மணலும் பாறையாகும்!

மணலும் பாறையாகும்!  
நற்செய்தி: யோவான் 1:40-42.  

மணலை எடுத்துப் பாறையாக்கும்,
மலை வலிவு கொண்டவரே,
தணலை மாற்றி ஆறு வடிக்கும், 
தலை சிறந்த ஆண்டவரே, 
பணமே வாழ்வு என்று ஓடும்,
பாழ் நிலையை உருமாற்றி, 
குணமாய் நிறையும் குன்று ஆக்கும், 
கொல் கதாவில் மாண்டவரே! 
ஆமென்.  
-செல்லையா.  

தங்குமிடம்!

தங்குமிடம் எங்கே?  
நற்செய்தி: யோவான் 1:37-39.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.  
39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.


நல்வழி:  


தங்கு மிடம் இல்லாது, 

தவியாய்த் தவித்தவரை,  

இங்கு வந்து தங்கென்று, 

யாரின்று இடம் கொடுத்தார்? 

தொங்கு துணி நூல்போன்று, 

தொடர்ந்தின்று பின் சென்றால், 

பங்கு ஒன்று இறை தருவார்; 

பரன் வீடே கொடுப்பார்! 


ஆமென்.


-செல்லையா. 

இறைவனின் பலியாடு!

தெய்வத்தின் பலியாடு!  

நற்செய்தி: யோவான் 1:35-36. 

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனையாகும். 
தவறும் ஆன்மா இறந்தும்போகும்.
எவற்றைச் செய்தால் விடிவுண்டாகும்? 
எதுவுமில்லை, வீணாய்ப்போகும்.   
இவற்றைத் திருத்த யாராலாகும்? 
இறைவனால்தான் தண்டனை போகும். 
அவற்றை முடிக்கும் பலி ஆடாகும், 
ஆண்டவராலே இறப்பும் போகும்!  
ஆமென்.  
-செல்லையா. 

புறா!

புறா!

நற்செய்தி: யோவான் 1: 32-34.

நல்வழி:

வராதிருந்தவர் வருவாரென்றால்,

வருகைக்கென்ன அடையாளம்?

புறாயிறங்கி அவர்மேல் அமரும்;

புனிதர் பணியும் தொடங்கிவிடும்.

சுறா விழுங்கல் போல் பலரும்,

சுற்றுங் காட்சி அட்டூழியம்.

இராதவரை நினையாரென்றால்,

இறை அமைதி முடங்கிவிடும்!

ஆமென்.

-செல்லையா.

கற்றபின் ஊழியமா?

எல்லாம் கற்றபின் ஊழியமா? 
நற்செய்தி: யோவான் 1:29-31.  

நல்வழி: 
எல்லாம் கற்றபின் ஊழியமென்றால்,  
எவரும் செயாமல் சாவாரே.  
சொல்லாம் இறையின் சொல் தரக்கேட்டு, 
சொற்படி நடப்பின் ஆவாரே. 
பொல்லாப் புவியைத் திருத்தும் பணியை,  
புனிதர் தருவார் பெறுவீரே.  
இல்லார் என்ற இழிசொல் நீங்கும்;   
இயேசு போதும், வருவீரே!  
ஆமென்.  
-செல்லையா.  

யோவானின் குளியல்!

யோவான் கொடுத்த குளியல்! 
நற்செய்தி: யோவான் 1:24-28.  

நல்வழி: 
வேற்றுச் சமய மக்களைச் சேர்க்க,   
விதித்தக் குளியல் வேறாகும்.  
ஏற்றுக் கொள்ள, யூதரைத் திருப்ப,    
யோவானளித்ததும் வேறாகும். 
மாற்றும் வலிமை, ஆற்றில் உண்டோ?
மனந்திருந்தலே பேறாகும்.  
போற்றும் இயேசு, ஊற்றும் குருதி,  
புகுவீர், பேறிலும் பேறாகும்!  
ஆமென்.  
-செல்லையா.     

காட்டில் கேட்ட ஒலி

காட்டில் கேட்ட ஒலி!  

நற்செய்தி: யோவான் 1:21-23.  

நல்வழி:  


காட்டிலொலிக்கும் கடவுள் வாக்கு,  
வீட்டிலும் வந்து, ஒலிக்கட்டுமே. 
மீட்டியிசைக்கும் அவ்வொலி கேட்டு,  
நாட்டிலும் மக்கள், சொலிக்கட்டுமே.   

ஏட்டினில் பார்த்து, எதையோ சேர்த்து,,  

தீட்டினில் புரள்தல், முடிக்கட்டுமே.  
மாட்டிக்கொண்டோர் நிலையும் கண்டு,  
நீட்டிடும் அன்பு, பிடிக்கட்டுமே! 
ஆமென்.  
-செல்லையா.

மகிழு! மகிழ்வி!

யாவரும் ஒன்றே!
இறைவன் முன்பு யாவரும் ஒன்றே.

இதுவே சட்டம், எண்ணுதல் நன்றே.
பறையர் பார்ப்பர் என்பது போன்றே,
பாரைப் பிரித்தல் நேர்மை அன்றே.
திறமை, அறிவு வளர்த்தல் இன்றே,
தேவையாகும், தேடு, சென்றே.
மறையோன் ஈந்த வாழ்வு என்றே,

மகிழ்வி, மகிழு, தீமை வென்றே!
-செல்லையா.

உன்னை அறிவாய்!

தன்னை அறியும் அறிவு! 

நற்செய்தி: யோவான் 1:19-20. 

முன்னம் நிற்போர் தன்மை அறிந்தோம்;  
முழு வரலாறும் இயல்பும் அறிந்தோம்.  
என்னென்ன குறையோ யாவும் அறிந்தோம்;  
எல்லாம் விற்று வாங்கவும் அறிந்தோம்.  
இன்னில வாழ்வின் பொருளை அறிவோம். 
என் செயவேண்டும் என்றும் அறிவோம்.  
தன்னை அறியும் அறிவை அறிவோம். 
தன் குறையறிந்தால், இறையும் அறிவோம்!  
ஆமென்.
-செல்லையா.