அள்ளும் மாசு பிறக்கும் இடம்!
நற்செய்தி மாலை: மாற்கு 7;14-16.
“இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ‘ நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். ( ‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’ ) என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கள்ளும் புகையும் கெடுதல் என்று,
கருத்தாய்ப் பாடல் பாடுகிறோம்.
உள்ளே போகும் உணவிலும் நஞ்சு
உண்டு என்று போடுகிறோம்.
அள்ளும் மாசு பிறக்கும் இடமோ,
அகமென மறந்து ஆடுகிறோம்.
துள்ளும் மனிதர் தூய்மை அடைவார்;
தெய்வ வாக்கைத் தேடுகிறோம்!
ஆமென்.
Category: Uncategorized
பெற்றோர் சொற்படி நடத்தல்
பெற்றோர் விருப்பை மதித்து நடந்தால்….
நற்செய்தி மாலை மாற்கு 7:9-13.
“மேலும் அவர், ‘ உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். ‘ உன் தந்தையையும் தாயையும் மதித்துநட ‘ என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ‘ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘ நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ″ கொர்பான் ″ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று ‘ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
பெற்றோர் சொற்படி பிள்ளை நடந்தால்,
பேரின்பமாகும் அவ்வீடு.
மற்றோர் கண்டு, அதனைத் தொடர்ந்தால்,
மகிழ்ச்சியில் நிறையும் நம் நாடு.
கற்றோர் வடிவில் வாழ்வோர் மறந்தால்,
காண்பார் பின்னர் பெரும்பாடு.
குற்றம் நீங்கும், குடும்பம் மகிழும்;
பெற்றோர் விருப்பை நீ நாடு!
ஆமென்.
கற்பு வேண்டும்!
கற்பு வேண்டும்!
நற்செய்தி மாலை: மாற்கு: 7:5-8.
“ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ‘ உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘ வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘ இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ‘ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
உடலைக் கழுவி கோயில் சென்றால்,
உள்ளில் தூய்மை வந்திடுமோ?
சடலம் கூட கழுவப்படுதே!
சடங்குகள் மீட்பைத் தந்திடுமோ?
மடமை வழியில் நடத்திச் செல்ல,
மனிதன் அல்ல நம் தெய்வம்!
கடமை, வாழ்க்கை, எண்ணம் எதிலும்,
கற்பு வேண்டும், நாம் உய்வோம்!
ஆமென்.
ஆறுதல் இல்லாத் தேர்தல்!
ஆறுதல் இல்லாத் தேர்தல்!
அள்ளி வீசும் காசுகளால்,
ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார்.
கொள்ளையடிக்கும் நோக்கில்தான்,
கூட்டணி என்று சேர்க்கின்றார்.
தள்ள வேண்டும் இவர்களை நாம்,
தன்மானத்தில் ஏற்பவர் யார்?
வெள்ளையடித்தக் கல்லறையை,
வீடாக்கிடுவோர் தோற்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
குளிப்போம்!
குளிப்போம் தெய்வ வாக்கினுள்ளே!
நற்செய்தி மாலை 7:1-4.
“ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.”
நற்செய்தி மலர்:
வெளியின் கறையைக் கழுவுகிறோம்.
வெள்ளப் பெருக்கில் முழுகுகிறோம்.
எளிமை, தாழ்மை, உண்மையென்றால்
இறையை விட்டே நழுவுகிறோம்.
தெளிவைத் தேடும் அன்பர்களே,
தேவை தூய்மை நெஞ்சங்களே.
குளிப்போம் தெய்வ வாக்கினுள்ளே;
குற்றம் மறையும் வாழ்வினிலே!
ஆமென்.
உடையால் நலமா?
உடையால் உடல் நலம்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:53-56:
“அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.”
நற்செய்தி மலர்:
அடடா, இது என்ன அதிசயம்?
ஆண்டவர் உடையால் உடல் நலம்!
மடமை என்று சொன்னோரும்,
மகிழ்ந்து அடைவதைக் கண்பாரும்!
உடைகளால் இல்லை அதிசயம்.
உறுதியாம் பற்றால் இது வரும்.
கொடுப்பவர் கிறித்து, தெளிவுறும்;
கோடி நன்மை, நீர் பெறும்!
ஆமென்.
நம் நாடு, நம் மக்கள்!
நம் நாடு, நம் மக்கள்!
மக்களாட்சி என்ற பெயரில்,
மானம் விற்போர் ஆடுகிறார்.
சக்கையாக ஏழையைப் பிழிந்து
சாறை எடுத்து ஓடுகிறார்!
செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்.
எக்கு போன்று மக்கள் துணிய,
இறையின் அடியார் பாடுகிறார்!
-கெர்சோம் செல்லையா.
அருவிக்கரையே!
அன்று கண்ட அருவிக்கரையே!
பறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்;
படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய்.
வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்;
வட்டாறாய் கோதையுட் புகுந்தாய்!
சிறுவனாக உன்மேல் குதித்தேன்;
சீரிய உந்தன் அழகை மதித்தேன்.
வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க,
விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்!
-கெர்சோம்செல்லையா.
கடனும் கடமையும்!
கடனும் கடமையும்!
கடன் வாங்கும் அறிவில் சிறந்தவர் நாம்;
உடன் தீர்க்கும் வழியை மறந்ததும் நாம்!
படம் பார்த்து மயங்கி தேர்வு செய்தால்,
அடமானம் போகும் தமிழகமாம்!
-கெர்சோம் செல்லையா.
“நகராட்சி, உள்ளாட்சிகளின் கடன், அரசு நிறுவனங்களின் கடன் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தமிழக அரசின் கடனாக நாம் எடுத்துக்கொண்டால், அரசின் மொத்தக் கடன் நிலுவை 2015-16-ல் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும்.
இது தமிழக அரசின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு. பெருகும் இந்தக் கடனை எப்படிக் குறைப்பது, நகர உள்ளாட்சிகளின் கடனை எவ்வாறு சீரமைப்பது, மின்சார நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் கடனை எவ்வாறு குறைப்பது என்று தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்!”-
தமிழ் இந்து தலையங்கம் 05-04-2016.
மீனின் அறிவு!
மீன் பெற்றறிவை நான் பெற்றிருந்தால்,
வான் பெற்றளவில் வையம் மகிழும்.
ஏன் பெற்றோமென அறிந்தோர் நடந்தால்,
நான் பற்றிடுவேன், நாடும் புகழும்!
-கெர்சோம்செல்லையா.