என் தந்தையார்!

என் தந்தையார்! 

குடித்து வந்த மகனைக் கண்டு, 

குடியா தந்தை என் செய்வார்? 

அடித்து வைய விருப்பம் அற்று,

 அனுப்பி விட்டார், தந்தையார்.  

பிடித்து வந்த விவிலியம் கண்டு,   

பின்னாட்களில் என் செய்தார்?  

படித்து, அப்படி வாழு என்று,

பணித்து விட்டார், தந்தையார்! 

-செல்லையா.

அவர் வாக்கு கேளுங்கள்!

அவர் வாக்கு கேளுங்கள்!

நற்செய்தி :  யோவான்  2:5  

நல்வழி:  
மரியாள் கூறும் அறிவுரை கேளும்.
மதித்து நடக்க, நன்மையே நாளும்.  
சரியாய் இயேசு சொற்படி வாழும். 
சாத்தான் அகல, உண்மையே ஆளும்.  
திரியாய் எரியும் அன்னையைப் பாரும்.
தெரியும் நேர்வழி அடையவே வாரும்.  
பரிசாய் மீட்பும் கிடைக்கச் சேரும்.  
பாவியருக்கும், அன்பையே கூறும்! 
ஆமென். 
-செல்லையா. 

வேளை வரும்!

காலம், நேரம் கடவுள் கையில்!  

நற்செய்தி: யோவான் 2:3-4.  

நல்வழி:  

காலம் நேரம், கனியும் என்று,
கடவுளை நம்பிக் காத்திருப்போம். 
ஞாலம் மீளும் அவரால் இன்று;
நடக்கும் காட்சி பார்த்திருப்போம்.  
பாலம் ஒன்று இணைத்தல் போன்று,    
பலரை இறையுள் சேர்த்திடுவோம்.
கோலம் யாவும் அழியும் அன்று; 
கிறித்து வரவில் ஆர்த்திடுவோம்! 
ஆமென்.
-செல்லையா.

இல்லை, நண்பா, இல்லை.

இல்லை, நண்பா, இல்லை! 


‘சர்மா’ என்று பெயரும் இல்லை; 

சாதி காட்டும் உயர்வும் இல்லை. 

‘வர்மா’ என்று தொழவும்  இல்லை.  

வறுமை மட்டும் விழவும் இல்லை. 

‘கர்மா’ என்று அழைக்கவுமில்லை. 

கதைகள் கட்டிப் பிழைக்கவுமில்லை. 

‘தர்மா’ இங்கு குறையின்றி இல்லை.

தந்துவூட்டும் இறையன்றி இல்லை!


-செல்லையா. 

திருமணம்!

திருமணம்! 

நற்செய்தி: யோவான் 2:1-2.   

நல்வழி:  

இருமனம் இணையும் இல்லற வாழ்வு
இனிதாய் இருக்க விரும்புவதால்,   
திருமணம் என்கிற நறுமணச் சடங்கு,  
தேவை என்று உறவழைத்தோம்.  
ஒருமனம் ஒற்றுமை இல்லா வாழ்வு, 
உடையும் வீடாய் விழுவதினால்,   
அருமணம் என்கிற பொறுமை அன்பு, 
இருவரில் பெருக, இறையழைப்போம்!    

ஆமென். 
-செல்லையா.

காட்டுவீர் பெரிது!

காட்டுவீர் பெரிது!

நற்செய்தி: யோவான் 1:49-51.  

நல்வழி: 
கண்டவை சிறிது; 
காட்டுவீர் பெரிது. 
உண்டதும் குறைவு;  
ஊட்டுவீர் நிறைவு. 
மண்டையின் செருக்கு, 
மடமையின் பெருக்கு;
கொண்டயென் திருப்பு, 
கூறும் உம் விருப்பு! 
-ஆமென்.  
-செல்லையா. 

அறிகிற ஆண்டவர்!

அறிகிற ஆண்டவர்! 
நற்செய்தி: யோவான் 1:47-48.  

நல்வழி: 
அத்திச் செடியின் அடியில் அமர்ந்து, 
அடியார் வேண்டல் ஏறேடுத்தார்
புத்திக்கெட்டா அவரது விருப்பை, 
புனிதர் இயேசு அறிந்திட்டார். 
முத்திப் பேறு விரும்பும் எவரும், 
முதற்கண் வேண்டல் ஏறெடுப்பார். 
கத்திக்கூச்சல் போட்டிட வேண்டாம்;
கடவுள் நெஞ்சை அறிகின்றார்!  
ஆமென்.  
-செல்லையா.  

மாற்றாரை மதிப்போம்!

மாற்றாரை மதிப்போம்!
நற்செய்தி: யோவான் 1:45-46.

நல்வழி: 
மாற்றார் மதித்தல் மறந்துவிடின்,  
மதியில்லாமைப் படியேறும்.
தோற்றார் நிலையில் வீட்டாரும், 
துயரமடையக் குடியேறும். 
வேற்றார் வெறுத்தல் துறந்துவிடின்,
விண்ணே நம்மைப் படியேற்றும். 
தூற்றார் வாழும் நன்மைக்குள், 
தூய இறையே குடியேற்றும்!  
ஆமென்.  
-செல்லையா. 

யாரைப் பின்பற்றுகிறோம்?

யாரைப் பின்பற்றுகிறோம்?
நற்செய்தி: யோவான் 1:43-44. 

நல்வழி: 
உள்ளம் நாடும் வழியில்தான், 
ஒவ்வொரு பேரும் நடக்கின்றார். 
வெள்ளம் ஓடும் தாழ்வில்தான், 
விழுந்து எழாது கிடக்கின்றார். 
பள்ளம் மேடும் தெரிந்தால்தான், 
பணையப்படாது கடக்கின்றார். 
கள்ளம் மூடும் கண் திறப்பீர்; 
கடவுள் நம்மை மீட்கின்றார்! 
ஆமென்.  
-செல்லையா.

மணலும் பாறையாகும்!

மணலும் பாறையாகும்!  
நற்செய்தி: யோவான் 1:40-42.  

மணலை எடுத்துப் பாறையாக்கும்,
மலை வலிவு கொண்டவரே,
தணலை மாற்றி ஆறு வடிக்கும், 
தலை சிறந்த ஆண்டவரே, 
பணமே வாழ்வு என்று ஓடும்,
பாழ் நிலையை உருமாற்றி, 
குணமாய் நிறையும் குன்று ஆக்கும், 
கொல் கதாவில் மாண்டவரே! 
ஆமென்.  
-செல்லையா.