Category: Uncategorized
ஓன்று என்று பாரு!
ஓன்று என்று பாரு!
செந்தமிழ் வேறு, எந்தமிழ் வேறு;
சென்னைத் தமிழர் தமிழும் வேறு.
சொந்த ஊரில் மொழிதல் வேறு;
சொன்னால் புரிபவர் இங்கு யாரு?
வந்தவர் உரைக்கும் தமிழ்ச்சொல் வேறு;
வாய்மொழி எழுதின் அதுவும் வேறு.
இந்த நாட்களின் தமிழர் வேறு;
எனினும் ஓன்று, என்று பாரு!
-கெர்சோம் செல்லையா.
நேர்மை உமது தூணாகும்!
நேர்மை உமது தூணாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:12-13.
12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
அரசு வழங்கும் சம்பளம் யாவும்,
ஆண்டவர் அருளும் பேறாகும்.
அதற்கு அடியில் வாங்கும் எதுவும்,
அடித்துச் செல்லும் ஆறாகும்.
உரசி நோக்கி உண்மை தேடின்,
உமக்கு நேர்மை தூணாகும்.
ஊழல் செய்து ஊரை வாங்கின்,
உயரிய வாழ்வும் கூனாகும்!
ஆமென்.
ஏற்ற வேளை
ஏற்ற வேளை இல்லையென்றாலும்,
ஏற்றுக்கொள்ளார் தொல்லையென்றாலும்,
வேற்றுக் கருத்தை நாமும் கேட்போம்.
வெறுப்பை விட்டு, உண்மை ஏற்போம்.
– கெர்சோம் செல்லையா.
ஊண் உடை நல்கும்!
ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:
10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
மானம் மறைக்க உடுப்பவராயினும்,
மதிப்பிற்கென்று எடுப்பவராயினும்,
ஈனப் பிறவியாய் விடுப்பவராயினும்,
ஈருடை சேர்த்து அணிவாருண்டோ?
வானம் வரைக்கும் நம் புகழ் செல்லும்;
வையகத்தாரின் வாய்களும் சொல்லும்;
ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்;
அதுவே அறமெனப் பணிவாருண்டோ?
ஆமென்.
பேயே!
பேயே!
கணினியைக் காணும் கண்ணே,
கழனியைக் காண மறந்தாயே.
உணவினைத் தரும் இக்கையே,
ஓங்குக; இல்லை, இறந்தாயே.
பிணவறை நாற்றம் போன்றே,
பேசுதே மனிதர் வாயே.
பணந்தான் வாழ்க்கை என்றே,
பழகுவோர் நாட்டில் பேயே!
-கெர்சோம் செல்லையா.
கனியற்ற மரம்!
கனியற்ற மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:9.
9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
அடர்ந்து மரங்கள் அழகு தந்த
அருமைத் தோட்டம் கண்டேன்.
தொடர்ந்து அவைகள் புசிக்கத் தந்த,
தூய கனிகளும் உண்டேன்.
படர்ந்து வளர்ந்தும் பயனில்லாத
பாழ் மரமும் பார்த்தேன்.
விடர்ந்து வீணாய்ப் போன அதனை,
வெட்டி எரிக்கச் சேர்த்தேன்!
ஆமென்.
பெற்றோர் நேர்மை
பெற்றோர் நேர்மை பிள்ளையில் உண்டோ?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:8.
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
பெற்றோர் நேர்மையைப் பிள்ளையில் கண்டு,
பெரிதும் மகிழ்ந்த இனமெங்கே?
மற்றோர் வந்து தூற்றிச் செல்லும்,
மானம் கெட்டோர் தானிங்கே!
பற்றால் கிறித்துவை பார்த்துக் கொண்டு,
பண்பில்லாவிடில் பயனெங்கே?
கற்றோர் காதின் அழுக்கினுள்ளே,
கருத்தாய் முழங்குவாய் சங்கே!
ஆமென்.
விரியன் பாம்புக் குட்டிகளே!
விரியன் பாம்புக் குட்டிகளே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:7.
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
கிறித்துவில் வாழ்வு:
எரியும் நெருப்பு பரவுதல் கண்டு,
எல்லா உயிர்களும் ஓடுகையில்,
விரியன் பாம்புக் குட்டிகள்கூட,
வேகாதிருக்க ஓடிற்றே!
அரிதாம் மீட்பை அடைவதற்கென்று,
ஆன்றோர் சான்றோர் நாடுகையில்,
கரியாம் பாவக் கறைகள் கொண்ட,
கயவன் நெஞ்சும் நாடிற்றே!
ஆமென்.
ஒரு வழிச் சாலை!
ஒரு வழிச் சாலை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:3-6.
3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
கிறித்துவில் வாழ்வு:
பள்ளம் எல்லாம் நிரம்பிட வேண்டும்;
பாறைக் குன்றுகள் இறங்கிட வேண்டும்.
முள்ளும் காடும் முறிந்திட வேண்டும்;
முதற்கண் நேர்வழி திறந்திட வேண்டும்.
அள்ளும் மனிதர் அறிந்திட வேண்டும்;
ஆண்டவர் வழியை தெரிந்திட வேண்டும்!
துள்ளும் குழந்தையாய் நடந்திட வேண்டும்;
தூய்மையில் மட்டுமே கடந்திட வேண்டும்.
ஆமென்.