கல்வி வள்ளல்

அன்று அவர்கள் உடைமை விற்றார்;
அதனால் ஏழையர் கல்வி பெற்றார்.
இன்று நம்மவர் கல்வி விற்றார்;
இதனால் எங்கும் மடமையுற்றார்!
-கெர்சோம்செல்லையா.

R Narumpu Nathan's photo.

தெய்வமும் நாமும்.

தெய்வமும் நாமும்.

மெய்மை தெய்வம் தந்தையே;
மீட்பைத் தருவது மைந்தனே.
பொய்மை களைவது ஆவியே;
புகழும் நானோ பாவியே!
தெய்வம் என்பவர் ஒருவரே,
தெளிவுப் பார்வை தருவரே.
ஐயம் அகன்று நாளுமே,
அன்பில் வாழ்ந்து ஆளுமே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,

எழுபதுகளிலிருந்து சென்னையின் வெயிலையும் மழையையும் பார்த்து, இப்பட்டணத்தில் குடிபுகுந்தவன் நான். இப்போது வந்த மழையும் இறைவனின் கொடையே என்றும் எண்ணுபவன் நான். இழந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்தான். இருப்பினும், இறைவனின் கொடையை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவராய் நாம் செயலற்று இருக்கிறபடியால்தான் இவ்விளைவுகள் என்று நம்புகிறேன். எப்படியிருப்பினும், இது பழைய வரலாறாய் இருக்கட்டும். இந்தப் பெரு மழையும் நமக்கு பட்டறிவைப் புகட்டுகிறது. இனியாவது இறைவனின் கொடையாம் இயற்கையையும், அதன் ஈவுகளையும் இறைவனின் நேர்மையில் சீராய்ப் பயன்படுத்த முயல்வோம். வெள்ளப் பாதைகளைச் சீராக்குவோம். வெளியேறும் நீரைக் குளங்களில் சேர்ப்போம். வேண்டுமளவு குளங்களை ஆழப்படுத்துவோம். விரும்பிப் பார்க்கும் வகையில் அருகே பூங்காக்கள் அமைப்போம். அரசு நிலங்களை அரசுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வைப்போம். அவைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தவறான கொள்கையை விட்டுவிடுவோம். இழந்து நிற்போரின் வலியை உணர்வோம். இயன்றவரை நாமும் உதவியாய் இருப்போம். உதவும் உள்ளங்களை, நெஞ்சார வாழ்த்துவோம். எதுவும் செய்யாவிடின், திட்டுவதை நிறுத்துவோம்! நன்றி, நல்வாழ்த்துகள்.

-கெர்சோம் செல்லையா.

மழை வழி அடைத்தோம்…

மழை வழி அடைத்ததால்…

வாழைப் பழத்தை உரித்துத் தின்று,
வழியில் தோலைப் போடுகின்றோம்.
நாளை அல்ல, இன்றே விழுவோம்,
என்பதை மறந்து ஓடுகின்றோம்.
ஏழை செல்வன் எனப் பார்க்காது,
இறங்கும் மழைவழி அடைத்துவிட்டோம்.
வேளை இதுவே, திருத்திக் கொள்வோம்.
விண்ணின் நேர்வழி நடந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

எளிமையின் ஊழியம்


​எளிமையின் ஊழியம்…

நற்செய்தி மாலை: மாற்கு 6:7-9.
“அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ‘ பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”
நற்செய்தி மலர்:
எளிமையின் ஊழியம் 
இறையின் விருப்பம்;
ஏற்றம் தருவார், 
எண்ணம் திருப்பும்.
தெளிவைப் பெற்றிட 
இயேசுவைப் பாரும்;
தெரிய மறுத்தால், 
தீமைதான் சேரும்!
ஆமென்.

இறைவாக்கினர் போன்றே…

இறைவாக்கினர் போன்றே


இறைவாக்கினர் போன்று….

நற்செய்தி மாலை:மாற்கு 6:4-6.

“இயேசு அவர்களிடம், ‘ சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘ என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.”
நற்செய்தி மலர்:
உரைப்பதும்  கேளார், உணர்வையும் ஆளார்.
உள்ளூர் என்றே ஒதுக்கியும் தள்வார்.
குரைத்திடும் நாயின் நன்றியும் இழப்பார்;
குறைகள் கூறி தாமும் விழுவார்.
சிரைத்திட்ட தலையில் நோவை ஏற்று,
செய்தி கொடுத்த தூதுவர் போன்று,
நரைத்திட்ட நாமும் பழியினைச் சுமப்போம்;
நம்பிக்கையை வழியென அமைப்போம்!
ஆமென்.

பார் முழுதும் புகழ்ந்தாலும்…..


​பார் முழுதும் புகழ்ந்தாலும்….

நற்செய்தி மாலை: மாற்கு 6:1-3.

“அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ‘ இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
பார் முழுதும் புகழ்ந்தாலும்,
பாராட்டி மகிழ்ந்தாலும்,
ஊர் மனிதர் ஏற்பதில்லை;
உண்மையினைப் பார்ப்பதில்லை.
கூர் மழுங்கா பட்டயமாம்
கிறித்தரசன் வாக்காலே, 
ஏர் உழுத நெஞ்சமதில் 
ஏற்பவரோ தோற்பதில்லை!
ஆமென்.

தற்புகழ் வெறுக்குந் தன்மை!

தற்புகழ் வெறுக்குந் தன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 5:40-43.
“அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘ தலித்தா கூம் ‘ என்றார். அதற்கு, ‘ சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். ‘ இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ‘ என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
நற்பணி செய்யும் ஆண்டவரின்,
நயந்த பண்பினைப் பார்ப்போமா?
தற்புகழ் எதுவும் கொள்ளாது,
தடுக்குந் தன்மையைச் சேர்ப்போமா?
பற்பல படங்கள் காட்டும் நாம்,
பணிந்து இறையிடம் கற்போமா?
அற்பராய் நம்மை மாற்றாது,
ஆண்டவர் போல நிற்போமா?
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

பொய்யான வாழ்வினிலே

புகைப்படக் கண்காட்சி.
பொருத்தம் இல்லாத
பிசாசின் அரசாட்சி.
மெய்யான தாழ்மையிலே,
முகநூல் பாவிப்போம்.
மேன்மேலும் உயர்ந்திடுமே
மேலோன் அருளாட்சி!
-கெர்சோம் செல்லையா.

உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!

உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!
——————————————————-

இறையாய் இருப்போன் ஒளிர்கின்றான்;
இருளை எங்கும் ஒழிக்கின்றான்.
நிறைவாய் வெளிச்சம் பகிர்வதற்கு,
நமையும் விளக்காய் அழைக்கின்றான்.
பறையாய் வெடிக்கும் கரிமருந்தால்,
பறவையும் அஞ்சுதல் காண்கின்றான்.
சிறையாய்ப் பிடிக்கும் தீச்செயலைச்
சீக்கிரம் கைவிடக் கேட்கின்றான்!
-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.