கருத்து வேறுபாட்டால் பிரிதல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:1-4.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, ‘ கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ‘ என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ‘ மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ‘ என்று கேட்டார். அவர்கள், ‘ மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ‘ என்று கூறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கருத்து வேறுபாட்டால் பிரிதல்,
கடவுளின் பிள்ளைக்கு முறைதானோ?
வெறுத்து ஒதுக்கி, விட்டுச் செல்லல்,
விவிலியம் கூறும் மறைதானோ?
ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்தல்,
உண்மைக் கிறித்தவம் தெரியீரோ?
பரத்தமையாலே விழுந்தவர் கோடி,
பண்பின் வாழ்வைத் தெரிவீரோ?
ஆமென்.
Category: Uncategorized
உப்பே!
கரைந்து போகும் உப்பாய்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:49-50.
“ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
நற்செய்தி மலர்:
மறைந்து செல்லும் வேரே,
மரத்தை மண்ணில் நிறுத்தும்.
கரைந்து போகும் உப்பே,
கறியில் சுவையை இருத்தும்.
இரைந்து போடும் கூச்சல்,
எப்படி நிம்மதி கொடுக்கும்?
விரைந்து அறிவாய், அவையே,
விளம்பரப் பொய்கள் கெடுக்கும்!
ஆமென்.
சிறந்த விழி!
சிறந்த விழி, இறையின் மொழி!
நற்செய்தி மாலை: மாற்கு 9:47-48.
” நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
நற்செய்தி மலர்:
இரு கண் கொண்டு பார்த்துத் தவறின்,
எந்தக் கண்ணைக் குறை சொல்வேன்?
ஒரு கண்ணோடு உம்மையடைய,
உதவும் கண்ணாய் எதைக் கொள்வேன்?
மறு கண் வேண்டி உம்மைப் பார்த்தேன்;
மன்னா, உம்மிடம் வழி கேட்டேன்.
சிறு பிழைகூடச் செய்யத் தடுக்கும்,
சிறந்த விழியாம் மொழி கேட்பேன்!
ஆமென்.
எதை அறுப்பேன்?
எதை அறுப்பேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 9:43-46.
“உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.”
நற்செய்தி மலர்:
எந்தக் கையால் தீங்கு செய்தேன்?
எந்தக் காலால் அங்கு சென்றேன்?
இந்தக் கண்களில் எதனால் பார்த்தேன்?
என்று கேட்டால் பதிலோ அறியேன்!
தந்த உறுப்புகள் யாவும் தீங்காய்,
தவறே செய்தால் எதை அறுப்பேன்?
சொந்த நேர்மையில்லை, வெறுத்தேன்;
சொல்லால் கழுவும், தூய்மை பெறுவேன்!
ஆமென்.
விடுதலை
விடுதலை நாள் வாழ்த்து!
விடுதலை விருந்தை யாவரும் ருசிக்க,
விறகாய் எரிந்தோர் மறைந்திட்டார்.
நடுநிலை தவறி, ஒருசிலர் புசிக்க,
நாட்டை விற்போர் நிறைந்திட்டார்.
கெடுதலை உணர்ந்து, கீழோர் உயர,
கடுமையாய் உழைப்போர் குறைந்திட்டார்.
அடுத்தவர் வாழ, அன்பைப் பகிர்ந்தால்,
அப்பெரு நாட்டை முறைப்போர் யார்?
-கெர்சோம் செல்லையா.
வெறுமனே விதைப்பாரோ?
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
நற்செய்தி மாலை: மாற்கு:9:42.
” என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.”
நற்செய்தி மலர்:
ஏழைக் கிறித்தவர் இயலார் என்று
ஏளனமாகவே எண்ணுகிறார்.
கோழைத்தனமென தாழ்மையை நினைத்துக்
கொலையும்கூட பண்ணுகிறார்.
நாளை விளைவது இன்றைய வித்து;
நம்பாதவர் இவர் புதைக்கின்றார்.
வேளை வரும்போதிவரும் அறுப்பார்;
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
ஆமென்.
இரக்கம்
மறக்க வேண்டாம் நன்றிக் கடனாம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:41.
“நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ”
நற்செய்தி மலர்:
இரக்கம் என்பது இறையின் அகமாம்;
இதனால்தானே இருக்கின்றோம் நாம்.
உருக்கம் உள்ளோர் இறையின் மகவாம்.
ஒவ்வோர் இனத்திலும் இருக்கின்றாராம்.
அரக்கர் என்று ஒதுக்குதல் பிழையாம்.
அனைவரும் தெய்வச் சாயல் நிழலாம்.
மறக்க வேண்டாம் நன்றிக் கடனாம்;
மானம் காக்க இதுவே உடையாம்!
ஆமென்.
நட்பு
நட்பின் நாள் வாழ்த்து!
மாற்று சமய மனிதரையும்
மதித்துத் தம்முடன் சேர்ப்போர் யார்?
நேற்று வெறுத்து விட்டதினால்
நிகழ்ந்த பிளவைப் பார்ப்போர் யார்?
காற்று, மழை நீர், நெருப்பாக,
கடவுளின் இணைப்பைக் கோர்ப்போர் யார்?
தூற்றுவோரும் பின்வருவார்;
தூய அன்பை வார்ப்போர் யார்?
-கெர்சோம் செல்லையா.
வேற்றுமைகள் இருந்தாலும்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:38-40.
“அப்பொழுது யோவான் இயேசுவிடம், ‘ போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ‘ என்றார். அதற்கு இயேசு கூறியது: ‘ தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”
நற்செய்தி மலர்:
மாற்று அவையின் கிறித்தவரை,
மதிக்க மறக்கும் கிறித்தவரே,
நேற்று இப்படிப் பிரித்ததினால்,
நிகழ்ந்த தீமையும் அறிவீரே.
தோற்று போகும் அலகையவன்,
தொடுக்கும் அம்பு பிரிவாமே.
வேற்றுமைகள் இருந்தாலும்,
வேண்டும் அன்பு உறவாமே!
ஆமென்.
பிள்ளையைப் பார்த்துப் பயில்வோம்!
பிள்ளையைப் பார்த்து, கற்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:35-37.
“அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ‘ ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ‘ என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ‘ இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பிள்ளை நெஞ்சில் பெருமை இல்லை;
பேச்சு, செயலில் கருமை இல்லை.
கள்ளச் சிரிப்பு என்றும் இல்லை;
கயமையென்று ஒன்றும் இல்லை.
உள்ளம் இதுபோல் நம்மில் இல்லை;
உணராதிருக்க பொம்மை இல்லை.
பள்ளம் விழுந்தோம் எழும்பவில்லை;
பலநாள் படுக்க நாம், குழந்தையுமில்லை!
ஆமென்.