வேண்டாம் கொலைவெறி!

அழித்தல் பழித்தல் வேண்டாமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.

54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பழித்திடும் மாந்தர் செயல் கண்டு,
பகைத்திடும் பண்பு எனில் வந்தால், 
அழித்திடும் அவ்வகைப் பண்புகளை;
அன்பில் வளர எனக்கிரங்கும்.
கொழித்திடும் தீயோர் நிலைகண்டு,
கொடுமை செய்ய நானினைந்தால்,
மழித்திடும் பேயின் இருப்பிடத்தை;
மன்னிப்பருளி எனிலிறங்கும்!
ஆமென்.

வழி வந்தழைத்தும்….

வழி வந்தழைத்தும் வராதவர்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:51-53.
51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிறித்துவில் வாழ்வு:
எளியரை உயர்த்தும் எண்ணத்தோடு,
இறைமகன் வந்தும் ஏற்கவில்லை.
வழியறியாமல் வதங்குவாரிடத்து,
வழி வந்தழைத்தும் பார்க்கவில்லை.
தெளிவில் வறுமை இருக்கும்போது,
தெய்வ அருளும் சேர்ப்பதில்லை.
விழி திறப்பவராய் ஆவியர் வருவார்;
விண் வாக்கென்றும் தோற்பதில்லை.
ஆமென்.

வரலாறு!

பழங்கதையல்ல, வரலாறு!


பாட்டியின் பாட்டி யாரெனக் கேட்டால்,

பழங்கதை என்று சொல்வோரே,

போட்டியில் நாளை பேரரின் பேரர்,

பொருந்தா உம் பெயர் சொல்லாரே!

நாட்டினை அறிய நடந்தது அறிவீர்;

நன்மை இதுவெனச் சொல்வாரே.

கேட்டினை நீக்க, ஆய்வுகள் செய்து,

கீழடிப் பெருமை சொல்வீரே.


-கெர்சோம் செல்லையா.

அணைக்கும் அன்பு!

அணைக்கும் அன்பு!                  கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:49-50.

49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு: 
என்னைச் சார்ந்த திருக்கூட்டந்தான் 
இறைவனின் மக்கள் என்றுரைத்தால்,
முன்னும் பின்னும் அறியா மூடன்,
முதலில் நான்தான், அன்பர்களே.
இன்னும் இதுபோல் இறையறிவின்றி,
இயம்பும் யாவையும் கைவிட்டு,
தன்னலந் துறந்த இயேசு போன்று,
தாழ்ந்து அணைப்போம், நண்பர்களே!
ஆமென்.

பிள்ளைபோல் வாழ்!

பிள்ளைபோல் வாழ்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:46-48.

46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பிள்ளை ஒன்றைத் தூக்கி எடுத்து,
பெரியோர் இவரே என்றுரைத்தீர்.
இல்லை இவரில் கள்ளம் செருக்கு;
இதுபோல் வாழென நன்குரைத்தீர்.
வெள்ளை அடித்தக் கல்லறையாக,
வெளியில் மட்டும் காட்டுகின்றேன்.
உள்ளம் கழுவும் உண்மை இறையே,
உம்மிடமே எனை நீட்டுகின்றேன்!
ஆமென்.

அருஞ் செயலின் பொருள்!

அருஞ்செயலும் ஆண்டவர் திட்டமும்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:43-45.

43அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக் குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அருஞ்செயல் கண்டு அதிசயித்தோம்;
ஆண்டவர் திட்டம் அறிந்தோமா?
பெருமிதம் கொண்டு புகழும் நாம்,
பேசும் அவர் சொல் புரிந்தோமா?
ஒருமுறைகூட ஒப்படைப்போம்;
உயிர்வாழ் நோக்கு உணர்வோமா?  
திருப்பணி என்றும் அவர் விருப்பாம்;
தெரிந்து அவருடன் இணைவோமா?
ஆமென்.

அலகையும் அதன் ஆவிகளும்!

அலைக்கழிக்கும் அலகையின் ஆவிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:40-42.
40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

கிறித்துவில் வாழ்வு:
அலகையும் அவன் ஆவிகளும்,
அல்லல் அடுக்கும் வேளைகளில்,
கலங்கிடும் மக்கள் துயர் நீக்க,
கடவுளின் பிள்ளையால் இயலலையே!
உலகமும், அதன் உதவிகளும்,
ஒருங்கிணைந்தும் இது இயலாது.
விலகிடா இறையின் விண்ணருள்தான்
விரட்டும் என்று முயலலையே!
ஆமென்.

பவானி ஆறே!

பார்த்து மகிழ்ந்த பவானி ஆறே,
பக்கம் சரிந்ததால் கேரள நீரே!
ஆர்வமாய்க் கேட்கிறார் தமிழ் நாட்டாரே;
அவரைவிடின் நீ, காட்டாறே!

-கெர்சோம் செல்லையா.

கண்ணீர் துடைப்பார்!

கண்ணீர் துடைப்பார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:37-39.
37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
கிறித்துவில் வாழ்வு:
பிள்ளையின் வலியைக் கண்டு கலங்காப் 
பெற்றோர் உண்டோ நம் நாட்டில்?
தள்ளி விட்டகன்றுத் தவறு செய்தாலும்,
தந்தையர் துடிப்பரே தம் வீட்டில்!
அள்ளிக்கொண்டே, அணைக்கத் தாவும், 
ஆண்டவர் செல்வரோ அவர் பாட்டில்?
கள்வனுக்கருளிய கடவுட் மைந்தன்,
கண்களைத் துடைப்பார் உம் கூட்டில்!
ஆமென்.

வேண்டாம் மழை!

விளையாட்டு பார்க்க மழை வேண்டாம்;
வீட்டில் குடிக்கவோ நீர் வேண்டும்.
தலைகாட்டும் இத்தன்னலந்தான்,
தவறெனப் புரிந்து விடவேண்டும்!
களியாட்டு, கூத்தே போதுமென்றால்,
கஞ்சியும் நீரும் ஏன் வேண்டும்?
பலியாகப் போகும் தமிழ் நாடே,
படுக்கை விட்டு நீ எழவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.