பொத்தானைப் போடத் தெரியாதவர்…..
சட்டை பொத்தானைச்
சரியாகப் போட்டறியார்,
திட்டம் பல தீட்டித்
தீர்ப்பாரோ நம் கேட்டை?
மொட்டை அடிப்பதற்கே
முழுக் கயவர் வருகின்றார்;
கொட்டை விழுங்கியிடம்
கொடுக்காதீர் தமிழ் நாட்டை!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
பொத்தானைப் போடத் தெரியாதவர்…..
சட்டை பொத்தானைச்
சரியாகப் போட்டறியார்,
திட்டம் பல தீட்டித்
தீர்ப்பாரோ நம் கேட்டை?
மொட்டை அடிப்பதற்கே
முழுக் கயவர் வருகின்றார்;
கொட்டை விழுங்கியிடம்
கொடுக்காதீர் தமிழ் நாட்டை!
-கெர்சோம் செல்லையா.
அறுப்பவரை நம்பும் ஆடே!
ஆயனை நம்பா ஆடே.
அறுப்பவன் பின் சென்றாயே!
நேய நற்பாதை அழைத்தும்,
நின் போக்கிலே விழுந்தாயே!
தீயவர் வாயின் விருந்தே,
திரும்பி வா, இல்லை தொலைந்தே
போயவர் எச்சிலைப் பார்த்தே,
பொய்மையை விட்டிடுவாயே!
-கெர்சோம் செல்லையா.
மயிலின் கதை!
ஆழத்தில் அமிழ்ந்தால், நாம் இறப்போம்;
அரை ஒன்றடியில் அவருயிர் போம்!
நீளத்தில் போகுதே மயிலின் கதை;
நேர்மைக்கு வாரீர், பார்த்து இதை!
-கெர்சோம் செல்லையா.
இறையனுப்பிய விளக்கு யோவான்!
இறைவாக்கு: லூக்கா1:76-77.
76. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.
இறைவாழ்வு:
இன்னிலம் சிறக்க இறையருள் வேண்டும்;
இதன் வெளிப்பாடே இறைமகனாகும்.
என்றெமக்குரைக்க தூதன் வேண்டும்;
இயேசுமுன் வந்தது யோவானாகும்.
சென்னிறக் கதிரோன் தோன்றிட வேண்டும்;
சீரிலா உலகின் கொடுமைகள் போகும்.
முன்பிதை விளக்க யோவான் வேண்டும்;
மும்மை இறையின் விளக்கு ஆகும்!
ஆமென்.
என்னோக்கும் இல்லாமல்….
இறைவாக்கு: லூக்கா:1:67-75.
67அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
71உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
72அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
74தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
75தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.
இறைவாழ்வு:
என்னோக்கும் இல்லாமல்,
எத்தனை நாள் தானலைவீர்?
பின்னோக்கிப் போனதனால்,
பேரிடர்களில் விழுந்தீர்.
நன்னோக்கில் நலமடைய,
நாடுங்கள் இறைவனை நீர்.
முன்னோர்க்கு உரைத்தபடி,
முழுமை மீட்படைவீர்!
ஆமென்.
வெறுப்பு, வெறுப்பு!
வெறுப்பை விதையாக்கி,
வீடுகளில் நட்டிட்டோம்.
விளைச்சல் பெருகிடவே,
வீதியிலும் கொட்டிட்டோம்.
பொறுப்பை உணராமல்,
பொல்லாங்கைக் கட்டிட்டோம்;
போதும் பொய்வாழ்க்கை;
புனிதனைத் தொட்டிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
கட்டவிழ்ந்த நாவுகளே!
இறை வாக்கு: லூக்கா 1:64-66.
64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65 அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
இறைவாழ்வு:
கட்டப்பட்ட நாவுகள் எல்லாம்,
கடவுள் அருளால் திறக்கட்டுமே.
முட்டாள்த்தன்மை முற்றிலும் விட்டு,
மும்மை இறையில் பிறக்கட்டுமே.
எட்டுத்திக்கில் எழும்பும் தீதும்,
இல்லா வண்ணம் இறக்கட்டுமே.
கொட்டவேண்டும் அன்பு மழையே;
குவலயம் தழைத்துச் சிறக்கட்டுமே!
ஆமென்.
குடியரசு நாள் வாழ்த்து!
தனி வாழ்வில் நேர்மையாய் இரார்,
பொதுவாழ்வில் நேர்மையைத் தரார்!
இனி இதனை விதியாக்கிடுவார்,
இந்நாட்டின் நன்மை நோக்கிடுவார்!
-கெர்சோம் செல்லையா
நன் தமிழ் நாடு!
சேரர் சோழர் பாண்டியர் நாளில்,
சிறப்பாய் வளர்ந்தது செந்தமிழ்நாடு.
ஈரம் இல்லார் வந்ததன் பின்னர்,
இழிவுபட்டது என் தமிழ்நாடு.
நேரம் இல்லார் தமிழ் பேசாததினால்,
நீங்கள் காண்பது வன் தமிழ்நாடு!
ஆரம் சூடி, உம்மைப் பணிவேன்;
அன்பு நண்பா, நன் தமிழ் நாடு!
-கெர்சோம் செல்லையா.
புழுகவில்லை!
காமராசர் கக்கனைப் பார்த்தும்,
கதர் ஆடைகள் ஒழுகவில்லை;
கழகம் கண்ட பெரியார் முயன்றும்,
கறுப்புச் சட்டைகள் கழுவவில்லை.
ஆமாம், நல்ல கண்ணு இருந்தும்,
அடிமைகள் அவரைத் தழுவவில்லை.
அப்படிப்பட்ட தமிழ் நாட்டிற்கு,
ஆண்டவரே கதி, புழுகவில்லை!
-கெர்சோம் செல்லையா.