29 | உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. |
Category: Uncategorized
பழிக்குப் பதில் இறைவேண்டல்!
பகை ஒழிக்கும் நன்மை!
பகை ஒழிக்கும் நன்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:27.
27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பகைவரை வெளியே ஒழிப்பதென்றால்,
பலுகிப் பெருகி அவர் வருவார்.
வகையாய் உள்ளில் பகை ஒழித்தால்,
வாழ்வில் அமைதி இறை தருவார்.
புகைபோல் வாழ்க்கை போகுமென்றால்,
புவியில் நிலைக்க என் செய்வார்?
தொகையாய் நன்மை பகைவருக்கும்,
தொடர்ந்து செய்து அவர் உய்வார்!
ஆமென்.
வறியரை நினைப்பீர்!
வறியரை நினைப்பீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:24-26.
24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
நான்கு செல்வர் வளர்ச்சியிலே,
நாடே வளரும் என்போரே,
ஏங்குமெளியர் வாழ்க்கையிலே,
எவைகள் தேவை அறிவீரா?
தூங்குகின்றார் என நினைத்துத்
தூசாய் அவரைப் புறக்கணிப்பின்,
தாங்குமிறையின் திருவாக்கு,
தட்டிக் கேட்கும், தெரிவீரே!
ஆமென்.
வீடு பேற்றைத் தெரிவோம்!
வீடு பேற்றைத் தெரிவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:22-23.
22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
திட்டுவோரைத் திருப்பித் திட்டின்,
தீமை அன்று என்போரே,
வெட்டுவோரை வெட்டிப் போட்டால்,
வெறியும் சரிதான், என்பீரா?
கொட்டும் ஒருவர் சினத்தினாலே,
குடும்பம் தொலையும், புரிவீரா?
விட்டு விட்டுப் பொறுமை கொள்ளும்;
வீடு பேற்றைத் தெரிவீரா?
ஆமென்.
உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
வெறுப்பு என்னும் விதை விதைத்தால்,
விருப்பு என்னும் மரம் வருமோ?
பொறுப்பு இன்றி நாமும் வளர்த்தால்,
பூவும் கனியும் நலம் தருமோ?
மறுப்பு கூறுவர் இல்லை என்றாலும்,
மலிவாய்க் கிடைப்பது வெறுப்பன்றோ?
உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
உள்ளம் கழுவுதல் பொறுப்பன்றோ?
-கெர்சோம் செல்லையா.
கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!
கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:21.
21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
கிறித்துவில் வாழ்வு:
ஒண்ணோ இரண்டோ மூணோ என்றால்,
ஒருவழியாக முடக்கிடுவோம்.
எண்ண முடியா இன்னல்கள் வந்தால்,
எப்படி நாங்கள் அடக்கிடுவோம்?
கண்ணீரில்தான் கழுவியும் குளித்தும்,
காலம் முழுதும் கிடக்கின்றோம்.
விண்ணின் அரசே, விரைந்து வாரும்.
விடியலைத் தேடி நடக்கின்றோம்!
ஆமென்.
அடியேன் விருப்போ, இறையரசு!
அடியேன் விருப்போ, இறையரசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:20.
20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
கிறித்துவில் வாழ்வு:
வலியவர் உயர்ந்தவர் வாழ்விற்கென்று,
வழங்கும் அரசு, குறையரசு.
எளியவர் ஏழையர் உயர்விற்கென்று,
இயங்கும் அரசோ, நிறையரசு.
தெளிவுடன் நானும் தேடிப் பார்த்தேன்;
தென்படவில்லை, முறையரசு.
அளித்திடுவாரென நம்பவுமில்லை;
அடியேன் விருப்போ, இறையரசு!
ஆமென்.
கிறித்துவால் இணைகிறோம்!
கிறித்துவால் இணைகிறோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:17-19.
17 பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
18 அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பார்க்க விரும்பி வந்தவருண்டு;
பரமனின் செயலைப் பார்த்ததுமுண்டு.
தீர்க்க விரும்பி வந்தவருண்டு.
தீரா நோய், வினை தீர்த்ததுமுண்டு.
சேர்க்க விரும்பிச் சேர்ந்தவருண்டு;
செல்வ அருளைச் சேர்த்ததுமுண்டு.
கோர்க்க இயன்றவர் யார் இங்கு உண்டு?
கிறித்துவே இறையுடன் கோர்க்கிறார் இன்று!
ஆமென்.
பன்னிருவரில் ஒருவன்!
பன்னிருவரில் ஒருவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6: 14-16.
14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
கிறித்துவில் வாழ்வு:
இகம் மீட்க இறங்கிவந்த இறைவனவர்
ஈராறில் யூதாசை ஏன் இணைத்தார்?
அகம் பார்த்து முடிவெடுக்கும் அறிவு அவர்,
அடியானாய் அவனை ஏன் அணைத்தார்?
நுகமாகிச் சுமையாக இருக்கும் நாமும்,
நோகடித்தும் உயிரீந்து ஏன் காத்தார்?
நகம்போல விரலை நாம் காப்போம் என்று,
நம்பித்தான் யாவரையும் விட்டுவைத்தார்!
ஆமென்.