்ளார்;

இதனால் இயேசுவை அடுக்கின்றார்.

பொல்லார் தடுக்க முயன்றாலும்,

புனிதர் நற்பதில் கொடுக்கின்றார்!

ஆமென்.

புகழ்வோம்!

இறைமகன்  போற்றும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:36-38.

36  அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

37  அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,

38  கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஊரை விற்று உலகை வாங்கும்,

உண்மைக் காட்சி காணும் நாம்,

யாரைக் கொண்டு வந்தால் நீங்கும்,

எளியோர் வறுமை என்கின்றோம்.

பாரை மீட்கப் பரனை வாழ்த்தும்,

பண்பாளரைப் பார்க்கும் நாம்,

தாரை ஊதித் தமிழிலழைப்போம்;

தருவார் வாழ்வு, நன்கென்போம்!

ஆமென்.

வேண்டுமென்று கேட்கிறார்!

வேண்டுமென்று கேட்கிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:32-35.

32  அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.

33  கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

34  அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

35  அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

வேண்டுமென்று கேட்கிறார் இயேசு;

விரும்பி உன்னை அளிப்பாயா?

ஆண்டுகொள்ளும் அரசே என்று,

அடிமை போன்று விளிப்பாயா?

கூண்டுகளிலே அடைப்பதுமுண்டு;

குழம்பி நீயும் ஒளிப்பாயா?

மாண்டுபோவார் மடிவது தடுத்து,

மனம் திருந்தக் களிப்பாயா? 

ஆமென்.