உயிர் நீர் தாருமே!

உயிர் நீர் தாருமே!

நற்செய்தி: யோவான் 4:13-14.  

நல்வழி: 


காய் அற்று, கனியற்று, கறங்கிடும் எனது,


கனவு வாழ்க்கை பாருமே.


ஓய்வற்று, உயர்வற்று, உறங்கிடும் மனது,


உயிர்பெற வேட்கை தீருமே.


நோய் அற்று, நோவற்று, பறந்திட எந்தன்,


நெஞ்சுள் உயிர் நீர் தாருமே. 

தேய்வற்று, தீங்கற்று, சிறந்திடும் உந்தன், 

திருவருட் காலடி சேருமே!


ஆமென்.


-செல்லையா.

திருந்துவோமா?

திருந்துவோமா?
பிள்ளை செய்யும் பிழைகள் கண்டு,
பெற்றோர் நெஞ்சம் வருந்தாதோ?
கொள்ளை போகும் மனிதம் கண்டு, 
கொஞ்சும் இறையும்  வருந்தாரோ?
வெள்ளம் போன்று வடியும் முன்பு,
வீணாம் வாழ்வும்  திருந்தாதோ?  
உள்ளம் உணர உண்மை முன்பு, 
ஒவ்வொரு மனிதரும் திருந்தாரோ? 

-செல்லையா.

வாழ்வித்து வாழ்!

வாழ்வித்து வாழ்!
அடுத்தவரை ஆள்வது தான் வாழ்வு என்று,
கெடுத்தவரைக் கீழாக்க உழைப்போரே,
கொடுத்தவராய் வாழ்வித்து வாழ் என்று,
படுத்துறங்கார் கூறுகிறார், தழைப்பீரே!
-செல்லையா.

பெரியவர் எவருண்டு?

பெரியவர் எவருண்டு? 
நற்செய்தி: யோவான் 4:12.

நல்வழி: 


வீட்டில் பெரியோர் சிலருண்டு;

வெளியில் தெரிவோர் எவருண்டு?

நாட்டில் அறிவோர் பலருண்டு;

நன்மை புரிவோர் எவருண்டு?

தீட்டில் கிடப்போர் ஆங்குண்டு.

திருந்தி நடப்போர் எவருண்டு?

ஏட்டில் நடிப்பார் ஈங்குண்டு.

இறை பிடிப்பார் எவருண்டு?

ஆமென்.

-செல்லையா.

எதுவுண்டு?

என்ன உண்டு?
நற்செய்தி: யோவான் 4:10-11.

நல்வழி: 
உண்டு ருசிக்க உணவும் இல்லை; 
உடுத்த மாற்று உடையும் இல்லை.
மொண்டு குடிக்க கலயம் இல்லை.
மொத்தம் பிடிக்கும் கவலையுமில்லை.
கொண்டு திரிய எது தான் உண்டு?
கிறித்து நோக்கிக் கேட்டோர் உண்டு.
தொண்டு, தொண்டு, தொண்டே உண்டு;
தூயோர் கண்டு புரிவதுமுண்டு!
ஆமென்.
-செல்லையா.

இனவெறி!

இனவெறி!
நற்செய்தி: யோவான் 4:7-9.  

நல்வழி:


இங்கும் இந்நிலை இருக்கிறதே.

இணைத்துப் பார்க்க மறுக்கிறதே.

எங்கும் நிறைந்த இனவெறியால்,

இந்திய நாடும் சிறுக்கிறதே.

பொங்கும் பெருமை கொண்டவரே,

புரை வழி காட்சி கண்டவரே,

மங்கும் உம்புகழ் மீட்டெடுக்க,

மனிதராய்ச் சேர்ந்து உண்பீரே!

ஆமென்.

மாற்றாரை மதித்தல்!

மாற்றாரை மதித்தல்!

மாற்றுக் கருத்தைக் கேட்க மறுக்கும்
மமதை என்னில் பிறக்குமெனில்,
தோற்றுப் போகும் நிலைதான் தொடரும்.
தொய்யும் நெஞ்சே புரிந்திடுவாய்.
வேற்றுச் சமய அறிவை வெறுக்கும்
வெறியில் என் வாய் திறக்குமெனில்,
தூற்றுங் கூட்டத்  துயர்தான்  படரும்.
தூய்மை அன்பே தெரிந்திடுவாய்!


-செல்லையா.

விடாய்த்தவர்!

விடாய்த்தவர்!

நற்செய்தி: யோவான் 4:4-6.

நல்வழி:


விண்ணவர் என்றவர் வந்தாலும்,

விடாய்த்தவராய் நீர் தேடுகிறார்.

மன்னவர் என்றவர் தந்தாலும்,

மனிதராய் உணவும் நாடுகிறார்.

என்னவர் செய்கிற அதிசயங்கள்,

எத்தனையோ பல இருந்தாலும்,  

தன்னலத்தில் ஏசு செய்யவில்லை;

தண்ணீர் கேட்டு வாடுகிறார்! 

ஆமென்.

எது தொடர்ந்து வரும்?

எது தொடர்ந்து வரும்? 


எந்தனெண்ணம் நின்றுவிடின்,


இறப்பு என்று பொருளாகும். 

வந்தனமும், நிந்தனையும், 

வரயியலாமல் இருளாகும்.

இந்தநிலையை  எண்ணாமல், 

இங்கு நாமிருப்பின் மருளாகும். 

சொந்தமெனத் தொடர்ந்துவர, 

தேவை, இறை அருளாகும்!


-கெர்சோம் செல்லையா. 

வைர விடுதலை நாள் விழா!

வைர விடுதலை நாள் விழா!


விடுதலையடைந்து வைரம் வந்தும்,

விடியலைத்தானே, தேடுகிறோம்.

குடியரசென்று தலைவர்களிருந்தும்,

குடும்பச்செலவிலே,  வாடுகிறோம்.

படுதலை என்று பல குறை கண்டும்,

பாரதம் செழிக்க, கூடுகிறோம்.

கெடுதலை  ஒழிக்க யாரால் கூடும்? 

கெஞ்சிக் கேட்டு, பாடுகிறோம்!


-செல்லையா.