பதவி எதற்காக?

பதவியும் பணியும் எதற்காக?

அரசப் பதவியும் அரசுப் பணியும்,
ஆண்டவர் அருட்கொடை அந்நாளில்.
பிறரது கண்ணீர் புரியாதவர்கள்,
பிசாசின் தூதர்கள் இந்நாளில்.
ஒருமுறையாவது நன்மை செய்தால்,
ஊரே புகழும் இன்னாட்டில்.
மறுமுறையென்று பலமுறை அலைந்தேன்;
மனிதர்கள் இல்லை என் நாட்டில்!

-கெர்சோம் செல்லையா!

இறைவனின் கணக்கில் முதலீடு!

இறைவன் கணக்கில் முதலீடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:5-8.
5 பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
6 என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7 வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவுசெய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.
8 பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவின் வாக்கு:
கண்முன் நிற்கும் சிறியவரை,
காண மறுப்பது பெரியகுறை. 
நண்பர்கள்கூட தவிர்ப்பதுண்டு.
நயந்திட நன்மை அவிழ்ப்பதுண்டு. 
உண்மையின் இறையோ மறுப்பதில்லை;
உதவிக்கு வராமல் இருப்பதில்லை.
எண்ணிப் பார்த்து உதவிடுவோம்;
இறைவன் கணக்கில் முதலிடுவோம்!
ஆமென்.

பெற்றுக்கொண்ட அன்பு!

பெற்றுக் கொண்ட மன்னிப்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:4.

4எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றுக் கொண்ட மன்னிப்பிற்காய், 
பெரிதும் இறையைப் புகழும் நாம்,
மற்றோர் இப்படி மகிழ, புகழ,
மன்னித்தவரைச் சேர்த்தோமா?
ஒற்றை ஒரு வழிப் பாதையல்ல,
உயர்ந்த மன்னிப்பென்னும் நாம்,
கற்றுக் கொண்ட பண்பு அன்பு,
காணும்படியாய்ப் பார்ப்போமா?
ஆமென்.

உணவு தருபவர் யார்?

உணவு தருபவர் யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:3.
3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;

கிறித்துவில் வாழ்வு:
எண்ணில் அடங்கா மக்களுக்கு,
எல்லா நாளும் தவறாது,
உண்ணும் உணவைத் தருபவர் யார்?
ஒரே தந்தை நம்மிறைவன்.
பண்ணும் தொழில்தான் தருகிறது,
படைத்தோரில்லை என்றுரைத்து,
கண்ணீர் வடிப்பினும் தருபவர் யார்?
காசு வாங்கா நல்லிறைவன்!
ஆமென்.

இறைவிருப்பே இறையரசு!

இறைவிருப்பே இறையரசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:2.அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக; 


கிறித்துவில் வாழ்வு:

எங்கள் வாழ்க்கை எதற்காக,

என்னும் கேள்வியின் பதிலாகத்

தங்கள் விருப்பைச் செய்துவரும்,
தந்தையின் மக்களே, கேளுங்கள்.

உங்கள் விருப்பம் உதவாது;

உன்னத ஐயனைப் புகழாது;

இங்கவர் விருப்பைச் செய்வதுதான்,

இறையரசாகும்; வாழுங்கள்!

ஆமென்.

வேண்டுதல் கேளும்!

வேண்டுதல் கேளும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:1.

1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
வேண்டும் தகுதியும் எனக்கில்லை;
வெளியில் கூறவும் மனமில்லை.
மீண்டும் உம்மிடந்தான் கேட்பேன்;
மீட்பின் திட்டந்தான் ஏற்பேன்.
ஆண்டுகள் பற்பல கடந்திடினும்,
அவற்றுள் தடைகள் கிடந்திடினும்,
மாண்டு போமோ இறைப்பற்று?
மன்னன் இயேசுவே எனைப்பற்று!
ஆமென்.

நல்வழி ஒன்றே!

நல் வழி ஒன்றே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:41-42.

41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

பல்வழி உண்டு என்று அலைந்தேன்;

பயனாய் எதுவும் கிட்டவில்லை.

சொல்வழி மறந்து நிலை குலைந்தேன்,

சொத்தும் பொருளும் ஒட்டவில்லை.

அல்வழி சென்று அறம் தொலைத்தேன்;

அதுவும் வாழ்வைக் கட்டவில்லை.

நல்வழி ஒன்றாம், இயேசுவில் மலைத்தேன்;

நடத்தும் அவரன்றித் திட்டமில்லை!

ஆமென்.

மார்த்தாளைப் பழிக்காதீர்!

மார்த்தாளைப் பழிக்காதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா10:40.

40மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
கிறித்துவில் வாழ்வு:
கோலைப் பிடித்த அரசன் முதல் 
குடிநீர் கேட்கும் ஏழைவரை,
வேலைப் பழுவில் குமுறுவது,
வெறுப்பில் அன்று, அறிவீரே.
நூலைப் படிக்கும் நாம் இன்று,
நொடியும் உதவி செய்யாமல்,
வாலைப் பிடித்து ஊர் சுற்றல்,
வழிமுறை அன்று,தெரிவீரே!
ஆமென்.

இயேசுவின் காலடி!

ஆண்டவர் காலடி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:38-39.

38பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
எங்கே சென்றால் அமைதி கிட்டும்,
என்று அலைவார் நாட்டினிலே,
மங்கை மரியின் செயலைப் பாரும்;
மகிழ்ச்சி பெருகும் வீட்டினிலே.
இங்கே இவளது இருப்பிடம் தேடும்;
இயேசு வாழ்க்கை ஏட்டினிலே.
அங்கே ஆண்டவர் காலடி கண்டோம்;
அமைதி பிறக்கும் கூட்டினிலே!
ஆமென்.

இரங்குவோம்!

இரக்கம் என்பது இறையின் பண்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:36-37.

36இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்க மென்னும் இறைவன் பண்பை, 
இன்றைய மனிதர் காட்டலையே.
உரக்க முழங்கும் திரு அவையாரும்,
உதவிட கைகள் நீட்டலையே.
அரக்கு போன்று அணைத்து ஏற்கும்,
அன்பையும் தம்முடன் கூட்டலையே.
பரக்கு பார்க்கும் இரக்கம் அந்நாள்;
பயன் தரார்க்கு மீட்பிலையே!
ஆமென்.